Monday, October 30, 2006

சட்டை மடிப்பது எப்படி !

சுலபமாக இரண்டு செகண்டில் சட்டை மடிப்பது எப்படி !


ஞாயிறு போற்றுதும் ன்னு எங்கத் தாத்தா ரொம்ப நாளுக்கு முன்னாடியே சொல்லிட்டு போயிட்டார். நானும் தாத்தாச் சொல்லைத் தட்டாமல் ஞாயிறு ஆனா எந்த வேலையும் செய்யறது இல்லை. ஆனானப்பட்ட கடவுளே ஞாயிறு அன்னைக்கு ரெஸ்ட எடுத்தப்போது நாம் யாரு வேலை செய்ய.

ஆனாலும் பாருங்க, ஞாயிறுக்கிழமைதான் நமக்கு துணி துவைக்கும் நாள் ! வாஷரில் போட்டு ஒரு அரை மணி நேரம், அப்புறம் ட்ரையரில் போட்டு இன்னும் ஒரு முக்கா மணி நேரம். அப்புறம் அது எல்லாத்தையும் அயர்ன் பண்ணி, மடிச்சு வைக்க இன்னும் ஒரு மணி நேரம். இதுக்கே மூணு மணி நேரம் போச்சுதுண்ணா அப்புறம் எங்க ஞாயிறைப் போற்றுவது !

சமையலுக்கு அப்புறம் அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணறது இந்த லாண்டிரிக்காத்தான். தமிழில்(?!!) எனக்கு பிடிக்காத வார்த்தை இந்த லாண்டரினு ஆயிப் போச்சு.


வலையில் அங்க இங்க மேய்ஞ்சப்போது, மிக எளிதாகதுணி மடிக்கும் இந்த வீடியோ மாட்டுச்சு. நிஜமாவே நல்ல டெக்னிக்த்தான். செய்துப் பாருங்களேன் எவ்வளவு சீக்கிரம் துணி மடிக்க முடியுது உங்களாலே என்று !


படத்தை கிளிக்கினால் படம் தெரியும் !


how to fold a shirt

இந்தியா கிரிக்கெட்டில் ஜெயிப்பது எப்படி? (30 Oct 06)

தேவ் அண்ணன் அற்புதமான கேள்வி ஒன்றைக் கேட்டு இந்த விக்கி வலைப்பூவுக்கு போணி செய்து வைத்திருக்கிறார். அவருக்கு விக்கிப்பசங்க சார்பா ஒரு ஓ!

இந்தியா கிரிக்கெட்லே ஜெயிக்கறது அவ்வளோ ஒண்ணும் கஷ்டம் கிடையாது சார். கொஞ்ச நேரம் என் மூளையைக் கசக்கி யோசிச்சதிலேயே பல மெத்தட்ஸ் கிடைச்சுது. அவை உங்கள் பார்வைக்கு. யாராவது இதை ICC, BCCI க்கு எடுத்துப் போயி சொன்னாலும் எனக்குப் பிரச்சினையில்லை. காப்பிரைட் அப்படின்னெல்லாம் எந்தப் பிரச்சினையும் பண்ணமாட்டேன்.

முறை ஒன்று: ஹர்ஷா போங்ளே முறை (ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் கிடையாது)

நான் சின்னவயசிலே ஊர்லே புளியந்தோப்புலே கிரிக்கெட் ஆடினப்ப எங்க டீம் எல்லா டீமையும் வெற்றிவாகை சூடியதுக்கு முக்கியமான காரணம் எங்க பேட்டிங் பௌலிங் எல்லாம் கிடையாது. எங்கள் ஆஸ்தான ஸ்கோரர் ராஜா தான். நாங்கள் ஆடும்போது வந்த டாட் பாலெல்லாம் அவன் கைநடுக்கத்துலே(?!) 1 ஆகும். ரஜினி படத்தைப்பத்தியும் ஓணான் வாத்தியாரையும் பத்தி பேசிக்கிட்டே மூணு ஓவருக்கு முன்னே அடிச்ச 1 - 4 ஆகும். எப்படின்னே தெரியாம எல்லா மேட்சிலேயும் 20 - 30 ரன்னுலே ஜெயிச்சுடுவோம். அவனை எப்படியாவது லொக்கேட் பண்ணனும். இந்தியா டீமுக்கு ஸ்கோரர் ஆக்கணும்.

முறை இரண்டு: ஷோலே முறை

முறை ஒண்ணு கஷ்டம்னு நெனைச்சீங்கன்னா, ராம்கோபால் வர்மா மாதிரி ஷோலே ரீமேக் பண்ணிடலாம். எல்லாத்தையும் பண்ணாட்டாலும், அந்தக் காயினை மட்டுமாவது ரீமேக் பண்ணி டாஸுக்கு உபயோகப்படுத்தலாம். என்ன, டாஸிலே வின் பண்ணா மட்டும் போதாதுன்றதாலே, இந்த முறையைத் தனியா பயன்படுத்த முடியாது.

முறை மூன்று: Do or Dice முறை

தாயக்கட்டம் ஆடும்போது தாயம் போடாம முன்னேற முடியாது இல்லையா? அதே போல சிக்ஸர் அடிக்கறதுக்கு முன்னே எதிர் டீம் எவ்வளவு ரன் அடிச்சாலும் கணக்குலே சேராதுன்னு ஒரு அமெண்ட்மெண்ட் கொண்டு வந்துடலாம். இந்தியாக்கு அப்ளை ஆகாதுன்னு சொல்லவேண்டியதில்லை.

முறை நான்கு: விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை

என்ன அநியாயம் சார் இது? 2 கோடி ஜனத்தொகை உள்ள ஆஸ்திரேலியாவிலிருந்து 11 பேர்தான் ஆடறாங்க, 110 கோடி உள்ள நம்ம நாட்டிலேயும் 11ஏ பேர்தானா? அவங்களுக்கு 11 பேர்னா நமக்கு 605 பேர், இல்ல நமக்கு11 பேர்னா அவங்களுக்கு 2 பேர் - இதான நியாயமா இருக்கும்? அதே போல பீல்டர், ஒவர் எல்லாத்துலேயும் வி.பி முறைய கொண்டுவந்தா எந்த டீம் நம்ம முன்னாலே நிக்க முடியும்?

முறை ஐந்து: ஜனநாயக முறை

அது என்ன சார்? மூணே முணு அம்பயராம், அதுவும் எதோ பேனலாம் அங்கே இருந்துதான் வருவாங்களாம்! இந்தியாலே நடக்குற அத்தனை மேட்ச்லேயும் எல்லா பார்டர் டெசிஷனும் மக்கள்கிட்டே கருத்துக் கணிப்பு நடத்தி அதன்படி நடந்தாத்தானே ஜனநாயகத்தைக் காப்பாத்த முடியும்? மெட்ராஸ்மாதிரி சில இடங்கள்லே இந்த முறைபேக்பயர் ஆனாலும், ஜம்ஷெட்புர், கல்கத்தாலே யோசிச்சுப்பாருங்க!

நீங்களும் முறைகளை யோசிச்சுச் சேருங்க!

பிற்சேர்க்கைகள்:

podakkudian முறை: என்னை கேட்டால் திமுக விடம் இந்திய அணியை ஒப்படைத்தால் வெற்றி நமதே
உபயம்: உள்ளாட்சி தேர்தல்

சின்னவன் முறை: அப்பிடியே நம்ம அஜீதை ( இது இந்திப் பட வில்லன் அஜீத்) விட்டு ஃபான்டிங்கோட பொண்டாடியையும், மெக்ராத்தின் பிள்ளைகளையும் கடத்த சொல்ல வேண்டியதுதான்.

இலவசக்கொத்தனார் முறை: பாக்கிஸ்தானோட கூட்டணி வெச்சுக்கலாம். ஜெயிச்சா கப்பை எடுத்துக்கிட்டு வந்திடலாம். தோத்தா 'பச்சை' துரோகம் அப்படின்னு கூப்பாடு போடலாம்.

மாயக்கூத்தன் கிருஷ்ணன் முறை: பேசாம நம்ம கைப்புள்ளய ஆட விடலாம்..நன்மைகள் சில

முதல் பால்ல அவுட் ஆனா 'அது போன பால்' அப்படின்னு சாமளிக்கலாம்..

'கிரிக்கெட் விரனுக்கு அழகு சிக்ஸரோ விக்கெட்டோ எடுப்பது அல்ல..எத்தனைதடவை அவுட்டானாலும் கீரிசையும்,டீமிலிருந்து போகமல் இருப்பதுதான்.' அப்படின்னு சவுன்டு விடலாம்.(இது தற்சமயம் உள்ள வீரர்களுக்கும் பொருந்தும்).அதையும் மீறி யாரவது கேட்டால்..
'இங்க பாருங்கப்பா..இவன் எத்தனை பெளன்ஸர் போட்டாலும் நம்ம டிராவிட் மாதிரி உடம்புலயும்,காலிலும் அடி வாங்கி ரொம்ப பொறுமையா இருக்கன்ப்பா' அப்படின்னு ஒருசிம்பத்தி கிரியேட் பண்ணாலாம்..

பெளலர் ஒடி வரும் போது நம்ம கைப்பு பேட்டோ பெளலர நோக்கி ஒடனும்..பெளலர் அதைப் பார்த்து அலறி ஓட நம்ம கைப்புக்கு ரன்னும் கிடைக்கும்,அவுட்டும் ஆகாமல் இருக்கலாம்.

கடைசியா ஒரே வழி கண்டிப்பா எப்பவும் ஜெயிக்கற வழி..பேசாம நம்ம ப ம க(பச்சோந்தி மக்கள் கட்சி) தலையை ஆட விடலாம்..கண்டிப்பா ஜெயிக்கிற கட்சிலதான் இருப்பாரு..

கைப்புள்ளைக்குத் தோனுன கொஞ்சம் கடுமையான, காட்டுத் தனமான ஐடியா - ஆட்டத்துல ஜெயிச்சிட்டு வந்தாத் தான் ராத்திரி சோறு கெடைக்கும்ன்னு ஒரு கண்டிஷன் போடலாம். தோத்துட்டு வந்தா காலையிலயும் மதியானமும் சாப்புட்டதுக்குக் காசைக் குடுக்கனும்னு ஒரு கண்டிஷன் போடனும்(காசு இல்லன்னா பாத்திரம் தேய்ச்சு குடுக்கனும், துணி தோய்ச்சு போடனும்).

Sunday, October 29, 2006

உனக்காக எல்லாம் உனக்காக....

... இந்த வலைப்பூவும் வரும் பதிவுகளும் உனக்காக!!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விபரங்கள் - கேள்வி பதிலாய்.

யார் இந்த விக்கிப்பசங்க?

சில சமயம் நாங்க (பக்கத்துலே Contributorsனு லிஸ்ட் இருக்கு பாருங்க), சில சமயம் நீங்க, எல்லா சமயமும் நாம்.

எதுக்காக இவங்க?

சமையல் பண்றதுலே ஆரம்பிச்சு, கோட் எழுதறது, பதிவு போடறது, பல் தேய்க்கறதுன்னு ஆளாளுக்கு ஆயிரம் சந்தேகங்கள். இதை யாருகிட்டே கேக்கறது, யாரு பதில் சொல்வாங்கன்னு தெரியாமலேயே தோல்வியை ஒப்புக்கொண்டு விடுகிறோம். சரி பதிவு எழுதாட்டா? அதனால ஒண்ணும் பிரச்சினையில்லைதான், நாடு நாசமாப் போயிடாதுதான். ஆனா பல் தேய்க்காட்டா? சுற்றுப்புற சூழல் பத்தி கவலைப்பட வேணாமா? அதனால தாராளமா எல்லாக் கேள்வியும் கேளுங்க!

எல்லாக்கேள்விக்கும் உங்களுக்கு விடை தெரியுமா?

எங்களுக்கு விடை தெரியாத கேள்வியே இந்த உலகத்திலே கிடையாதுங்க! என்ன, பல சமயம் விடை "தெரியாது"ன்னு இருக்கும். ஆனா, எப்படியாவது நாங்களோ, நீங்களோ தேடிக் கண்டுபிடிச்சு விளக்கிடுவோம்.

யார் பதிவு போடுவாங்க?

நீங்களும் போடலாம். கேள்விக்குத்தான் விடைன்னு இல்லாம, கேள்வியும் நானே, பதிலும் நானேன்னு ஒரு பதிவை உருவாக்கி எங்களுக்கு அனுப்பினீங்கன்னா அதை ஒரு முறை பார்த்துட்டு உங்க பேரோட பதிப்பிச்சிருவோம். பின்ன,ஆரஞ்சு ஜூஸ் குடிக்கறது எப்படின்னு ஆறுகோடித் தமிழர்களும் கொத்தனார்கிட்ட கேட்டாங்களா என்ன?

எப்படி கேள்வி கேக்கறது?

எப்படி வேணும்னாலும் கேக்கலாம். அதுக்காக ____ வலைப்பதிவருக்கு கிறுக்கு பிடித்தது எப்படி?ன்ற மாதிரி தனிநபர் சம்மந்தப்பட்ட கேள்வியக் கேட்டு எங்களைக் கஷ்டப்படுத்தாதீங்க. நகைச்சுவையான பதிலை வரவழைக்கற மாதிரி கேள்வியா இருந்தாலும் சரி, சீரியஸான பதிலை வரவழைக்கிற கேள்வியா இருந்தாலும் சரி - wikipaiyan AT gmail DOT com என்ற முகவரிக்கு தட்டி விடுங்க. உடனடியா கேள்விய போஸ்ட் பண்ணிடுவோம். விடை தெரிஞ்சவங்க, அல்லது கலாய்க்கிறதுன்னு முடிவு கட்டிட்டவங்க, போஸ்ட் ஆன கேள்விக்கு பதிவின் உரலைக் குறிப்பிட்டு பதில் போட்டிங்கன்னா அதையும் உடனடியா பதிஞ்சிடுவோம். (24 மணிநேரமும் எங்க ஆளுங்க வலையிலே உலாவிகிட்டு இருப்போமில்ல!)

பதில் யாரு சொல்லலாம்?

கேள்வி சம்மந்தப்பட்ட துறையாளர்களிடம் இருந்து, கூகுளாண்டவர் கிட்டே நேர்ந்துகிட்டு, எங்க கொஞ்ச அறிவைப் பயன்படுத்தி நாங்க பதிலை வாங்க முயற்சி செய்வோம். அதே நேரத்தில படிக்கறவங்களுக்கு இந்த விஷயத்திலே வெளிச்சத்தை தூக்கிப் போடமுடியும்னு நம்பிக்கை இருந்தா அவங்களும் எழுதலாம்.

பதில் சொல்றதுக்கு எதாச்சும் வரைமுறை இருக்குதுங்களா?

பெரிசா ஒண்ணும் கிடையாதுங்க. கலாய்க்கிற பதில்னா அதை ஒரு மூலையிலே குறிப்பிட்டுடுங்க.. அதைத் தனியா கட்டம் கட்டி போட்டுடுவோம். ஆனா சீரியஸான பதில்னா, எங்கே இருந்து பதில் வந்துதுன்னு ஒரு ஆதாரம், ஒரு சுட்டி, ஒரு நன்றி குறிப்பிட்டு வைக்கிறது உத்தமம். நன்றி கெட்டவங்கன்னு நம்மளை யாரும் நாக்கு மேலே பல்லைப்போட்டு சொல்லிடக்க்கூடாது பாருங்க.

"நமக்குத் தெரிஞ்ச விஷயம் மத்தவங்களுக்குத் தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்குத் தெரிஞ்சது நமக்குத் தெரியாம இருக்கலாம். அறிவு பகிர்வதால் கூடும்"அவ்வளவுதாங்க இந்த வலைப்பூவின் நோக்கம்.

எங்களுடைய வேலைன்னு பார்த்தா கேள்விகளை வாங்கறதும் பதில்களை வாங்கறதும் பதிப்பிக்கறதும் மட்டும்தான். இது ஒரு பொது வலைப்பூ.

இதன் வெற்றி, தோல்வி உங்க கையிலதான், சரி, உங்க கீ போர்ட்டில்தான் இருக்கு. மறந்திடாதீங்க.

Thursday, October 26, 2006

ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது எப்படி?

வெளிநாடு வாழ் மற்றும் வெளிமாநிலங்களில் தத்தம் சொந்த ஊரைப் பிரிந்து வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ஆண்களைப் போலவே நானும் ஆரம்ப காலங்களில் சரியான சாப்பாடு இல்லாமல் திண்டாடியிருக்கிறேன். வீட்டில் இருந்த வரைக்கும் வெங்காய சாம்பார், மோர்குழம்பு, அவியல், உருளைக்கிழங்கு ரோஸ்ட் என்று புகுந்து விளையாடிவிட்டு திடீரென்று வீட்டிற்கு வெளியே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் சமாளிப்பது மிக கடினம். அதுவும், நம் வீட்டில் இருந்தவரைக்கும் முந்திரி பருப்பு இன்னவகையற திருடித் தின்பதற்கு தவிர சமையல் அறை பக்கமே காலடி எடுத்துவைக்காமல் இருந்துவிட்டு நாமே சொந்தமாக சமைக்கவேண்டும் என்பது பெரிய இடிதான். பாட்டிகள் இருந்துவிட்டால் போதும், நிலைமை இன்னும் மோசம்.. "நல்லாருக்கு! ஆம்பிளைப் பசங்களுக்கு சமையல்கட்டுல என்ன வேலை"ன்னு discriminate பண்ணி வெளியே துரத்திவிடுவார்கள்.

இந்தியாவில் வேறு மாநிலத்திற்கு செல்வோர் நிலைமை ஒரு வகையில் பரவாயில்லை. ஏதொ ஒரு மெஸ்-ஸோ ஒன்றையோ கண்டுபிடித்து விடலாம். வெளிநாட்டில் வாழவோர்க்கு பிரச்சனைகள் சொல்லி மாளமுடியாது. மூன்று வேளையும் மெக்டோனால்ட்ஸில் சாப்பிட முடியுமா? கட்டுபடியாகுமா? அப்படியே ஆனாலும் மார்கன் ஸ்பர்லாக் போல் ஆவோமா என்று பயம் வேறு வரும். ஒரே நக்கட்ஸும், பிக் மாக்கும் எத்தன நாள் சாப்பிட முடியும்? சரி, இதெல்லாம் சரிப்பட்டு வராது, நாமே சமைக்கலாம் என்றால் வெண்டக்காயை நுனி உடச்சு வாங்கணும், தக்காளி அமுக்கிப் பாத்து வாங்கணும்கறது போன்ற ட்ரேட் ரகசியங்கள் தெரியவில்லையென்றால் தொலைந்தோம். சரி, அப்படியே ஏதாவது ஒரு காய்கறி வாங்கி மீனாட்சி அம்மாளின் 'சமைத்து பார்' வைத்து ஒப்பேத்தலாம் என்றால் அவர் குறிப்பிடும் வீசை, ஆழாக்கு போன்றவற்றிற்கெல்லாம் நிகழ்காலத்தில் equivalents இல்லை.

அப்போ? என்னதான் வழி? இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று. புதிதாய் நாம் இருக்கும் நாட்டிற்கு குடியேறிய தம்பதிகளுக்கு உதவுவதாய் சொல்லி அவர்கள் வீட்டிலேயே காப்பி உட்பட மூன்று வேளையும் கொட்டிக்கொள்வது.

இன்னொன்று சுயமாக சமையல் கற்றுக்கொள்வது. சமையல் என்பது ஒன்றும் பிரம்ம வித்தை இல்லை என்பதை உணர்த்தவே ஒரு குறிப்பை சொல்ல ஆசைப்படுகிறேன். இந்த ரெசிபி எந்த காண்டினெண்டிலும், எந்த குக்கிராமத்திலும் செய்யலாம். ஏனென்றால், மூலப்பொருள் எல்லா இடத்திலேயும் பாகுபாடின்றி கிடைக்கும். சரி, விஷயத்திற்கு வருவோம். இரண்டுவகை இன்ஸ்டண்ட் பசி மறக்கடிக்கும் ரெசிபிக்கள் இருக்கின்றன. அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட் சென்று ஒரு கிரேட் வாங்கிக்கொள்ளூங்கள். கார்ல்ஸ்பெர்க், ஹைனக்கென் என்று பலதரப்பட்ட பசி நிவாரணிகள் இருந்தாலும் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை கண்டுபிடிப்பதற்கு ஆரம்ப காலத்தில் சில சோதனைகள் செய்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு இருபாட்டில்கள் என்பது சராசரி அவரேஜ். ஒரு கிரேட் வாங்கினால் ஒரு 2 நாட்களுக்கு பசியிலிருந்து விடுதலை.

என்ன வெட்டி குறிப்பு கொடுத்து டபாய்க்கிறன்னு பாப்பவங்களுக்கு, இதோ உருப்படியான குறிப்பு. அதே சூப்பர் மார்க்கெட்டில் பழரச செக்ஷனுக்குப் போனீர்களானால், 2 லிட்டர் ஆரஞ்சு ஜூஸ் கிடைக்கும். அந்த பாக்கெட்டை பத்திரமாக வீட்டிற்கு எடுத்துவந்து (காசுகொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் சாமர்த்தியம்) ஒரு டேபிளின் மேல் செட் செய்து கொள்ளவும். பத்திரமாக டெட்ராபாக்கை பிரித்து ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட/மூன்று நாள் முந்திய கிளாஸ் எடுத்து அதில் ஒரு 500 மில்லி ஊத்தவும். மிக ஜாக்கிரதையாக வாயருகில் கொண்டு சென்று அருந்தவும். பாதி கிளாஸ் குடித்து முடித்தபின் ஏன் முதல்வகை பசிநிவாரணி வாங்கவில்லைன்னு சுய இரக்கம் வரும். பெரும்பாலான ஆண்களுக்கு வரும் உணர்ச்சிதான் இது, அதனால் பதட்டப்பட தேவையில்லை. எவ்வளவு ஜூஸ் வேணுமோ குடித்து முடித்து, மூடி பிர்ட்ஜுக்குள் வைப்பது நலம். கொஞ்சம் adventurous ஆன வாசகர்கள் ஜ்ஸ் பாக்கை சரியாக மூடாமல் டேபிள் மேலேயே முன்று நாட்கள் வைத்தால் ஆரஞ்சு சுவையுடன் கூடிய mushroom ஜுஸும் கிடைக்கும். ஒரே கல்லில் ரெண்டு மாங்கா.

இந்த ஆரஞ்சு ஜூஸ் குடித்துவிட்டு தூக்கம் வரவில்லையென்று சொல்வோர் மேற்சொன்ன முதல்வகை நிவாரணிகளை பரிட்சித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

பாஸ்தா செய்வது எப்படி?

இத்தாலிய உணவு வகைகள்னாலே பீட்ஸாவுக்குத் தான் மவுசு ஜாஸ்தி. பாஸ்தாவின் மேன்மை இன்னும் நம்மூரில் அவ்வளவா தெரியவில்லை. பாஸ்தா இருக்கு பாருங்க. அருமையான சமாச்சாரம் இது. தினமும் சாதமே சாப்பிட்டு போரடிச்சு போச்சுன்னா, நூடுல்ஸ் தின்னு அலுத்துப் போச்சுன்னா பாஸ்தா பகவான் இருக்கவே இருக்கார். இதை எனக்கு அறிமுகப்படுத்தியது அண்டோனியோ கார்லுச்சியோன்னு ஒரு செப் தான். பிபிசியில வருவார். என்னவோ எதோன்னு இருந்த என் பயத்தை போக்கி, பாஸ்தாவின் மேன்மையை உணர்த்தியவர். அப்புறம் இன்னொரு கடவுள் டீலியா ஸ்மித். இவங்க பிபிசி ப்ரைம்ல வருவாங்க.

பாஸ்தாவில நிறைய வகைகள் இருக்கு. ஸ்பாகெட்டி, மாக்கரோனி, பென்னி, ரென்னின்னு. எல்லாம் அடிப்படையில ஒரே மாவால ஆனதுன்னாலும், கலரிலும், வடிவங்களிலும் வித்தியாசங்கள் இருக்கும். சேமியா மாதிரிதான் என்றாலும் ஸ்பாகெட்டில கீரை, முட்டைன்னு பல வகைகள் இருக்கு. கொழுப்புச் சத்து குறைவானது பாஸ்தா என்பது டயட்டர்களின் கவனத்திற்கு. கொஞ்சம் கஷ்டமான சமாச்சாரம். அதை இப்போதைக்கு விட்டுடுவோம்.

பாஸ்தா வரலாறுன்னு பாத்தீங்கன்னா இத்தாலிக்கு கிழக்கிலிருந்து திரும்பிய மார்க்கோ போலோ தான் அறிமுகம் செஞ்சார். ஆனா, நாலாவது நூற்றாண்டிலேயே பாஸ்தா மாதிரியான உணவுப் பண்டம் இருந்து வந்திருக்குன்னும் சொல்றாங்க. இத்தாலியில் வீடுகளில் அவர்களே ப்ரெஷ்ஷா மாவு பிசஞ்சு, பாஸ்தா செய்வதற்கேவென்று அச்சு இயந்திரங்கள் மூலமா அந்த மாவிற்கு வடிவங்கள் எல்லாம் செய்வாங்க. இதெல்லாம் நமக்கு ஒத்துவராத விஷயம். ரெடிமேட் பாஸ்தாக்கள் எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கும். அதில இந்த மாக்கரோனி பாஸ்தா செய்யறது ரொம்ப சுலபம்.

சரி, இப்போ இந்தியனைஸ்ட் வெஜ் மாக்கரோனி வித் சீஸ் அண்ட் டொமேட்டோ சாஸ்

கேக்கவே ஏதோ exotic உணவோட பேர் மாதிரி இருக்குல்ல? இத நீங்களும் சமைக்கலாம். இருபது நிமிஷம் போதும். என்னென்ன தேவை?

1. மாக்கரொனி பாஸ்தா - 1 பாக்கெட் (பொதுவா 500 கிராம் இருக்கும்)
2. பீஸ்களா வெட்டி உறைய வைக்கப்பட்ட காய்கறிகள் (பீ.வெ.உ.வை.கா) - என்ன வேணா போட்டுக்கலாம் (பிராக்கோலி, காலிப்ளவர், காரட், கார்ன், பட்டாணி, மஷ்ரூம் இப்படி) இதுவும் 500 கிராம் இருந்தாப் போதும்
3. பூண்டு - இது ரொம்ப முக்கியம். நாலஞ்சு பல் தேவைப்படும். தோல உரித்துவிட்டு ஒரு மீடியம் சைஸ் பல்லை ரெண்டு அல்லது மூன்று பீஸ்களாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்
4. தக்காளி பேஸ்ட்
5. எண்ணெய், உப்பு
6. மசாலா - இந்தியனைஸ்டுன்னு சொல்லிருக்கோமே. பிஷ் மசாலா, சிக்கன் மசாலா என்று உங்களுக்கு தோணினது எதுவேணா
7. காரப்பொடி
8. சீஸ் - சிறிய துண்டு தனியாக வாங்கி ஸ்டிரிப்ஸாக வெட்டி வைத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் நான் செய்வது பிரெட்டிற்கு தடவ கிடைக்கும் சீஸ் ஸ்ப்ரெட். இதுதான் பெஸ்ட்.

அவ்வளவுதான். இனி ஆரம்பிக்கலாமா?

அடுப்பு பத்தவைக்கணும், பாத்திரத்தை வைக்கணுமெல்லாம் சொல்லப் போறதில்ல. அதனால, ஒரு பெரிய பாத்திரத்தில் பாஸ்தா பாக்கெட்டை மொத்தமாக கவுத்துடுங்க. கொஞ்சூண்டு எண்ணெய் ஊத்தி நல்லா மிக்ஸ் பண்ணிக்குங்க. இது எதுக்குன்னா பாஸ்தா ஒட்டிக்காம இருக்க. எவ்வளவு பாஸ்தா இருக்கோ அதுக்கு ரெண்டு மூன்று அளவு தாராளமா தண்ணீர் விடுங்க. அடுப்பு பத்தவெச்சாச்சா? குப்பத்தொட்டியில தூக்கிப்போட்டிருப்பீங்களே காலி பாஸ்தா பாக்கெட். அதை எடுத்து எத்தன நேரம் வேகவிடணும்கரத பாருங்க. அநேகமா 7-9 நிமிடங்கள் போதும். 10 நிமிஷத்திற்கு மேல் வேகவெச்சா சவசவன்னு ஆயிடும். அதனால அதுக்குமேல வேகவிடாம பாத்துக்கணும்.

இப்ப சாஸ். கொஞ்சூண்டு எண்ணெய் ஊத்தி அதில நாலு காஞ்ச மிளகா வேணுமுன்னா போட்டுக்கலாம். மிளகா தாளிச்சு முடிஞ்சோன்ன பீ.வெ.உ.வை.கா-களை போடுங்க. கொஞ்சம் ஜாக்கிரதை. காய்கறிகளை முன்னாடியே "thaw" செய்யணும்னு அவசியமில்லை. அதனால் கொஞ்சம் படபடவென்று வெடிக்கும். அதப் பாத்துட்டுகிட்டே ஒரு 5 நிமிஷம் இருங்க. நேத்திக்கு சாப்பிட்டு வெச்ச தட்டையெல்லாம் இந்த நேரத்திலே அலம்பலாம். அஞ்சு நிமிஷம் ஆச்சா? இருக்கற மசாலாவெல்லாம் வகைக்கொன்னுன்னு ஒரு சின்ன டீஸ்பூன் அளவு போட்டு காரப்பொடியும் உப்பும் வேனுங்கற அளவு சேத்துக்குங்க. உப்பு எப்பவுமே ஒரு டீஸ்பூன் அளவு கொஞ்சமா போட்டுட்டு சாப்பிடும் போது சேத்துக்கறது நல்லது. நல்லா மிக்ஸ் பண்ணிட்டு மூடி வெச்சுருங்க.

இதுக்குள்ள பாஸ்தா வெச்சு குறிப்பிட்ட 7-9 நிமிடங்கள் ஆச்சுன்னா, அடுப்ப அணைச்சிடலாம். அடுப்ப ஆரத்தழுவச் சொல்லல. ஆப் பண்ணிடுங்கன்னு சொன்னேன். அப்படியே கொஞ்ச நேரத்திற்கு பாஸ்தா பத்தி மறந்துடுங்க.

சாஸுக்கு திரும்ப வருவோம். மசாலாவெல்லாம் நல்லா மிக்ஸ் ஆகி கமகமன்னு வாசனை வருதுன்னா, உடனே தக்காளி பேஸ்ட் போட்டு ஒரு அரை நிமிஷம் கிளறிட்டு எவ்வளவு சாஸ் வேணுமோ அவ்வளவு தண்ணி ஊத்திடுங்க. உள்ளுக்குள்ள ஊத்திக்கிட்டீங்கன்னா சாஸ் திசைமாறிப்போயிடும். அதனால, சாஸுக்கு மட்டும் ஊத்துங்க. நிறைய சாஸ் பண்ணலாம்னு ரொம்பவும் கொட்டக்கூடாது. அப்புறம் ரசம் தான் மிஞ்சும். ரெண்டு மூணு கப் அளவு பொதுவா போதும். திரும்பி மூடி வெச்சுடுங்க. ஒரு கொதி வந்தவுடனே, நறுக்கிவெச்ச பூண்ட சேத்துடணும். அஞ்சு நிமிஷம் வெயிட். இதோ முடிவுக்கு வந்தாச்சு. சீஸ் ஸ்ப்ரெட் இருக்கே அத நல்லா மூணு நாலு ஸ்பூன் அளவு போடுங்க. ஒரு ரெண்டு நிமிஷம் பொறுமையா இருந்தா சீஸ் அழகா உருகி மிக்ஸாகும். ரசமா இருந்தது கெட்டியா சாஸ் ஆகும். ஒரு கிளறு கிளறினா ரெண்டு நிமிஷத்தில இறக்கிடவேண்டியதுதான்.

சரி, இப்ப பாஸ்தான்னு ஒன்னு பண்ணோமே, நியாபகம் வருதா? அந்த பாத்திரத்திற்கு மூடி போட்டு, தண்ணிய மட்டும் கொட்டிடுங்க. கொஞ்சம் wet ஆக வெறும் பாஸ்தா மட்டும் இருக்கும்.

எப்படி சாப்பிடறது? ரெண்டுத்தையும் சாதம், குழம்பு மாதிரி சாப்பிடும் போது மிக்ஸ் பண்ணி சாப்பிடலாம். இல்லைன்னா சாம்பார்சாதம் மாதிரி சாஸ் பண்ணி முடிச்சோன்னவே ரெண்டத்தையும் ஒன்னா சேத்து premix பண்ணிடலாம். உங்களுக்கு எப்படியோ, அப்படி சாப்டுக்கலாம்.

கொத்து பரோட்டா செய்வது எப்படி?

சென்ற வாரம் ஒரு நாள் சப்பாத்தியும் சாதமும் அலுத்துப் போச்சு. வேறேதாவது செய்யலாமே என சொல்லப்போக, வந்தது வினை. நீங்களே செய்யுங்களேன் என சீறிப் பாய்ந்தது ஒரு ஏவுகணை. நுணலும் தன் வாயால் கெடும் (சிலேடை எல்லாம் இருக்குங்க) என நொந்துகொண்டே என்ன செய்வது என யோசித்து பிரிட்ஜை குடையும்போது முன்பு வாங்கி வைத்திருந்த குளிருறைக்கப்பட்ட (அதாங்க frozen) பரோட்டா பாக்கெட் ஒன்று கண்ணில் பட்டது. சரிதான் இதை வைத்து எதாவது செய்யலாம் என முடிவு பண்ணி கையில் கிடைத்தவையெல்லாம் போட்டு செய்த பதார்த்தம்தான் கொத்ஸு பரோட்டா. நாங்க சாப்பிட்டோம் நல்லா இருந்தது, பக்கத்து வீட்டு நண்பர் கோபி வேற வந்து சூப்பரா இருக்குன்னு உசுப்பேத்தி விட்டுட்டார். ஆகவே மக்களே உங்களுக்காகவே கொத்ஸு பரோட்டா செய்முறை. நல்லா இருந்தா இங்க வந்து சொல்லுங்க, நல்லா வரலைன்னா உங்களுக்கு செய்யத் தெரியலை. என்கிட்ட மீண்டும் எப்படி செய்யணும்ன்னு கேளுங்க. சொல்லித்தரேன்.

முதல்ல என்ன வேணும்ன்னு ஒரு லிஸ்ட் போடுவோமா?

  • Frozen பரோட்டா - 1 பாக்கெட்.
(இது கிடைக்காதவங்க பக்கத்து ஹோட்டலில் வாங்கிட்டு வந்திருங்க. அப்படி நாந்தான் பண்ணுவேன்னு அடம் பிடிக்கறவங்க எப்படி செய்யணும்னு இணையத்தில் தேடிப் பார்த்து பண்ணிக்குங்க.)
  • வெங்காயம் - 2 (கொஞ்சம் பெரிய சைஸ்)
  • தக்காளி - 1 (இதுவும் பெருசுதான்)
  • முட்டை - 3 (சைவப் பார்ட்டிகள் இதை சாய்ஸில் விடவும்)
  • இஞ்சி / பூண்டு - சுவைக்கு ஏற்ப. (பேஸ்ட் கிடைத்தாலும் பரவாயில்லை.)
  • பச்சை மிளகாய் - 3
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி, மிளகுத்தூள் - ஒன்றொன்றும் 1/2 தேக்கரண்டி
  • கடுகு, உப்பு, பெருங்காயம், எண்ணை - தேவையான அளவு
சமைக்க கிளம்பறதுக்கு முன்னாடி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் எல்லாத்தையும் சின்ன சின்னதா நறுக்கி வச்சுக்கோங்க. முட்டையை உடைச்சு அடிச்சு வச்சுக்கோங்க. பரோட்டாவை சின்ன சின்னதாய் பிச்சு வச்சுக்கோங்க. இப்போ செய்முறை.

  • வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடிக்கவிடவும்.
  • பின் அதில் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • பின் வெங்காயத்தை போட்டு கிளறவும்.
  • அதன் மேல் மேற்கூறிய பொடிகள் அனைத்தையும் போடவும்.
  • வெங்காயம் வதங்கிய பின் பிய்த்து வைத்த பரோட்டாவையும் போட்டு கிளறவும்.
  • அதன் மேல் உடைத்து வைத்த முட்டையை விட்டு மேலும் கிளறவும்.
  • இவை நன்றாக வதங்கிய பின் தக்காளியை சேர்த்து கிளறவும்.
  • அவ்வளவுதான்! சூடா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்.
இதுக்கும் கொத்து பரோட்டாவிற்கும் என்ன வித்தியாசம், அது என்ன கொத்ஸு பரோட்டான்னு பேருன்னு கேட்கறவங்களே. கொத்து பரோட்டாவில் சால்னா விடணும் அது இல்லைன்னா செய்யறது கொத்து பரோட்டாவே இல்லைன்னு மதுரைக்காரய்ங்க வைவாய்ங்க. அதனாலதான் இந்த பேரு.