Thursday, November 09, 2006

பெண்களே! நீங்க ப்ளஸ்ஸா? மைனஸா? -2

இந்த பதிவை எழுதியவர் கீதா சாம்பசிவம் அவர்கள். இந்த கட்டுரையின் முதல் பகுதியை படிக்க இதோ சுட்டி.


"குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்."

யாருக்குத் தான் ஆசை இருக்காது? எல்லாருக்கும் குழந்தை தானே வேணும்?

திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் எல்லாரும் பார்க்கிறார்கள். சில இடங்களில் காதல் கல்யாணம் என்றால் கூட ஜாதகம் பார்க்கப் படுகிறது. முன்னேயோ அல்லது பின்னேயோ. பொதுவாகப் பத்துப் பொருத்தங்களும், அதில் 7 வரை இருந்தால் போதும் என்றும் சொல்வதுண்டு. இப்போது புதிதாக ரத்தப் பொருத்தம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது புதிது போல் தோன்றினாலும் காலம் காலமாக இருந்து வருவதுதான். இந்த ரத்தப் பொருத்தத்தைப் பற்றித் திருமூலர் கூடத் தன் திருமந்திரத்தில் எழுதி இருப்பதாய் "டாக்டர் ஜெயம் கண்ணன்" (கர்ப்ப ரட்சாம்பிகா மருத்துவமனை நடத்தி வருகிறார்.) என்ற பிரசித்தி பெற்ற மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அநேகமாய் எல்லாருடைய ரத்த வகையும், A, B, O என்ற வகையைச் சேர்ந்திருந்தாலும் அதில் + அல்லது - உண்டு. இந்த + குறிப்பது Rh Positive. - குறிப்பது Rh Negative. இந்த நெகட்டிவ் வகை ரத்தம் பெரும்பாலும் பெண்களுக்குத் தான் அதிக அளவில் இருக்கிறது.

திருமணம் செய்து கொள்ளும் கணவன், மனைவி இருவருக்குமே பாசிட்டிவ் வகை ரத்தமாகவோ அல்லது நெகட்டிவ் வகை ரத்தமாகவோ இருந்தால் எந்த விதப் பிரச்னையும் இல்லை. பிரச்னை ஆரம்பிப்பது பெண்ணின் நெகட்டிவ் வகை ரத்தத்தினால் தான். ஆணுக்குப் பாசிட்டிவ் ரத்தவகையாகவும் பெண்ணுக்கு நெகட்டிவ் ரத்தவகையாகவும் இருந்தால் தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. இதிலும் குழந்தைக்கு நெகட்டிவ் என்றாலும் பிரச்னை கிடையாது. அப்படி இல்லாமல் குழந்தை பாசிட்டிவ் வகை ரத்தமாக இருந்து விட்டால் கொஞ்சம் பிரச்னை தான். அதிலும் முதல் குழந்தைக்கு அதிகம் கஷ்டம் இருக்காது. ஓரளவு காப்பாற்றலாம். இரண்டாவது குழந்தைக்குப் பிரச்னை தான்.

சிலருக்கு முதல் குழந்தைக்கே பிரச்னை வருவதும் உண்டு.பெண் முதல் முறை கருவுற்றுக் குழந்தை உண்டானதும் முதல் மூன்று மாதங்களுக்குள் சோதனை செய்தால் பாசிட்டிவ் வகை ரத்தமா அல்லது நெகட்டிவ் வகை ரத்தமா என்று கண்டு பிடிக்கலாம். ஆனால் இந்த அளவு முன்னேற்றம் சமீப காலத்தில் தான் அதிக அளவு இருக்கிறது. இது மாதிரி கண்டுபிடிக்காமல் முதல் குழந்தை பெறும் அல்லது பெற்ற பெண்கள் இரண்டாவது குழந்தைப் பிறப்பின் போது குழந்தையைக் காப்பாற்றப்பிரத்தனப் படவேண்டும்.

ஏன் என்றால் முதல் பிரசவத்தின்போது கருவில் உள்ள குழந்தையின் பாசிட்டிவ் வகை ரத்த அணுக்கள் தாயின் உடலில் சேருகிறது. அப்போது தாயின் உடல் அந்தப் புதுவகை விருந்தாளியை ஏற்க முடியாமல் ஒரு விதமான அணுக்களை உற்பத்தி செய்யும். இதை anti rhesus antibodies என்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு (Rh Negative ) sensitization என்று சொல்கிறார்கள். ஒரு முறை இந்த நிகழ்வு ஏற்பட ஆரம்பித்தபின்னால் தாயின் உடலில் வாழ்நாள் பூரா இந்த நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இரண்டாவது குழந்தை பிறப்பின்போது இந்தக் குழந்தையும் பாசிட்டிவ் வகை ரத்த குரூப் என்றால் தாயின் உடலில் ஏற்கெனவே உள்ள ரத்த அணுக்கள் குழந்தையின் உடலில் புகுந்து அதனுடைய fetel blood cells -ஐ அழிக்கிறது. இதன் தாக்கத்தினால் குழந்தைக்கு Rh disease வருகிறது. இந்த நோய் குழந்தைக்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம், ரத்தச் சோகை எனப்படும் அனீமியா, மஞ்சள் காமாலை, உடலில் நீர் சேர்ந்து உடல் வீங்கிக் காட்சி அளிப்பது, சிலசமயம் நோயின் வீரியம் தாங்காமல் குழந்தையே இறந்து போவது என்று எது வேண்டுமானாலும் நடக்கும். தாயைப் பார்த்தால் ஆரோக்கியமாய் இருப்பது போல்தான் தோன்றும். முதல் பிரசவம் தாக்குப் பிடிக்கும்.

ஏனெனில் அநேகமாய் அம்மாவிற்கு இந்த sensitizationஆவதற்கு முன்னாலேயே குழந்தை பிறந்திருக்கும். இது எல்லாம் sensitization ஆவதற்கு முன்னால் உள்ளது. அதற்குப் பிறகு தாய்க்கு ஊசி போட்டு அடுத்த பிரசவத்திற்கு முன் ஜாக்கிரதையாய் இருக்கலாம். அபூர்வமாய்ச் சில கேஸ்களில் முதல் பிரசவத்திலேயே கர்ப்ப காலத்தில் இந்த sensitization ஏற்படும். இந்த நிகழ்வு ஏற்படுகிறதா என்று எப்படி அறிவது? தற்சமயம் அதை முன்னாலேயே கண்டறிந்து trimester என்று சொல்லப் படும் நேரத்திலேயே சிகிச்சை தொடங்குகிறார்கள். இதற்கான சிகிச்சை என்ன என்றால் தாய்க்கு trimester period-லேயே ஒரு ஊசி போடுவதுதான். மிகவும் விலை உயர்ந்த இந்த ஊசி Rh immune globulin (RhIG) என்று அழைக்கப் படுகிறது. முதல் பிரசவத்தின் போது கண்டுபிடிக்கப் படாமல் குழந்தை பெற்ற பின் கண்டு பிடிக்கப் படும் பெண்களுக்கு அவர்கள் முதல் பிரசவம் முடிந்த 72 மணி நேரத்துக்குள் இந்த ஊசி போடப் பட வேண்டும். அதற்கு அப்புறம் என்றால் பயன் இருக்காது. முதல் பிரசவத்தில் ஊசி போட்டு விட்டால் இரண்டாவது பிரசவத்தில் கஷ்டம் இருக்காது. முதல் பிரசவத்தில் இது எதுவும் செய்யாமல் இரண்டாவது பிரசவம் ஆகும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிகம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுச் சில சமயம் ரத்தத்தையே மாற்ற வேண்டி இருக்கும். அநேகமாய் photo therapy என்னும் blue light-ல் குழந்தையை வைப்பது போன்றவை நடக்கும். இரண்டு பிரசவத்திற்கு அப்புறம் அம்மாவிற்கு இந்த ஊசி போட்டு எந்தவிதமான நன்மையும் இல்லை. முதல் பிரசவத்தில் இருந்தே அம்மாவின் உடல் நிலைமை sensitization ஆகி இருக்கும். அப்படி இல்லாமல் முதல் குழந்தையிலேயே கண்டறிந்து விட்டால் மேலே சொன்னமாதிரி முதல் 5 மாதங்களுக்குள் ஒரு ஊசி போட வேண்டும். இதற்குத் தாயின் ரத்தத்தையும், கருவில் இருக்கும் குழந்தையின் ரத்தத்தையும் சோதனை செய்வார்கள்.

குழந்தைRh + தாய்Rh - என்றால் உடனேயே ஒரு ஊசி போட்டு விட்டு 28 வாரங்களுக்குப் பின் மறு முறை சோதனை செய்து சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பிரசவத்தை சுகப்பிரசவம் அல்லாது சிசேரியன் வைத்துக் கொண்டு முன்னாலேயே குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுவார்கள். இப்போதும் தாயின் உடல் நிலைக்கும், குழந்தையின் உடல் நிலைக்கும் தகுந்தவாறு மருத்துவம் செய்யப் படும். தாய்க்கு இப்போதும் ஒரு முறை ஊசி போடப் படும். இது எல்லாம் முதல் குழந்தையிலேயே கண்டறிந்தால் செய்யவேண்டியது. இது அந்தப் பெண்ணிற்குக் குறைப்பிரசவம் நடந்தாலோ, ectopic pregnancy என்றாலோ, Rh+ Blood transfusion நடந்திருந்தாலோ கூடப் போட வேண்டியது கட்டாயம். இந்த ஊசி போட்டதும் இது அம்மாவின் உடலில் Rh+ fetal cells ஐ அழிப்பதில் இருந்து தடுக்கிறது. இந்த பாசிட்டிவ் ரத்தவகைக்கு எதிரான ஆண்டிபாடீஸ் வேலை செய்யும் முன்னேயே அழிக்கத் தொடங்கி விடும். சில பெண்களுக்கு முன்னாலேயே இந்த sensitization பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கும்.

ரத்தம் ஏற்றப்பட்டதால் கூட ஏற்படும். அப்போது இவர்களுக்கு முதல் பிரசவம் என்றால் கூட மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கருவுற்றதுமே குழந்தை, அம்மாவின் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்துத் தேவைப்பட்டால் குழந்தைக்குக் கருவிலேயே 18-வது வாரம் ரத்தத்தை மாற்றிச் சுத்தி செய்து குழந்தையை வெளி உலகிற்கு நல்லபடி கொண்டு வரத் தயார் செய்யப்படுகிறது. இதற்கு அப்புறம் 28-வது வாரம் மறுமுறை சோதனை செய்து அதற்குத் தகுந்தாற்போல் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்துக் காப்பாற்றுவார்கள். இப்போதும் தாய்க்கு மறுபடி இந்த ஊசி குழந்தை பெற்ற 72 மணி நேரத்துக்குள் போட வேண்டும். இது அடுத்த பிரசவம் குழந்தையைப் பாதிக்காமல் பெற்று எடுக்க உதவுகிறது. இது எல்லாம் மருத்துவ உலகின் முன்னேற்றங்கள்.

DISCLAIMER:
நான் எழுதி இருப்பது எல்லாம் கூகிள் ஆண்டவர் தயவிலும், திருமதி சந்திரவதனா அவர்கள் தன்னுடைய வலைப்பதிவில் எழுதி இருப்பதையும் வைத்துத் தான். திருமதி ஜெயம் கண்ணன் சொல்லி இருப்பது புத்தகங்களில் படித்தும், தொலைக்காட்சியில் கேட்டும் இருக்கிறேன். தகுந்த ஆதாரம் தற்சமயம் தேடியும் கிடைக்கவில்லை. ஆதாரம் கிடைத்ததும் வெளி இடுகிறேன். பொதுவாக Rh Negative Group-காரர்கள் மற்றவர்களில் இருந்து வேறுபட்டு இருப்பார்கள் என்பதையும் கூகிளில் தேடல் போது படித்தேன். அது பற்றி நிச்சயமாய் எதுவும் தெரியவில்லை. ஆனால் இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும் ஒருவருக்கொருவர் மனதுக்குப் பிடித்து விட்டால் இந்தச் சின்னக் குறைக்காகப் பெண்ணை வேண்டாம் என்று சொல்ல வேண்டாம். முன்னாலேயே ரத்தவகையைத் தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் அதற்குத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறித்த காலத்தில் எடுத்துக் கொண்டு நல்ல ஆரோக்கியமான புத்திசாலிக் குழந்தைகளைப் பெற்று இந்தியாவை வளப்படுத்துங்கள்.

இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த விக்கி பசங்களுக்கு என் நன்றி. ஒருவேளை அவர்கள் எதிர்பார்த்த மாதிரி விரிவான தகவல் நான் தர முடியாமல் போய் இருக்கலாம். அது எல்லாம் ஒரு டாக்டர் சொல்வது தான் முறை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

விக்கின பசங்களுக்காக விக்காமல் கீதா சாம்பசிவம்.

10 comments:

said...

கீதாக்கா,

எங்கள் வேண்டுகோளை மதித்து இந்த கட்டுரை தந்ததுக்கு, மீண்டும் எங்கள் நன்றிகள்.

said...

எல்லோராலும் அறியப்படாத, ஆனால் அவசியம் தெரிந்து இருக்கவேண்டிய தகவல்கள்..

நிறைய 'டெக்னிக்கல்' விஷயம் போல் தோன்றினாலும், இதைவிட எளிமையாக சொல்வது கண்டிப்பாக சிரமம்..

இதைப் படிப்பவர்கள் தங்கள் நண்பர்களுக்குச் சொல்லி இதைப் படிக்கச் செய்து இதுபற்றிய விழிப்புணர்வை வளர்க்க வேண்டும்..

மற்றவர்களுடன் பேசும்போதும் இந்த தகவல்களை பரிமாற்றம் செய்வதும் இன்னொரு நல்ல காரியமாக நான் நினைக்கிறேன்..

இவ்வளவு சிக்கலான ஒரு விஷயத்தை பதிவாக்கிய கீதா மேடத்துக்கு எனது மனமார்ந்த நன்றி..

மேலும் ராமனாதன் சார், கொத்ஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள்..

'விக்கி பசங்க'- இதே போல் இன்னும் பல ஆக்கபூர்வமான படைப்புகளை தந்து வலைப்பதிவுக்கு ஒரு முன்மாதிரியாக திகழவேண்டும்..

said...

இந்த பதிவுக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்தது யாருங்கோ?

said...

நண்பர் ரவி தனி மடலில் அனுப்பியது

அருமையான செய்தி. விக்கி பசங்களுக்கு விக்காமல் சொன்ன மேடத்திற்கு நன்றி.

ஜாதம் பார்ப்பதோடு (பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை) பிளட் குரூப்பும் பார்ப்பது அவசியம்.

நன்றி.

said...

நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொண்டீர்கள். எல்லாருக்கும் நிச்சயம் தெரிய வேண்டிய தகவல்கள்.

said...

அருமையான தொடர். மிக்க நன்றி கீதா.

said...

உபயோகமான பதிவு

said...

நன்றி சேதுக்கரசியக்கா.

said...

"கொத்ஸ்", யக்கால்லாம் வேணாம் :(

சரி இதுக்கும் செவ்வாய் தோஷத்துக்கும் ஒரு லிங்க் இருக்குன்னு ரொம்ப வருசம் முன்னாடி யாரோ எழுதி எதுலயோ படிச்சிருக்கேன்.. செவ்வாய் தோஷம் இருக்கவங்க செவ்வாய் தோஷம் இருக்கவங்களத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்வாங்களே.. அதுக்கு ஒரு காரணம், செவ்வாய் தோஷம் இருக்கவங்களுக்கு Rh நெகடிவா இருக்கும், அதனால தான் அறிவியல் பூர்வமான செய்தியை நம்மாளுங்க செவ்வாய் தோஷம்னு ஜாதக பூர்வமா ரொம்ப எளிமையா எல்லார் மனசுலயும் பதியற மாதிரி சொல்லிப்புட்டாங்கனு இருந்துச்சு அந்தக் கட்டுரைல... அது உண்மையோ என்னவோ.. உதார் விசயமா இருக்கலாம்.. any ஐடியா?

said...

செவ்வாய் தோஷமுன்னா Rh -veஆ? நல்லா இருக்கே. இது பத்தி யாராவது கொஞ்சம் விளக்கமா வந்து சொன்னா நல்லா இருக்குமே. யாரையாவது தேடிப் பிடிக்க வேண்டியதுதான்.