Monday, October 15, 2007

55. இந்திய பாஸ்போர்ட்டை தொலைத்தவர்களின் கவனத்திற்கு...

டிஸ்கி: தெரியல வலைப்பூவில் உள்ள இந்தப் பதிவுக்கும் இதற்கும் சம்மந்தம் இருப்பதும் இல்லாததும் அவரவர் முடிவுக்கே விட்டுவிடும் அதேவேளையில், பட்டறையில் மாலன் பாஸ்போர்ட் பற்றிச் சொன்னதற்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் கிடையாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்

----------------------------------------------------------------

பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் (வெளிநாட்டிலல்ல,உள்ளூரில்தான்) என்ன செய்யவேண்டும்.. காவல்துறையினர் எப்படிக் கண்டுபிடித்துத் தருவார்கள்? சற்று விளக்கமாகப் பதிலளிக்க முடியுமா? என்று நண்பர் அபுல் கேட்டிருந்தார்.

கேட்டு ரொம்ப நாள் ஆயிற்று ஆனாலும், இதற்கான பதில் இதோ.


தொலைந்து போனால், அதே பாஸ்போர்டையே கண்டுபிடித்துத் தரமாட்டார்கள். புதிய பாஸ்போர்ட் தான் கொடுக்கப்படும்.

-------------
இந்தியாவில் தொலைத்துவிட்டால் என்ன செய்வது:

stolen or lost passports
1. முதலில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். கொடுத்ததன் பயனாய் கிடைக்கும் முதல் தகவல் அறிக்கை (FIR) அவசியம் தேவை.


2. அ) இந்த முதல் தகவல் அறிக்கையின் மூன்று நகல்கள்
ஆ) அன்னெக்ஷர் B
இ) கடவுச்சீட்டு தொலைந்து போக காரணம், இடம், நேரம் போன்றவற்றை விவரிக்கும் கடிதம்
ஈ) தொலைந்த கடவுச்சீட்டிற்கு மாற்றாய் புதிய கடவுச்சீட்டு வழங்குமாறு கடவுச்சீட்டு அலுவலருக்கு வேண்டுகோள் கடிதம்.
உ) தொலைந்து போன கடவுச்சீட்டின் நகல்

இவற்றுடன் தொலைந்த/பழுதடைந்த கடவுச்சீட்டிற்கு மாற்றாய் புதியது வழங்கக்கோரும் விண்ணப்ப படிவத்தையும் (Duplicate Passport in lieu of lost, damaged or stolen passport) முழுமையாக பூர்த்தி செய்து பாஸ்போர்ட் ஆபீஸில் சமர்பிக்க வேண்டும். பழைய பாஸ்போர்டின் நகல்கள் இருந்தால் மாற்று வழங்குவது சற்று விரைவாக நடக்கும். அதோடு இதே விண்ணப்பத்தில் முகவரி மாற்றம், திருமணம், குழந்தைகள் மற்றும் இன்னபிற விவரங்களில் மாற்றங்கள் இருந்தால் அதையும் குறிப்பிடலாம். அதோடு ECNR பழைய பாஸ்போர்டில் கொடுக்கப்பட்டிருந்தால், அதையும் அதற்குண்டான பகுதியில் குறிப்பிடவேண்டும். ECNR உக்கு தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்டவற்றோடு, புதிய கடவுச்சீட்டு வேண்டும்போது சமர்பிக்க வேண்டிய ஆவணங்களையும் சமீபத்திய புகைப்படங்களையும் இணைக்க வேண்டும்.

இவற்றோடு மாற்றுக் கடவுச்சீட்டிற்கான கட்டணத்தையும் (தற்போது ரூ. 2500) செலுத்த வேண்டும்.

மேற்சொன்னவற்றை பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் இருந்தால் நேரடியாகவோ, மாவட்ட தலைநகரங்களில் இருக்கும் குறிப்பிட்ட அரசு அலுவலகங்களிலோ, விரைவுத்தபால் நிலையங்களிலோ சமர்ப்பிக்கலாம்.

தத்கால் முறையில் அவசரமாக மாற்றுக் கடவுச்சீட்டு தேவைப்பட்டால் அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் மட்டுமே நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். (இது முந்தைய விதி. தற்போது மாறியிருப்பதாக சொல்கிறார்கள். இதை confirm செய்ய வேண்டும்)தத்கால் முறையில் விண்ணப்பம் செய்வதற்கு அவசரத் தேவைக்கான எவ்விதமான சான்றும் சமர்பிக்கத் தேவையில்லை.

-------------------------
வெளிநாட்டில் தொலைந்துவிட்டால் என்ன செய்வது?
மாதிரிக்காக இங்கே செல்லவும்.



-------------------------
சேதமடைந்த (damaged) கடவுச்சீட்டுகளுக்கு காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை தேவையில்லை (obviously! :)). தற்போதைய கடவுச்சீட்டின் நகலுடன் அசலும் சமர்ப்பிக்க படவேண்டும். அதோடு Duplicate Passport in lieu of lost, damaged or stolen passport படிவத்தை பூர்த்தி செய்து புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
-------------------------
மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லவும்.

Monday, October 08, 2007

மின்னலும் இடியும் சத்தமும்

நாகுவின் கேள்வி:



மின்னலைப் பார்த்ததிலிருந்து இடி சத்தம் கேட்கும்வரை இருக்கும் இடைவெளியை வைத்து எவ்வளவு தூரத்தில் இடி விழுந்தது என்று தோராயமாகக் கணிக்கிறார்கள் - ஐந்த(சரியாக நினைவில்லை) எண்ணினால் ஒரு மைல் தள்ளி, 10 எண்ணினால் இரண்டு மைல் தள்ளி.
ஒளி/ஒலி வேக வித்தியாசத்தினால் - சரியான விளக்கம்(சரியான எண்ணிக்கை) தரவும்.

பதில்: மின்னல் மனிதகுலத்துக்கு பலகாலமாகவே ஆச்சரியம் தந்து வந்த ஒரு சமாச்சாரம். மேகத்தில் இருக்கும் ஐஸ் கட்டிகளில் உள்ள ஸ்டேட்டிக் மின்சாரம் ஒன்றோடு ஒன்று உராய்வதால் மின்னல் உருவாகிறது என்று சுலபமாகச் சொல்லிவிட்டாலும், எங்கே, எப்போது உருவாகின்றது என்பதை வைத்து 15 வகை மின்னல்களை வகைப்படுத்தி இருக்கிறார்கள் இங்கே!

தோராயமாக 40 ஆம்பியர் மின்னோட்டத்துடனும், 500 மெகாஜூல் சக்தியுடனும் இருந்தாலும், சமயங்களில் 120 ஆம்பியர் வரை செல்லக்கூடியது. காட்டெருமை மாதிரி - எப்ப பாயும் எப்ப மேயும்னு சொல்ல முடியாது. மரக்கட்டிடம் எரியும் என்று பார்த்தால் பெரிய சேதம் எதுவும் இல்லாமல் விட்டுவிட்டும் போகும், இரும்புக்கத்தியை உருக்கி வழிந்தோடவும் விடும். 28000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் வருமாம்.

மின்னலின் சத்தம்தான் இடி என்றாலும், இடிச்சத்தம் மின்னலைப்பார்த்தவுடன் வருவதில்லை. காரணம் மிகச்சுலபமானது. ஒலி செல்லும் வேகத்துக்கும் ஒளி செல்லும் வேகத்துக்கும் உள்ள வித்தியாசம்தான். ஒளியின் வேகம் ஏறத்தாழ ஒரு விநாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர்கள்! ஒலியோ 21டிகிரி வெப்பத்தில் காற்றில்லாதபோது ஒரு செகண்டுக்கு 344 மீட்டர் என்ற அதிகபட்ச வேகத்தை எட்டும். காற்றிருந்தாலோ, தடைகள் இருந்தாலோ, வெப்பம் அதிகமாகவோ குறைவாகவோ இருந்தாலோ இந்த வேகம் மாறுபடும்.

எனவே, மின்னலின் ஒளிக்கும் ஒலிக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்து எவ்வளவு தூரத்தில் விழுந்தது என்று கண்டுபிடிப்பது அவ்வளவு துல்லியமான முறை அல்ல.

இருந்தாலும் ஒரு தோராயத்துக்கு, வித்தியாசத்தை வைத்து தூரம் கண்டுபிடிக்க முடியும்.

கிழே உள்ள ப்ளாஷைப் பாருங்கள். இதில் ஒளி ஒலி வித்தியாசத்தை வைத்து எவ்வள்வு தூரத்துக்கு எத்தனை செகண்டு வித்தியாசம் வரும் என்பதை அறியலாம். (330 மீட்டர் விநாடிக்கு என்ற ஒலிவேகம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது).



Monday, October 01, 2007

ஒரு பந்தில் எத்தனை ரன்?

நம்ம பசங்க 20-20 உலகக்கோப்பையை ஜெயிச்சுக்கிட்டு வந்துட்டாங்க. அவங்க பின்னாடியே ஆஸ்திரேலியா வீரர்கள் வந்தாச்சு. இப்படி சூடா கிரிக்கெட் ஜுரம் அடிக்கும் பொழுது நாம கிரிக்கெட் பத்தின ஒரு கேள்விக்கு பதில் சொல்லலாமா?

பொதுவா ஒரு பந்தில் அடிக்கக் கூடிய அதிகபட்ச ஓட்டங்கள் என்ன அப்படின்னு கேட்டா ஆறு ஓட்டங்கள் என்றுதான் நாம் சொல்லுவோம். ஆனா அவ்வளவுதான் அடிக்க முடியுமா? அதுக்கும் மேல் அடித்தது உண்டா என பார்ப்போமா?

போன வருடம் இங்கிலாந்தின் ஒரு ஆட்டத்தில் கெவின் பியட்டர்ஸன் ஒரு பந்தில் ஏழு ஓட்டங்கள் குடுத்த பெருமையைப் பெற்றாராம். ஒரு நோ பாலில் அப்பந்தினை எதிர்கொண்ட வீரர் ஆறு அடித்ததால் அப்பந்தில் ஏழு ஓட்டங்கள் எடுக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கும் மேல் அடிக்க முடியுமா?

அடிக்க முடியும் என்ன, அடித்து இருக்கிறார்கள். அதுவும் ஒரு முறை அல்ல மூன்று முறை. எவ்வளவு ஓட்டங்கள் தெரியுமா? எட்டு ஓட்டங்கள். எப்படி என்று பார்க்கலாமா?

1928-29ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடந்த டெஸ்ட் பந்தயம் ஒன்றில் இங்கிலாந்து அணியினைச் சேர்ந்த பேட்ஸி ஹெண்ட்ரன் என்பவர் பந்தினை அடித்துவிட்டு நான்கு ஓட்டங்கள் ஓடியே எடுத்தார். அப்பொழுது அப்பந்தினைத் தடுத்த ஆஸ்திரேலிய வீரர் பந்தினை விக்கெட் நோக்கி எறிய அது நேராக மைதானத்தின் எதிர் பகுதி எல்லைக் கோட்டினை தாண்டிச் சென்றது. ஆக பேட்ஸி பெற்றது எட்டு ஓட்டங்கள். ஒரு கொசுறு செய்தி, இந்த டெஸ்ட் போட்டியில்தான் டான் பிராட்மேன் அறிமுகமானார். (படத்தில் வலப்புறத்தில் இருப்பவர்தான் பேட்ஸி.)

இதன் பிறகு 1980 - 81ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கும் நியூஸிலாந்துக்கும் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இதே முறையில் நியூஸிலாந்தின் ஜான் ரைட் (நம்ம அணியின் பயிற்சியாளராக இருந்தாரே அவரேதான்) இதே முறையில் ஒரு பந்தில் எட்டு ஓட்டங்கள் பெற்றார். இவர் அடித்த பந்தினை பீல்டர்கள் எடுப்பதற்குள் நான்கு ஓட்டங்கள் ஓடி எடுத்து விட்டார். பீல்டர் எறிந்த பந்தினை பிடித்த ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் ராட் மார்ஷ் அதனை விக்கெட் நோக்கி எறிய அது விக்கெட்டில் படாமல் எல்லைக் கோட்டினைத் தாண்டியதால் நான்கு ஓட்டங்கள் கூடுதலாகக் கிடைத்தது. இந்த இரு சம்பவங்களிலும் எட்டு ஆட்டங்கள் கொடுத்த அணியாக ஆஸ்திரேலியாவே இருந்தது ஆச்சரியம்தான் இல்லையா!

இது நடந்த மூன்றாவது சம்பவம் 2004-05ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நடந்த டெஸ்ட் போட்டியின் பொழுது நடந்தது. மேற்கிந்திய தீவுகளின் ப்ரையன் லாரா பந்தை அடித்துவிட்டு மூன்று ரன்கள் ஓடி எடுத்தார். அப்பொழுது பந்தினைத் தடுத்த தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்கீப்பர் மார்க் பவுச்சர் அப்பந்தினை எறியும் பொழுது அது தரையில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டில் பட்டது. அதனால் ஐந்து அதிக ஓட்டங்கள் அளிக்கப்பட்டன. இப்படியாக ஒரே பந்தில் எட்டு ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. முன்பெல்லாம் இந்த ஐந்து ஓட்டங்கள் பேட்ஸ்மனின் எண்ணிக்கையில்தான் சேர்க்கப்பட்டன. ஆனால் இந்நிகழ்ச்சிக்கு முன் செய்யப்பட்டிருந்த விதிமுறை மாற்றத்தால் இது உபரி ஓட்டங்களாக கணக்கில் வைக்கப்பட்டது. இந்த விதிமுறை மாற்றத்தை ப்ரையன் லாரா சபித்து இருப்பார். காரணம் அந்த இன்னிங்க்ஸில் அவர் அவுட் ஆனது 196 ஆட்டங்களுக்கு!!

கிரிக்கின்போ தளத்தில் வாராவாரம் இது போன்ற சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் தரப்படுகின்றது. நம் கவனத்தை ஈர்க்கும் சில பதில்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு இங்கு வழங்கப்படும்.