Thursday, September 20, 2007

மழையும் மண்வாசனையும்

மழை பெய்யத் தொடங்கும் பொழுது வரும் மண்வாசனைக்குக் காரணம் என்ன? இதுதான் நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்வி. நாம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு வாசனை அல்லவா மண்வாசம். நம்ம கவிஞர்கள் எல்லாம் ரொம்ப அனுபவிச்சு பாடல்கள் புனைந்த அந்த வாசனை எதனால் எழுகிறது எனப் பார்க்கத்தான் இந்தப் பதிவு.

மண்வாசனைக்கு முக்கியமான காரணம் ஒரு பாக்டீரியாதான். Actinomycetes என்ற வகையைச் சார்ந்த இந்த நுண்ணுயிரிகள் மண் ஈரப்பதமாக வளர்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் நிலமானது காய்ந்து போகும் பொழுது 'ஸ்போர்ஸ்' எனப்படும் விதைகளை வெளியிடுகின்றன. மழை பொழியும் பொழுது இந்த விதைகள் மழை நீரின் வேகத்தால் நிலத்தை விட்டு எழும்பி காற்றில் கலக்கின்றன. இந்த விதைகள் ஒரு விதமான மண் வாசம் அமையப் பெற்றிருக்கின்றன. இந்த வாசம் தரவல்ல ரசாயனத்தின் பெயர் Geosmins. அப்படி காற்றில் கலந்த இந்த ரசாயனங்களை நாம் சுவாசிக்க நம்மால் மண் வாசனையை உணர முடிகின்றது. இதன் காரணமாகத்தான் வெகு நாட்கள் கழித்து மழை பெய்யும் பொழுது இவ்வாசம் அதிகம் இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்யும் பொழுது இவ்வாசனை அதிகம் இருப்பதில்லை. இவ்வகை பாக்டீரியாக்கள் உலகெங்கும் பரவி இருப்பதால் நம்மால் எங்கு மழை பெய்தாலும் இவ்வாசனையை உணர்ந்து கொள்ள முடிகிறது.

இந்த பாக்டீரியாக்கள் தவிர வேறு மண் வாசத்திற்கு வேறு சில காரணிகளும் உள்ளன. பொதுவாகவே மழைநீர், அதுவும் முக்கியமாக நகர்ப்புறங்களில், அமிலத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட மழைநீர் மண்ணில் விழும் பொழுது மண்ணில் கலந்திருக்கும் ரசாயனங்களுடன் கலப்பதால் ஏற்படும் வேதி வினை காரணமாகவும் சில வகை வாசனை வெளிவருகின்றன. இது மண்ணில் இருக்கக்கூடும் கனிமங்கள், மேலே படர்ந்திருக்கும் வாகனப் புகை மூலமாக வந்த பெட்ரோலிய ரசாயனங்கள் என பலவற்றோடு சேரும் பொழுது ஒரு வித நொடி பரவுகிறது. இது முதலில் குறிப்பிட்ட மண் வாசனையை போலன்றி முகர்பவர்களுக்கு அவ்வளவு பிடித்தமாய் இருப்பதில்லை. இவ்வகை நெடியும் முதலில் பெய்யும் மழையின் பொழுதே வருகின்றது. ஏனென்றால் முதல் மழையிலேயே இந்த வேதிவினைகள் நிகழ்ந்து விடுவதால் தொடர்ந்து பெய்யும் மழையில் தொடர்ந்து வேதிவினைகள் நிகழ்வதும் இல்லை. அதனால் அந்நெடியும் எழுவதில்லை.

மூன்றாவதாக ஒரு காரணி சொல்லலாம் என்றால் அது மழை பெய்யும் இடத்தில் வளரும் தாவரங்கள்தான். இத்தாவரங்களில் இருந்து வெளியேறும் நறுமண எண்ணைகள் (பூக்களின் வழியாக, கிளைகள் உடைக்கப்படும் பொழுது என பல வகைகளில் இந்த தாவர எண்ணைகள் காற்றில் கலக்கப்படுகின்றன.) காற்றினில் கலந்து பின் அங்கு இருக்கும் பாறைகள் போன்றவற்றில் சேர்கின்றன. இப்பாறைகள் மீது மழைநீர் படும் பொழுது, இந்த எண்ணெய்கள் அத்தண்ணீரில் கலந்து அதன் மூலமும் இந்நறுமணங்கள் கமழ கூடிய வாய்ப்புகள் வருகின்றன. முதலில் கூறிய நுண்ணுயிரிகள் மூலம் வரும் மணம் போன்று இதுவும் இனிதான மணமாகவே இருக்கும்.

இவை மட்டும்தான் என இல்லாது இது போன்று வேறு காரணிகள் பல இருந்தாலும் பிரதானமாய் இவற்றைக் கூறலாம். இப்படி பல வாசங்களை கலவை இருப்பதால்தான் ஒவ்வொரு இடத்திலும் இந்த வாசனை வேறுபடுகிறது. ஆனால் இந்த காரணங்களினால்தான் காய்ந்த நிலத்தில் விழும் மழையினால் ஏற்படும் வாசம் அதிகமாக இருக்கிறது. மண்வாசனை என நினைக்கும் பொழுதே நம்மால் அந்த வாசத்தை உணர முடிகிறது அல்லவா?

Sunday, September 02, 2007

யானைக்கும் கழுதைக்கும் கல்யாணம்!!

நண்பர் நாகு அவர்களின் கேள்வி இது - "அமெரிக்கக் கட்சிகளின் சின்னங்களான யானை, கழுதை எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டன?" அவரே இந்த சின்னங்கள் அந்த கட்சியின் வேட்பாளர்களுக்கும் அவற்றுக்கும் சம்பந்தமில்லை என்பதையும் சொல்லிட்டாரு.

ரொம்ப சிம்பிளான பதில் என்னன்னா இந்தச் சின்னங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னங்கள் இல்லை! ஒரு தனிமனிதனின் கற்பனைதான் இப்படி ஒரு நாட்டின் இரு பெரும் கட்சியின் சின்னங்களாக இருக்கின்றன எனச் சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை, கிட்டத்தட்ட உண்மை!

ஏன் கிட்டத்தட்ட அப்படின்னு கேட்டீங்கன்னா, இவரு வந்து இந்த கழுதையைப் பிரபலப் படுத்தறதுக்கு முன்னாடி கொஞ்ச நாளைக்கு வேற ஒருத்தர் இந்த கழுதையை உபயோகப்படுத்திட்டாரு. அதனாலதான். சரி, இப்போ ஒண்ணொண்ணா பார்க்கலாம்.



ஜனநாயகக் கழுதை

1828ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக போட்டியிட்டவர் ஆண்ட்ரூ ஜாக்ஸன். இவரை எதிர்த்தவர்கள் இவரை Jackass (ஆண் கழுதை) என அழைக்க, இவரும் விடாமல் அதனைத் தன் அடையாளமாகவே ஆக்கிக்கொண்டு போஸ்டரில் போட்டுக் கொள்ளும் அளவுக்குப் போய் விட்டார். ஆனால் அது அவரின் தனிப்பட்ட அடையாளமாகவே இருந்ததே தவிர கட்சியின் அடையாளமாக ஆகவில்லை.

அந்த பெருமைக்கு உரியவர் அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைபவரான தாமஸ் நாஸ்ட் என்பவர். 1870ஆம் ஆண்டு அவர் வரைந்த ஒரு கேலிச்சித்திரத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களை கழுதையாக உருவகப் படுத்தி இருந்தார். அது படிப்பவர்களின் கவனத்தைக் கவர தொடர்ந்து அவர் ஜனநாயகக் கட்சியை கழுதையாகவே உருவகப்படுத்தத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் இதையே செய்ய, இது அக்கட்சியின் சின்னமாகிவிட்டது.



குடியரசு யானை
குடியரசு யானையைத் தந்தவர் ஜனநாயகக் கழுதையைத் தந்த அதே தாமஸ் நாஸ்ட் என்பதுதான் ஒரு ருசிகரத் தகவல். 1874ஆம் ஆண்டு அவர் வரைந்த "The Third Term Panic" என்ற இந்தக் கேலிச் சித்திரத்தில் அவர் முதன் முதலில் குடியரசுக் கட்சியை யானையாக உருவகப் படுத்தினார். சிங்கத் தோல் போர்த்திய கழுதையை (ஜனநாயகக் கட்சி) கண்டு மற்ற மிருகங்கள் பயந்து ஓடுவது போல் வரைந்திர சித்திரம் அது. அதில் குடியரசுக் கட்சியை யானையாகச் சித்தரித்திருந்தார். கழுதையைப் போலவே இந்த யானையும் மிகுந்த வரவேற்பைப் பெற மற்றவர்களும் குடியரசுக் கட்சியை யானையாகவே உருவகப் படுத்தத் தொடங்கினர்.

குடியரசுக் கட்சியினர், அதிகார பூர்வமாகவே யானையை அவர்களது கட்சிச் சின்னமாகத் தேர்ந்தெடுத்து விட்டனர். ஆனால் இதுவரை ஜனநாயகக் கட்சியினர் கழுதையை அப்படித் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும் அது அவர்களுது சின்னமாகவே உபயோகப்படுத்தப் படுகிறது.

குடியரசுக் கட்சியினர் யானையை கண்ணியம் மிக்க, உறுதியுடைய, புத்திசாலி மிருகமாகக் கொண்டாட, ஜனநாயகக் கட்சியினரோ யானையை பழமை விரும்பி, பகட்டான, எளிதில் தவறு செய்யும் புத்தியற்ற மிருகமாகப் பார்க்கின்றனர். அதே சமயம் அவர்கள் கழுதையை சாதாரணமான, பணிவான, வீரமான, விரும்பத்தக்க மிருகமாகச் சொன்னாலும் குடியரசுக் கட்சியினர் அதை பிடிவாதமிக்க, மடத்தனமான மிருகம் என கேலி செய்கின்றனர்.

வெறும் சின்னத்தை வைத்துப் பார்த்தால் துளசி டீச்சர், பொன்ஸ் என வலையுலகப் பெண்கள் ஓட்டு எல்லாம் குடியரசுக் கட்சியினருக்குத்தான் போல தெரிகிறது!

சில சுட்டிகள்
சுட்டி 1
சுட்டி 2
சுட்டி 3