Sunday, December 24, 2006

காட்டுக்குள்ளே படம் பிடிப்பது எப்படி?

நம்ம ஷ்யாம் இருக்காரே (ஆமா, இப்போ எல்லாம் ஆளைக் காணறதே இல்லை, என்ன ஆச்சு?) அவரு ஒரு கேள்வி கேட்டாரு.

Animal Planet channel ல ஒரு விலங்கோட life cycle காட்டுராங்களே...அதுக்கு அங்க அங்க கேமரே ஃபிக்ஸ் பண்ணி வெச்சுருப்பாங்களா இல்ல யாராவது அதுங்கள பாலோ பண்ணி வீடியோ எடுப்பாங்களா...இல்ல ஹைடெக்கா சேட்டிலைட்ல இருந்து எடுப்பாங்களா...
இதுக்கு நம்ம வழக்கம் போல கூகிளாண்டவரை வணங்கி வரம் வாங்காம இது பத்தி தெரிஞ்ச ஒருத்தரைக் கேட்கலாமேன்னு நினைச்சோம். உடனே நியாபகத்துக்கு வந்தது நம்ம இயற்கைநேசிதான். சரிதான், அவருக்கு இந்த படம் பிடித்த அனுபவம் எல்லாம் இருக்குமே, அதையும் கலந்து எழுதித்தாங்களேன்னு சொல்லியாச்சு. அவரும் உடனே எழுதித் தந்ததுதான் இந்த பதிவு. நன்றி நேசி.

இனி இயற்கைநேசி

இன்றைய தினத்தில் ஒரு காமிரா என்ற டப்பாவை வாங்கி விட்டால் யாவரும் ஒரு புகைப்பட நிபுணரானதாக நினைத்துக் கொண்டு, கேள்வி கேப்பார் இல்லாமல், படம் எடுக்கப் படும் நபரின் அனுமதியின்றியே ஏதோ கையில் ஒரு லைசன்ஸ் வாங்கிவிட்டதைப் போன்ற பிரமையுடன் நடந்து கொள்ள நினைக்கிறோம்.

அத்து மீறி, சில சமயங்களில் வன விலங்குகளின் பழக்க வழக்கம் பற்றி அறியாமலேயே, ஆபத்தான முறையில் மிக அருகமையில் நெருங்கி தன் உயிருக்கே கூட பங்கம் விளைவித்துக் கொண்ட நிகழ்ச்சிகளும் உண்டு.

அது அப்படியாக இருக்க, உண்மையிலேயே இந்த வனத்தினுள் உள்ள மிருகங்களைப் பற்றி அசையும் (moving) அசையா (still) படங்கள் எவ்வாறு எடுக்கப் படுகிறது, என்ற கேள்வி நம்மிடையே எழலாம். இயற்கை சார்ந்த புகைப்பட நிபுணர் ஆக வேண்டுமா, வேண்டியது எல்லாம் பொறுமை, அதீத பொறுமை, மேலும் பொறுமை.

ஏனெனில், ஒரு பத்து மணி நேர அமர்வில் கடைசி 5 நிமிடங்கள் உங்களுக்கு புகைப்படம் எடுக்கக் கூடிய வாய்ப்பு அமையலாம், அதுவும் அமைந்தாலும் அமையலாம். அப்படியெனில், நான் என்ன சொல்ல வருகிறேன், என்பது உங்கள் அனைவருக்கும் புலப்படுமென்று நினைக்கிறேன். அதற்கு ஒரு சிறு உதாரணம் கொண்டு பார்க்கலாம், சருகு மான் (Mouse Deer) என்ற ஒரு வகை மான் மழைக் காடுகளில் வசிக்கிறது, அது வீழ்ந்து கிடக்கும் அல்லது பட்டுப் போயோ, அல்லது உயிருடனோ நிற்கும் மரப் பொந்துகளில் வசிக்கிறது.

அவ்வளவு எளிதாக அதன் வசிப்பிடத்தை கண்டுபிடித்து விட முடியாது. சரி, ஓர் இடத்தில் அந்த மான் வசிப்பதை தெரிந்து கொண்டோம் என்று வைத்துக் கொள்வோம். எப்படி நல்ல வெளிச்சத்தில் ஒரு படமேனும் அந்த மானை எடுப்பது. அதில் நிறைய பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ள வேண்டியது வரும். எப்படியெனில், மழைக்காடுகளில் ஓங்கி வளர்ந்த மரங்கள் அடர்ந்த கிளைகளுடன் (canopy) சூரிய வெளிச்சமே நிலத்தில் படாத வண்ணம் அடைத்துக் கொண்டு நிற்கும்.

அப்படியே சிறிது வெளிச்சம் தரையில் விழப்போனாலும் அந்த மரங்களுக்கு இரண்டாவது நிலையில் நிற்கும் சிறு மரங்களும், பற்றி வளரும் செடி கொடிகளும் (Lianas, Rattans etc.,) இன்னும் வெளிச்சத்தை மறைத்து, பார்க்கப்படும் விலங்கிற்கும், பார்ப்பவருக்குமிடையே பெரும் இன்னல்களை விளைவிக்கும். இதனாலேயே, மழைக்காடுகளில் படம் எடுப்பது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்ததைப் போன்றது.

இதனால் அதி நவீன தொழிற் நுட்பங்களை கொண்ட காமிராவாக இருந்தாலும் சரி, திறமையான புகைப் பட நிபுணராக இருந்தாலும் சரி, மழைக்காடுகளில் படம் எடுப்பது என்பது ஒரு சவாலாகவே இருந்து வருகிறது, இன்றும்.

இந்த சூழ்நிலையில் தான் யோசித்து, யோசித்து காசு இருக்கும் நாட்டில் முதல் முதலில் இது போன்ற ரகசிய வாழ்கை நடத்தும் பூனை இனங்களை (இதில் புனுகுப் பூனை, சிறு வகை காட்டுப் பூனைகள் மற்றும் மழைக்காடுகளிள் வசிக்கும் புலிகள், சிறுத்தைகள்) படம் மெடுப்பதற்கென காமிர பொறி (Camera Trap) வைத்து படமெடுப்பது என்ற அணுகுமுறையை கொணர்ந்தார்கள்.



இதில் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியும் கொணரப் பட்டது. எப்படியா, இப்பொழுது நம்மூர் காடுகளில் ரொம்ப அரிதாகவே அறியப் பட்ட மீன் பிடிக்கிற பூனை (Fishing Cat) மற்றும் சிறுத்தைப் பூனை (Leopard Cat) இவங்க ரெண்டு பேரும் ரொம்ப அரிதான அரிது ஒரு முறையேனும் இதன் வாழ்விடத்தில் வைத்து காட்டிற்குள் பார்க்கிறது. ஏன்னா, ஒண்ணு இதுகள் அந்தி மயங்கி இரவு நேரங்களில் மட்டுமே தனது ஆட்டையை தொடங்குகிறது, இரண்டாவது ரொம்ப ரகசியமா நடந்து திரியற ஜீவராசிகள்.

அது அப்படியாக இருக்கும் பொழுது எப்படி இவைகளை படம் எடுக்கிறது. அங்குதான் வந்தது இந்த காமிர பொறி அணுகு முறை. நாங்களும் முயற்சித்துப் பார்த்தோம் ஓரளவிற்கு வெற்றியும் கிடைத்தது.

கொஞ்சம் எப்படி செய்தோம் என்று பார்த்து விட்டு, பிறகு பி.பி.சி மக்கள் எங்கள் பக்கமா சிங்கவால் குரங்குகளின் (Lion Tailed Macaque) வாழ்வைப் பற்றி படம் எடுக்க வந்தப்ப என்னன்ன சிக்கல்களை அவர்களும் நாங்களும் சந்தித்தோம் என்பதனையும் கூறி இப்படி கஷ்டப்பட்டு அசையும், அசையாப் படங்கள் எடுப்பதால் என்ன பயன் என்பதனையும் கூறுகிறேன்.

நாங்க வரகலியார் என்ற யானை முகாமருகில் இருக்கும் சோலை ஒன்றில், இந்த காமிர பொறியை பயன் படுத்திப் பார்த்தோம். முதலில் ஒரு வாரமா காட்டிற்குள் அழைந்து நீர் நிலை இருக்கிற மாதிரியும், பூனைகளின் புலுக்கை (scat droppings) தண்ணீரின் குறுக்கே ஓடும் வேர்களின் மீது ஏதாவது கிடக்கிறதா, அல்லது நிற்கும் இடத்தை சுற்றியும் அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்று துப்பறியும் வேலையை எல்லாம் நடத்தினோம்.

பிறகு சரியான இடமா பார்த்து, ஒரு காமிரவை தனிந்து வளைந்து வளர்ந்திருக்கிற ஒரு கொடியின் கிளையில் அந்த ஏரியாவை கவர் செய்து போல கட்டி வைத்தோம். இதற்கு முன்பே, அட நாங்கள் பயன் படுத்திய அணுகு முறையைத்தான் இங்கு சொல்லிக் கிட்டு இருக்கிறேன், சரியா. இந்த காத்து ஊதி தலையனை (Air Pillow) செய்வோமே, அத ஒண்ணு வாங்கி முனையை மட்டும் திறந்து அதுக்குள்ள சில சித்து வேலை ஒயரிங்க் வேலை எல்லாம் செஞ்சு காமிரவுடன் கொண்டு வந்து இணைத்து விட்டோம்.



இப்ப அந்த பொறியின் அமைப்பை வெளியில் தெரியா வண்ணம் கொஞ்சம் சருகு மண்ணு எல்லாம் அது மேல போட்டு, ஓயரிங்க மண்ணுக்குள் வைத்து மறைச்சுட்டு, கொஞ்சம் கருவாட அங்கும் இங்குமா தூக்கிப் போட்டு நம்ம பொறிகிட்ட மட்டும் கொஞ்சம் ரெண்டு மூணு அதிகமாகவே.

இத்தனைக்கும் அதுக வாசம் பிடிக்கிறதில பலே ஆட்கள், அவனுங்க வந்திட்டு போற இடத்தில நாம வந்திட்டு போயிறுக்கிற சுவடு தெரிஞ்சா அந்த பக்கமே கொஞ்ச நாட்களுக்கு தலை வைச்சுப் படுக்க மாட்டாய்ங்க. அதனையும் பார்க்கணும், நல்ல குளிச்சுட்டு, செண்டு கிண்டு எல்லாம் போட்டுகிட்டு பொண்ணுகளை கவர்வது அப்படிங்கிற கணக்க போன ஒரு எறும்பு கூட கண்ணில தட்டுப் படாது.

சரி, நம்ம கதைக்குப் போவோம். காமிர தனியங்கி. அதுவா, எது அந்த ஓயரிங்கால் இணைக்கப்பட்ட தலையனை மீது ஏதாவது ஏறியோ அல்லது தொடப்பட்டாலோ காமிர உயிர் பெற்று படக்கென்று படத்தை எடுத்து விடும். ஆனா, பாருங்க நாங்க கொண்டு போய் கட்டி வைச்ச அன்னிக்கு நல்ல மழை. மறுநாள் திரும்பப் போய், வேற ஒண்ணை விட்டுட்டு வர வேண்டியதாப் போச்சு.



அடிக்கடிப் போய் பார்க்காம ஒரு வாரம் கழிச்சு போயி எடுத்திட்டு வந்தோம். ரெண்டு மூணு நல்ல படம் கிடைச்சுருந்தது. கீரிப் பிள்ளைகள், அப்புறம் ஒரு பறவை இந்தியன் பிட்டா எனும் ஒன்று.

ஆனால், இந்த காமிர பொறியினால் சில அரிய புகைப்படங்களும் கிடைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக மழைக்காடுகளில் வசிக்கும் புலிகளின் கணக்கெடுப்பிற்கும், தனிப்பட்ட முறையில் அவைகளின் உடம்பிலும், முகத்திலும் உள்ள புள்ளிகள் மற்றும் வரிகளின் அமைப்பைக் கொண்டு கண்டறிய முடிகிறது.

இப்பொழுது ரோடியே சமிக்கைகளை அனுப்பும் கருவிப் பட்டைகளை கழுத்தில் கட்டி அதன் வாழ்வியலைப் பற்றிய ஆராய்ச்சி நடத்து கிறார்கள். அது போல அதன் குறிப்பிட்ட வசிப்பிடம் அறியப் படும் பொழுது, முழு நீள அசையும் படம் எடுப்பது சாத்தியமாகி விடுகிறது. இருந்தாலும், மழைக்காடுகள் எப்பொழுதுமே ஒரு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்து வருகிறது.

அதற்கு ஒரு உதாரணம், நாங்கள் வால்பாறையில் இருந்த சமயத்தில் பி.பி.சியிலிருந்து ஒரு குறு நீள படம் சிங்கவால் குரங்குகளின் மேல் எடுத்தார்கள். அதற்கு ஆறு மாதத்திற்கு முன்பாகவே இடம் தேர்வு செய்யப் பட்டு, எளிதாக நல்ல முறையில் அதன் முழுச் சமுதாயமும் எவ்வாறு வாழ்கிறது என்பதற்கிணங்க, கொஞ்சம் சிறிய வனத்தில் மக்களுடன் பழக்கப் பட்டு போன ஒரு குரூப்பின் மீது படப்பிடிப்பை நடத்திவிட்டு, பிறகு அடர்ந்த அதன் உண்மையான வாழ்விடத்தை காமிக்கும் எண்ணத்தில் வால்பாறையில் அமைந்துள்ள அக்காமலை (Akkamalai) எனும் வனத்தினுள் படப்பிடிப்பு நடத்தப் பட்டது.

ஏனெனில், அக்காமலை காடுகளில் வாழும் அக் குரங்குகளை படம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அதில் நிறைய நாட்கள், கொட்டும் மழையிலும், கடிக்கும் அட்டைகளுக்கு கிடையிலும் அழைந்து திரிந்தது ஓர் மறக்க முடியாத அனுபவமே.

முடிவாக, வன விலங்குகளைப் பற்றி படம் எடுப்பதில் நிறைய பொறுமையும், அதன் பழக்க வழக்கங்களைப் பற்றிய புரிந்துணர்வும், அதற்கெல்லாம் மேலாக அவைகளின் பிரத்தியோகத் தன்மைக்கும் மதிப்பளித்து இடைஞ்சல் கொடுக்காத விதத்தில் நடந்து கொண்டு புகைப்படம் எடுப்பது ஒரு சிறந்த நிபுணருக்கான அடையாளங்கள்.

படம் எடுக்கப்படும் விதம் நாளொரு மேனியும் பொழுதுதொரு வண்ணமாக தினந்தோரும் வளர முயற்சித்துக் கொண்டுதான் வருகிறார்கள். எனவே, விலங்குகள் வாழும் குகைகள், பொந்துகள் போன்ற இடங்களில் இன்று வளர்ந்துள்ள தொழிற் நுட்பத்தில் பாட்டரிகளின் உழைப்புத்தன்மை, மறைத்து வைக்கக் கூடிய அளவில் ஒரு பட்டாணி அளவே உள்ள காமிரக் கண்கள் என மிக வேகமாக வளர்ந்து போனதால், இது போன்ற ரகசிய வாழ்கை வாழும் மிருக ராசியாக இருந்தாலும் இன்று அதன் வாழ்வினை உற்று நோக்கும் வாய்ப்பு நமக்கு கிட்டியிருக்கிறது என்றே கூறலாம்.

Sunday, December 17, 2006

RTP என்றால் என்ன?

ஆஹா தமிழ்மணத்துல கர்நாடக சங்கீதம் பற்றி இவ்வளவு பேச்சு இருக்கே, நாம மட்டும் இதைப் பற்றி பேசாம இருக்கோமே அப்படின்னு கை அரிச்சிக்கிட்டு இருந்த நேரத்துல நம்ம வ.வா.ச. பசங்க நல்லத்தனமா ஒரு கேள்வியைக் கேட்டாங்க. இதுதான் சான்ஸ் அப்படின்னு சொல்லி போட்டாச்சு இந்த பதிவு. ஒரு பெரிய பதிவாப் போட்டு 50 பின்னூட்டம் வாங்கின அவங்க கேள்வி இதுதான் - இராகம் தானம் பல்லவி என்றால் என்ன? (பசங்களா, அது ராகம் தானம் பல்லவி, நீங்க கேட்ட மாதிரி ராகம் தாளம் பல்லவி இல்லை, புரியுதா?)

தெலுங்குல ரா அப்படின்னா ஆங்கிலத்தில் கம்.அதனால ராகம் அப்படின்னா வா வான்னு கூப்பிடறது, தானம் அப்படின்னா தேர்தலுக்கு முன்னாடி ஒரு வேண்டுதல் வெச்சு ஜெயிச்ச பின்னாடி அடுத்தவங்க காசுல இலவசமா பொருட்களை குடுக்கறது, பல்லவின்னா குரங்கு எல்லாம் வளர்த்தாங்களே அந்த அக்கா அப்படின்னு வெவகாரமா எழுத தயாரா இருந்த பெனாத்தலாரை 'அடங்குடா மவனே' அப்படின்னு அடக்கிட்டுத்தான் இந்த பதிவு வருது. என்னை வெச்சு அந்த சங்க பசங்க காமெடி எதாவது பண்ணினாங்க அப்புறம் அவரை ரிலீஸ் பண்ணிடுவேன். ஜாக்கிரதை. சரி, இனி மேட்டர்.

அறிமுகம்

இராகம், தானம், பல்லவி (கொஞ்சம் விஷயம் தெரிஞ்சா மாதிரி காட்டிக்கணமுன்னா RTP) என்பது கர்நாடக சங்கீதத்துல பாடுற பல முறைகளில் ஒண்ணு. பொதுவா கச்சேரிகளின் இரண்டாம் பாதியில் பாடப்படும் ஒரு விஷயம் இது. அந்த சமயத்தில்தான் பாடகரின் குரல் உச்சத்தில் இருக்கும். அத்தோடு ரசிகர்களோடு ஒரு நல்ல கனெக்ஷனும் இருக்கும். பல மணி நேரங்கள் கூட பாடக்கூடிய அளவு பாடகருக்கு சந்தர்ப்பம் தரக்கூடிய ஐட்டம் இது. இன்று பெரும்பாலும் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை கச்சேரிகளில் ரா.தா.ப. பாடுகிறார்கள். பெயருக்கு ஏற்ப ராகம், தானம், பல்லவி என மூன்று பகுதிகளாகப் பாடப் படுகிறது.

ராகம்

கர்நாடக சங்கீதத்தில் ஒவ்வொரு பாடலும் ஒரு ராகத்தில் பாடப்படுவது தெரிந்ததே. ஒரு பாடலின் வரிகளைப் பாடுமுன் அந்த ராகத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு, அதன் ஸ்வரங்களைக் கொண்டு அந்த ராகத்தின் கட்டமைப்பையும் அழகையும் வெளிக் கொணர்வதுதான் ராகம் பாடுவது எனப்படும். ஸ்வரங்களை விடுத்து ஆ,நா, என்றெல்லாமும் பாடப்படுவதும் உண்டு. ஒரு ராகத்தின் அழகை பாடகர் தன் பாணியில் பாடிக் காட்டும் பொழுது அவரின் கற்பனாசக்தி தெரிய வரும். எடுத்துக் கொண்ட ராகத்தை பல்வேறு வேகங்களில் பாடுவார்கள். பாடகர் ராகம் பாடி முடித்ததும் பக்கவாத்தியமான வயலினில் வயலின் வாசிப்பவர் அவரது கற்பனைப்படி ராக ஆலாபனை செய்வார். இது போன்று பாடகரும் வயலினிஸ்டும் பல முறை மாறி மாறி ராக ஆலாபனை செய்வார்கள். ராக ஆலாபனையின் பொழுது தாள வாத்தியங்களான மிருதங்கம், கஞ்சிரா போன்றவை உடன் இசைக்கப் படுவது இல்லை.

தானம்

ராகம் பாடிய பின் அடுத்த கட்டம் தானம் பாடிவது. தானத்தின் போதும் தாளக் கருவிகள் இசைக்கப் படுவதில்லை என்றாலும் முன்பு பாடிய ராகத்தின் தாள லயங்கள் நன்றாக வெளிவரும்படி பாடும் முறை இது. பொதுவாக 'அனந்தம்' என்ற சொல்லாடலை எடுத்துக் கொண்டு பாடுவார்கள். அந்தம் என்றால் முடிவு, அனந்தம் என்றால் முடிவில்லாமல் எனப் பொருள். அனந்தந்தந்தந்த என முடிவில்லாமல் ஒரு ராகத்தைப் பாட முடியும் என உணர்த்தவே இது. ராக ஆலாபனை போன்று பாடகர் பாடி முடித்த பின் வயலினிஸ்ட் இசைப்பார். பொதுவாக இடைப்பட்ட வேகத்தில் (வி.தெ.மா.கா. - மத்திம காலம்) தானம் பாடுவார்கள்.

பல்லவி

ராகம் தானம் பாடி முடித்தவுடன் வருவது பல்லவி. பல்லவியில்தான் புனையப்பட்ட வரிகளைப் (வி.தெ.மா.கா - சாஹித்யம்) பாடுவார்கள். இவ்வரிகள் பொதுவாக பல்லவி பாடுவதற்கென்றே இயற்றப் பட்ட வரிகளாக இருக்கும். பல்லவி என்பதே 'ப' - பதம் (பாடல்), ல - லயம் (தாளம்), வி - வின்யாசம் (வேறுபாடுகள்) என்பதன் ஆக்கம் என்றே கூறுவர். அதாவது தாளலயத்தோடு ஒரு பாடலை பல்வேறு விதங்களில் பாடுவது என்று பொருள். இப்படிப் பாடும் பொழுது எடுத்துக் கொண்ட ராகத்தில் மட்டுமல்லாது வேறு பல ராகங்களிலும் அதே வரிகளை ராகமாலிகையாகப் பாடுவார்கள். பல ராகங்களில் பாடுவது போல் பல தாளங்களிலும் பாடுவதுண்டு. இதை தாளமாலிகா என்பார்கள். இதன் முடிவில் தாள வாத்தியக்காரர்கள் அவர்களது திறமையைக் காண்பிக்கும் வண்ணம் அவர்களுக்கு நேரம் ஒதுக்குவார்கள். இதற்குத் தனியாவர்த்தனம் எனப் பெயர்.

மொத்தத்தில் ராகம், தானம், பல்லவி பாடுவது என்பது பாடகரின் ஞானத்தையும் அவரது கற்பனா சக்தியின் பிரதிபலிப்பாக விளங்குகிறது என்றால் மிகையாகாது. இது ஒரு அறிமுகம்தான். சிமுலேஷன், திரச போன்றோர் மேலதிக தகவல்கள் தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.

சாம்பிளுக்கு ஜேசுதாஸ் அவர்கள் பாடிய, தோடி ராகத்தில் அமைந்த 'கலைவாணியே கருணை புரிவாயே' என்ற ராகம் தானம் பல்லவி.

Monday, December 11, 2006

யூனிகோடு தமிழுக்கு வேணுமா கோடு?

வெளியூருக்கு கலப்பை இல்லாமல் செல்லும் விவசாயிகளே! வெவ்வேறு இடங்களுக்கு ஒருங்குறி (Unicode) தமிழுக்கு மாற்றும் செயலிகளைத் தேடி அலையாதீர்.

சில பதிவுகளில் இரு பெட்டிகள் கீழே தமிழ் மேலே ஆங்கிலம் என்று பார்த்திருப்பீர்கள் - உங்கள் வலைத்தளத்திலேயே இதை நிறுவ முடியும், கீழ்க்காணும் எளிய வழிமுறைகளை பின்பற்றுங்கள், மொழி மாற்றியை நிறுவுங்கள், இன்புற்று இருங்கள்.

விக்கிப்பசங்க தொல்லையின் பேரில் இந்தப்பதிவையும், தரவிரக்க கோப்பையும் தந்து உதவிய வசந்தனுக்கு எங்கள் நன்றி.


இனி - வசந்தன்

தமிழில் ஒருங்குறிக்கு மாற்றிப் பின்னூட்டமிடுவதற்கான வசதியை தமிழ்வலைப்பதிவர்கள் பலர் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே இவ்வசதியை தமிழ்வலைப்பதிவர்கள் பலர் பயன்படுத்திவருகிறார்கள். ஒன்றுக்கொன்று வித்தியாசமான பல பின்னூட்டச் செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன.

சில செயலிகள்

-குறைந்தபட்சம் இரண்டு செயலிகள் அனைவரின் பாவனைக்குமென்று பகிரங்கமாக வெளியிடப்பட்டன. சிலர் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
சுரதா அண்ணா இப்படியான பின்னூட்டச் செயலியொன்றின் மீயுரை நிரலை வெளியிட்டார்

. அதுபோல் தமிழ்வாணன் என்ற சக வலைப்பதிவரும் இப்படியொரு பின்னூட்டச் செயலியொன்றின் மீயுரை நிரலை வெளியிட்டார்.
இவர்கள் வெளியிட்ட செயலி திருப்தி தராமல்தான் நான் பாவிக்கும் செயலி வேண்டுமென்று கேட்கிறார்களா? அல்லது அப்படி வெளியிடப்பட்டதே தெரியாமல் இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.

வசந்தன் ஆகிய நான் பாவிக்கும் செயலி சுரதாவினாலும் கிருபா சங்கரினாலும் உருவாக்கப்பட்டது
___________

பின்னூட்டச் செயலியின் வரலாறு பற்றி யாராவது எழுதினால் சுவாரசியமாக இருக்கும். தமிழ்வலைப்பதிவுலகத்தின் வரலாற்றில் அதுவும் ஓரங்கமே.
இரண்டு வருடங்களின் முன் நான் வலைப்பதிய வந்தபோது பத்ரியின் வலைப்பதிவில் இப்படியான எழுத்துருமாற்றிப் பின்னூட்டப்பெட்டி இருந்தது. அதைப் பொருத்தும் ஆசையும் வந்துவிட்டது. அவ்வலைப்பதிவின் மீயுரையைப் பார்த்து அதில் பின்னூட்டப் பெட்டிக்குரியதென்று நான் கருதிய அனைத்தையும் படியெடுத்துக்கொண்டேன். பின் என் வலைப்பதிவின் வார்ப்புருவில் அதைச் செருகும் முயற்சியில் இடங்கள் மாற்றிமாற்றிச் செருகி ஒருவாறு சரியான இடத்திற்பொருத்திவிட்டேன். என் வலைப்பதிவில் அழகாக பின்னூட்டப்பெட்டி காட்சியளித்ததோடு பெட்டியில் எழுத்துருவையும் சரியாக மாற்றிக் காண்பித்தது. மிக்க மகிழ்ச்சி.


சோதனை முயற்சியாக பின்னூட்டமொன்றை இட்டுப் பார்த்தேன். அது என் பதவில் வரவில்லை. மீண்டும் இன்னொரு பின்னூட்டம். அதுவும் வரவில்லை. சீ... என்றானது. பிறகு ஒரு பொறிதட்ட, பத்ரியின் குறிப்பிட்ட பதிவுக்குச் (நான் மீயுரை களவெடுத்த பதிவு) சென்று பார்த்தால், சோதனைக்காக நான் என்பதிவில் இட்ட பின்னூட்டங்கள் அங்குச் சிரித்துக்கொண்டிருந்தன. குறிப்பிட்ட புளொக்கர் ஐடி, பதிவு எண் என்பவற்றோடு சேர்த்தே என்னால் மீயுரை பெறப்பட்டிருந்தது. நான் போய்க்கொண்டிருக்கும் வழி தவறென்று புரிந்தது.


இது வேலைக்காகாது என்று விளங்கிக்கொண்டேன். அப்போது நான் வலைப்பதிவுலகத்துக்குப் புதியவன். நாலைந்து பதிவுகள்தாம் இட்டிருந்தேன். இந்தப் பின்னூட்டப்பெட்டி உதவியைக் கேட்டால் தருவார்களா என்ற ஐயத்தில் பேசாமல் இருந்துவிட்டேன். வலைப்பதிவில் இவ்வளவுக்கு சகோதரத்துடன், நட்புடன் பழகுவார்கள் என்பதெல்லாம் அப்போது நான் யோசித்ததில்லை. இந்த உதவியைச் செய்ய முன்வந்தாலும் கட்டணம் அறவிடுவார்கள் என்றுகூட நினைத்திருந்தேன்.

பின் வலைப்பதிவுகளில் நடந்த சுவாரசிய உரையாடல்கள், கலாயத்தல்கள், அறுவைகள் என்பன பிடிபட்டபின் துணிச்சல் வந்தது. (பின்னூட்ட மட்டுறுத்தல் நடைமுறைக்கு வருமுன் பதிவுகளிலும் பின்னூட்டத் தொடரிலும் ஓர் உயிர்ப்போட்டம் இருந்தது உண்மை.)


பிறகு கிருபா சங்கரிடம் தனிமடல் போட்டு தேவையானதைப் பெற்றுக்கொண்டேன். நண்பர் ஒருவரின் உதவியோடு அமைப்பில் சின்ன மாற்றங்கள் செய்து பெட்டி தயாரித்து வலைப்பதிவில் இட்டேன்.

முன்பு எழுத்துரு மாற்றும் முறைக்கான இரு தெரிவுகளும் வெறுமையாகவே இருந்தன. அதிலொன்றையும் தெரிவு செய்யாமல் பின்னூட்டமிடுவோரின் பின்னூட்டங்கள் "Undefine" என்று மட்டும் வந்தன.பின் இதை நிவர்த்தி செய்யும் வகையில் பாமினி எழுத்துரு முறையை நியமத் தெரிவாக்கினேன்

இதுதான் என் வலைப்பதிவில் பின்னூட்டப்பெட்டி பிறந்தகதை. பிறகு சில பதிவாளர்கள் இவ்வசதிக்குரிய மீயுரையைப் பெற்றுத் தங்கள் வலைப்பதிவுகளில் நிறுவிக்கொண்டார்கள்.


இந்த வடிவம் மட்டுமன்றி வேறும் பல வடிவங்களில் பலர் பின்னூட்டப் பெட்டிகள் வைத்துள்ளார்கள் . மழை ஷ்ரேயா, சாத்தான்குளத்தான், கிருபா சங்கர் போன்றோர் வித்தியாசமான வடிவங்களை வைத்துள்ளார்கள்.
இந்தப் பின்னூட்ட எழுத்துருமாற்றிச் செயலிக்குரிய அனைத்து நன்றியும் சுரதாவையும் கிருபாசங்கரையுமே சாரும் .
______________________________________________________

சரி . இனி இப்பின்னூட்டப் பெட்டி செயற்படும் முறைபற்றிய சிறு விளக்கம்.
இது 'அனாமதேயப் பின்னூட்டங்களை அனுமதிக்கும்" வலைப்பதிவுகளில் மட்டும்தான் செயற்படும். புளொக்கர் கணக்குள்ளவர்கள் மட்டும் பின்னூட்டமிடும் வசதியைக் கொண்ட வலைப்பதிவுகளில் இச்செயலி செயற்படாது. செயலியில் இருபெட்டிகள் காணப்படும். அவற்றுக்கு மேல இரு தெரிவுப் பொத்தான்கள் காணப்படும். 'பாமினி' எழுத்துரு முறை நியமத் தெரிவாக்கப்பட்டிருக்கும். எழுதுபவர் விரும்பினால் ஆங்கில உச்சரிப்பு முறைக்கு மாற்றலாம்.


மேலுள்ள பெட்டியில் உங்கள் தெரிவுக்குரிய எழுத்துருவில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்.
ஆங்கிலமும் தமிழும் கலந்து ஒரேதடவையில் உங்களால் எழுத்துருவை மாற்றி எழுத முடியாது.


முதலில் தமிழில் அனைத்தையும் எழுதி முடித்தபின், கீழுள்ள பெட்டியில் (ஒருங்குறிக்கு மாற்றப்பட்ட எழுத்துக்கள் இருக்கும் பெட்டி) தேவையான இடத்தில் ஆங்கிலத்தில் நேரடியாகத் தட்டச்சலாம். அல்லது தமிழில் தட்டியதை ஒரு Notepad or Wordpad இல் ஒட்டிவிட்டு அக்கோப்பில் வைத்து தேவையான இடங்களில் அங்கிலத்தை எழுதி முழுமையாக்கலாம்.


நீங்கள் பின்னூட்டப்பெட்டியில் தட்டச்சி முடித்தபின் அதற்குக் கீழ் 'பெயர்' என்றிருக்கும் சிறிய பெட்டியில் உங்கள் பெயரை எழுதவும். இப்பெட்டியில் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம். தமிழில் பெயரெழுத விருப்பமென்றால் பின்னூட்டதுடன் சேர்த்து உங்கள் பெயரையும் எழுதி ஒருங்குறிக்கு மாற்றியபின் தமிழிலுள்ள உங்கள் பெயரை வெட்டியெடுத்து பெயர்ப்பெட்டியில் ஒட்டலாம்.

இவையனைத்தும் முடிந்தபின் "கருத்தைப் பதிவு செய்யவும்" என்ற பொத்தானை அழுத்தவும்.

அதை அழுத்தியதும் புளொக்கரின் பின்னூட்டமிடும் பக்கம் திறந்து அதில் பின்னூட்டப்பெட்டி வெறுமையாக இருக்கும். ஆனால் உங்கள் பின்னூட்டம் பதியப்பட்டுவிடும். மட்டுறுத்தல் செய்யப்பட்ட வலைப்பதிவாயின் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கும்.

இங்குத்தான் பலர் தேவையற்ற வேலையொன்றைப் பார்க்கிறார்கள்
. அதாவது தங்கள் பின்னூட்டம் பதியப்படவில்லையென்று நினைத்து மீண்டுமொருமுறை அதே பின்னூட்டத்தை புளொக்கரின் பின்னூட்டப் பெட்டியிலும் ஒட்டுவார்கள்.

என் வலைப்பதிவுக்கு இந்த வசதி பாவிப்போரிடமிருந்து பெரும்பாலும் இரண்டிரண்டு பின்னூட்டங்கள் வந்துகொண்டிருந்தன.
வடுவூர் குமாருக்கு இச்செயலியைக் கொடுத்தபோதும் அவருக்கும் இதே குழப்பம் இருந்தது எனக்குத் தெரியவந்தது.


ஆகவே மக்களே , இச்செயலி பாவிக்கும்போது ஒருமுறை நீங்கள் சரியாகப் பின்னூட்டமிட்டால் சரி. புளொக்கரின் பின்னூட்டப்பெட்டியில் இரண்டாம் முறையாகப் பின்னூட்டமிடத் தேவையில்லை.
_____________________________________________________

சரி . இனி மீயுரையைப் பொருத்துவதைப் பற்றிப் பார்ப்போம்.


மீயுரை முழுவதையும் படியெடுத்துக் கொள்ளுங்கள். அதற்குமுன் மீயுரையில் இருக்கும் தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரிகின்றனவா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரியாத பட்சத்தில் மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டாம்.

உங்கள் வலைப்பதிவின் வார்ப்புருப் பக்கத்துக்குச் செல்லவும். அங்கு உங்கள் வார்ப்புருவுக்குரிய மீயுரைகளைக்(HTML) காணலாம். அதில் '< ! -- end . post -- >' என்ற வரியைத் தேடிக்கண்டுபியுங்கள். அவ்வரிக்குமேலே கோப்பிலுள்ள அனைத்து மீயுரைகளையும் படியெடுத்து ஒட்டிவிடுங்கள் அவ்வளவுதான் வேறொன்றும் செய்யத்தேவையில்லை.

பின் சேமித்து Publish செய்தால் சரி.

நான் சொல்லியுள்ள முறைப்படி செய்தால் பின்னூட்டங்களுக்கும் பதிவுக்கும் இடையில் பின்னூட்டப் பெட்டி தோன்றும்

உங்களுக்குப் பிடித்தபடி பின்னூட்டப்பெட்டியின் அமைவிடத்தை மாற்ற வேண்டுமாயின் மீயுரையை அதற்கேற்றபடி இடம்மாற்றி ஒட்ட வேண்டும். பொதுவாக பின்னூட்டங்களின் முடிவில் இச்செயலியிருந்தால் நன்று என நினைப்போருண்டு.

பெட்டிகளின் அளவுகளை மாற்றவேண்டியிருந்தாலும் நீங்களே முயற்சிக்கலாம். அதைவிட நிறங்கள், கோடுகள் என்று சில மாற்றங்களை உங்கள் விருப்பம்போல் முயன்று பார்க்கவும்.

*** இந்தச் செயலியை நிறுவ முன்பு நீங்கள் உங்கள் வார்ப்புருவுக்குரிய மீயுரையைப் படியெடுத்துச் சேமித்துவைத்துக் கொள்வது நன்று. ஏதாவது பிசகு வந்தால் சேமித்து வைத்ததை இட்டு பழையபடி கொண்டு வந்துவிடலாம். ***

இதற்குத் தேவையான மீயுரைத் துண்டை இங்கே தரவிறக்கிக்கொள்ளலாம்.

Thursday, November 30, 2006

உலகத்திலேயே பெரிய கொட்டை எது?

நம்ம ஓகை நடராஜன் இருக்காரே, அவரு வந்து எதையோ சொல்ல வரும் போது எதையோ கேட்டு நம்மளை இப்படி ஒரு நிலமைக்கு கொண்டு வந்து விட்டுட்டாரு. அவரு ஒரு பதிவில் பின்னூட்டமாய் சொன்னது இது

"இங்கே கேள்விகளைக் கேளுங்கள்" எனறு கொட்டை எழுத்துக்களில் (பனங்கொட்டை அளவில்) (ஒரு துணைக் கேள்வி - கொட்டைகளில் பெரிய கொட்டை எது?) போடுங்கள்."
இந்த துணைக்கேள்வி பார்க்க சுலபமா இருக்கே, இதுக்கு பதிலை சொல்லிடலாமேன்னு படிக்க ஆரம்பிச்சாத்தான் தெரியுது, மனுசன் நம்மளை எப்படி எசகு பிசகா மாட்டி விட்டு இருக்காருன்னு. முதலில் இந்த தலைப்பு. இதை வெச்சு நம்ம வ.வா.ச. பசங்க என்ன எல்லாம் கிண்டல் பண்ணப் போறாங்களோ. அதை விடுங்க.

முதலில் இந்த கொட்டை அப்படின்னா என்னான்னு பார்க்க போனா இரண்டு அர்த்தம் இருக்காம் - Nut மற்றும் Seed. அது மட்டுமில்லை "The term nut is sometimes used on seeds, but nuts and seeds are not the same thing. A nut is a seed, but not all seeds are nuts." இப்படி 'விசு'த்தனமா போகுது விஷயம். அதெல்லாம் ஆகாது. எங்க ஊரில் Nut, Seed எல்லாம் ஒண்ணுதான். அதுக்கு பேர்தான் கொட்டை அப்படின்னு ஒரு முடிவு எடுத்து, அதுக்கு அப்புறம்தான் நம்ம ஔவையார் சொன்னா மாதிரி 'பெரியது கேட்கின்' அப்படின்னு ஆரம்பிச்சோம்.

சரி, விஷயத்துக்கு வருவோம். செஷல்ஸ் நாட்டில் இரண்டே இரண்டு தீவுகளில் மட்டுமே வளரும் Coco de mer என்ற மரத்தின் கொட்டைதான் உலகிலேயே மிகப் பெரிய கொட்டையாம். இரட்டைத் தேங்காய் போல காட்சியளிக்கும் இது 50 செ.மி. சுற்றளவு வரை பருத்தும், 30 கிலோ எடை வரை வளரும். இதோ சில புகைப்படங்கள்.



நன்றாக முற்றிய கொட்டை



மரத்தில் இருக்கும் பொழுது

இந்த சிறு தீவுகளில் மட்டுமே இருக்கும் இவ்வகை மரங்கள் இப்பொழுது அழிவின் விளிம்பில் இருப்பதால் பாதுகாக்கப்படும் தாவரயினங்களின் பட்டியலில் உள்ளது. ஒரு விஷயம், Lodoicea callipyge என்ற இத்தாவரத்தின் விஞ்ஞான பெயரில் callipyge என்ற வார்த்தைக்கு பொருள் அழகான பின்பக்கம் என்பதாகும். மீண்டும் ஒரு முறை முதல் படத்தைப் பாருங்கள். :)

சரி, எல்லாவற்றிலும் பெரிதாக பார்த்துப் பழகிய அமெரிக்கர்கள் சும்மா இருப்பார்களோ? அவர்கள் பல விதமான கொட்டைகளின் பெருமையை பறைசாற்ற கட்டிய கான்க்ரீட் கொட்டைகளைப் பாருங்கள்.


வேர்க்கடலைக்காக



Pecan கொட்டைக்காக

இன்னும் விபரங்களுக்கு

சுட்டி 1
சுட்டி 2

சந்தேகம் தீர்ந்ததா ஓகையாரே! :-)

Tuesday, November 28, 2006

Selective coloring - எப்படி?

புகைப்படத்தில் தேவையான பகுதியை மட்டும் வண்ணத்திலும் தேவையற்ற பகுதிகளை கருப்பு-வெள்ளையாக மாற்றுவதன் மூலம் வண்ணப் பகுதிக்கு பார்வையாளரின் கவனைத்தை எளிதில் ஈர்க்க முடியும்.

இந்த படத்தில் முக்கிய பகுதி மஞ்சள் நிற சூரியக் காந்தி




பார்வையாளரின் கவனத்தை பூவின் மீது உடனடியாக விழ வைக்க பூவைத் தவிர மற்ற பகுதிகளை கறுப்பு வெள்ளைக்கு மாற்றி இருக்கும் படம் இது.



இதை செய்வது மிக எளிது. இணையத்தில் இலவசமாய் கிடைக்கும் GIMP இல் செய்யும் முறை .


GIMP ல் படத்தை திறவுங்கள். ( File->open )

இதுப் போன்ற மூன்று சாளரங்கள் திறக்கப்படும். Layers திறக்கபடாவாவிட்டால் ( Ctrl+L) மூலம் அந்த பகுதியையும் திறக்கச் செய்யுங்கள்.




layers பகுதியில் Background என்ற பெயரோடு படத்தின் மூலம் இருக்கும். இந்த போன்று மற்றுமொரு லேயரை உருவாக்க , Duplicate Layer என்கிற இந்த பொத்தானை அமுக்கவும்





Background Copy என்ற பெயரில் ஒரு புதிய லேயர் உருவாகும். இந்த புதிய லேயர் தேர்ந்து எடுக்க அந்த பெயரின் மீது க்ளிக்கவும். தேர்ந்து எடுக்கப்பட்ட லேயர் நீல நிறத்துக்கு மாறும்



இப்போது இந்த புதிய லேயரை கருப்பு வெள்ளைக்கு மாற்ற வேண்டும். இதை செய்ய Destaurate தேர்வு செய்யுங்கள். இது ( Layer-> colours -> Desaturate ) என்ற இடத்தில் இருக்கும்.





இப்போது நமக்கு தேவையான வண்ணப் பகுதியை மேலேயுள்ள கருப்பு வெள்ளைப் பகுதியில் இருந்து நீக்க வேண்டும். இதை செய்ய எளிய வழி, Eraser தேர்ந்து எடுக்கவும்.




இனி தேவையான பகுதிகளை அழிக்க வேண்டியதுத்தான் பாக்கி. அழிக்க அழிக்க கீழேயுள்ள படத்தின் முலத்தில் உள்ள வண்ணப்பகுதி வெளிப்பட ஆரம்பிக்கும்.





அவ்வளவுத்தான். ரெடி. இனிப் படம் காட்ட ஆரம்பிக்க வேண்டியதுதான்.

Monday, November 27, 2006

தியோடலைட் - ஏன் எதற்கு எப்படி?

தருமியின் இன்னொரு கேள்வி

ரோடு போடும்போது நம்ம ஊர்களில்ஒருத்தர் மூணு கால் இருக்கிற ஸ்டாண்டு ஒன்றில் ஒரு டெலஸ்கோப் (?) மாதிரி ஒண்ணு வச்சிருப்பார். தள்ளி இன்னொருத்தர் ஒரு ஸ்கேல் வச்சிக்கிட்டு நிற்பார். அவங்க என்ன பண்றாங்க? அத எப்படி பண்றாங்க??
அந்தக்கருவியின் பெயர் தியோடலைட். நில அளவைக்கும் உயரங்களை அளப்பதற்கும் கட்டுமான வேலைகளிலும் பலப்பல விதமாக உபயோகப்படும் கருவி. (என் தந்தை நில அளவைத் துறையில் இருந்ததால் இக்கருவி எனக்கு 7 -8 வயதிலேயே பரிச்சயமாகிவிட்டது).

முதலில் இக்கருவியின் கான்சப்டைப் பார்ப்போம்.

ஒரு கொடிக்கம்பம் இருக்கிறது, அதன் உயரத்தை அளக்க விரும்புகிறீர்கள். என்ன செய்வீர்கள்? ஒரு பையனை இஞ்ச் டேப்புடன் மேலே அனுப்பி அளக்கச் சொல்லலாம். அல்லது கொடிக்கம்பத்தைக் கழட்டி, தரையில் வைத்து நீளத்தை அளக்கலாம் (சர்தார்ஜி ஜோக்கில் வருவது போல உயரம் வேறு, நீளம் வேறு எனக் குழப்பிக்கொள்ளாமல் இருந்தால் சரி). ஆனால் ஒரு லைட் ஹவுஸின் உயரத்தை? 100 மாடிக் கட்டடத்தின் உயரத்தை?

ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்க்கும்போது, அந்தக்கட்டடத்தின் அடிமட்டமும், உச்சியும் ஏற்படுத்தும் ஆங்கிள்கள் வேறுபடும் அல்லவா? இதை இன்னொரு பொதுப்புள்ளியில் இருந்து பார்க்கும்போது, அந்த ஆங்கிளை வைத்து, சைன் தீட்டா, காஸ் தீட்டா எல்லாம் போட்டு திரிகோணமிதி வைத்துக் கணக்குப் போட்டால் உயரம் தெரிந்துவிடும் - இல்லையா?


இந்த ஆங்கிளைத் துல்லியமாகக் கணக்கெடுக்கத்தான் தியோடலைட் பயன்படுகிறது. இது ஆதாரமாக ஒரு டெலஸ்கோப் போலத்தான். கிடைமட்டமாகவும், நெட்டுக்குத்தாகவும் அசைக்கவல்ல டெலெஸ்கோப். இதனுடன் இணைந்த பாகைமானிகள் (கிடைக்கு ஒன்று, நெட்டுக்கு ஒன்று) எவ்வளவு ஆங்கிள் அசைத்திருக்கிறோம் என்று காட்டும்.



1. ஒரு ரெபரன்ஸ் புள்ளியை முதலில் பார்த்து ஆங்கிளைக் குறித்துக்கொள்ளவேண்டும்,

2. அளக்கவேண்டிய கட்டடத்தின் அடிமட்டத்தை டெலஸ்கோப்பில் பார்த்து ஆங்கிளைக் குறித்துக்கொள்ளவேண்டும்

3.அளக்கவேண்டிய கட்டடத்தின் உச்சியை டெலஸ்கோப்பில் பார்த்து ஆங்கிளைக் குறித்துக்கொள்ளவேண்டும்.

இதில், ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளியைக் கழித்தால், அடிமட்டமும், உச்சியும் ஏற்படுத்தும் ஆங்கிள் மாற்றம் தெரிந்துவிடும், உயரத்தைக் கண்டுபிடித்து விடலாம். சமதரையில் உள்ள நிலத்தை அளப்பதற்கும் இதே முறைதான். நிலத்தின் ஒரு எல்லை, மற்றொரு எல்லை, ரெபரன்ஸ் புள்ளி - கிடைத்தது ஆங்கிள்.

இப்போதெல்லாம் இதிலும் எலக்ட்ரானிக்ஸ் புகுந்துவிட்டது. கீழே இருப்பது நிக்கானின் லேட்டஸ்ட்.



மூணு குச்சியைப் பற்றியும் கேட்டிருக்கிறார். ட்ரைபாட் என்பது எந்தச் சமமற்ற தளத்திலும் சீராக நிற்கக்கூடிய அமைப்பு. நாற்காலியில் ஒரு கால் சரியில்லை என்றால் ஆடும். முக்காலி ஆடாது. பெரும்பாலும் தியோடலைட் உபயோகப்படுத்தும் இடங்கள் சமச்சீரற்றவையாகத் தான் இருக்கும் என்பதால் முக்காலி.

Wednesday, November 22, 2006

பால் பேரிங் - ஏன் எதற்கு எப்படி?

தருமியின் கேள்வி: பால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள்?

இந்தக்கேள்வியை ஒரு இயந்திரவியல் பொறியாளரிடம் கேட்டால் 3 மணிநேரம் பேசுவார், ஒரு ஆசிரியரிடம் கேட்டால் 5 மணிநேரம் பேசுவார். இரண்டும் கலந்த என்னிடம் கேட்டால்? முடிவே இல்லாமல் பேசிக்கொண்டே இருப்பேன்:-)

முதலில் பேரிங்குகள்:

எந்த இயந்திரத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் இயங்கும், இயங்காப் பொருள்கள் (moving & Stationary) கலந்தே இருக்கும். மின்விசிறியை எடுத்துக்கொள்ளுங்கள் - அதன் பிளேடுகளும், பிளேடுகளைத் தாங்கும் மோட்டாரும் சுற்றுகின்றன, ஆனால் உத்தரத்தில் மாட்டியிருக்கும் ட்யூப் சுற்றுவதில்லை.. அல்லவா?

இயங்குபொருளுக்கும், இயங்காப்பொருளுக்கும் இடையே உள்ள ஒப்பு இயக்கம் (Relative Motion), உராய்வையும்(Friction), தேய்மானத்தையும் (wear) அதிகப்படுத்தும். கடினமானது (high Hardness) தேயாது, கடினம் குறைவானது (low Hardness) தேயும். தேய்மானம் காரணமாக மாற்றவேண்டிவரும்போது, அதன் விலை பயமுறுத்தும். எனவே, தேவை ஒரு குறைந்த விலையில் மாற்றப்படக்கூடிய ஒரு தியாகி (sacrificial material).

Photobucket - Video and Image Hosting

நூற்றுக்கணக்கான வகையில் பேரிங்குகள் இருந்தாலும், அவற்றை இரண்டு பெரிய வகைகளில் பிரிக்கலாம். உராய்வு வகை (friction), உராயா வகை(anti friction).

உராய்வு வகை பேரிங்குகள், இயங்கும் பொருளோடோ, இயங்காப் பொருளோடோ கச்சிதமாக (tight fit)இணைக்கப்பட்டு, மற்றதுடன் உராயும், அதன் மூலம் ஏற்படும் தேய்மானத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு
கடினம் குறைவானதாக இருப்பதால், இது மட்டுமே தேயும். ஆயுள் முடிந்தவுடன் மாற்றப்படும். இவ்வகை பேரிங்குகள் உய்வு எண்ணெய் (Lubricating Oil)இல்லாமல் இயங்காது. எஞ்சின்களில் உள்ள பெரும்பாலான பேரிங்குகள், புஷ்ஷிங்குகள் இவ்வகையைச் சார்ந்தனவே. (எனவேதான் எஞ்சினில் எண்ணெய் இல்லாமல் போனால் உடனடியாக - 2-3 நிமிடங்களுக்குள் பெரிய பழுது ஏற்பட்டு விடுகிறது).

உராயா வகை, சுற்றும் பொருளுடனும், சுற்றாப்பொருள் இரண்டுடனும் கச்சிதமாகப் (tight fit)பொருத்தப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட பேரிங்குகளில் மூன்று முக்கிய பாகங்கள் - இயங்குபொருளுடன் ஒரு பகுதி,(Inner Race) இயங்காப்பொருளுடன் இன்னொன்று(outer Race), இரண்டுக்கும் இடையில் தேய்வதற்கென்றே உள்ள பந்துகள் (Balls / Rollers)) (அல்லது உருளைகள் - இதிலும் பலவகைகள் உண்டு). இயக்கத்தின் சக்தி எந்தத் திசையிலிருந்து பாதிக்கும் என்பதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட பலவகைகள் - பால் பேரிங், டேப்பர் ரோலர் பேரிங், த்ரஸ்ட் பேரிங்.. என்றெல்லாம் பல வகைகள். படம் பாருங்கள்.
\n \n
Photobucket - Video and Image Hosting

இப்போது, கேள்விக்கு வருவோம். பேரிங் எப்படித் தயாரிக்கப்படுகிறது? மூன்று பாகங்களும் தனித்தனியாக தயாரிக்கப்படுகிறது. வெளி உருளை(outer race), உள் உருளை(inner race) இரண்டும் பழைய காலத்தில் லேத், போரிங் மெஷின் போன்றவற்றில் தயாரிக்கப்பட்டன. இப்போதெல்லாம் இதற்கென தனிப்பட்ட ப்ரொக்ரெஸிவ் ப்ரோச்சிங் (progressive Broaching) இயந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. நீளமான ஒரு கருவி, மூலப்பொருளை வைக்கவேண்டிய இடத்தில் வைத்து ஒரே இழு..தேவையான ஷேப் வந்துவிடும். படம் பாருங்கள்.
Photobucket - Video and Image Hosting

பிறகு வெப்பம் ஏற்றி இறக்கி விளையாடி(Heat Treatment) தேவையான கடினப்பதத்தையும் (Hardness) மற்ற குணங்களையும் (ductility, malleability) கொண்டுவந்துவிடுவார்கள்.

பால் தயாரிப்பது மிகவும் சுலபம். இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, நீளக்கம்பியில் பாலுக்குத் தேவையான அளவு இரும்பை வெட்டி எடுக்கும் ஒரு இயந்திரம், அதை மேலே ஒரு அரைவட்ட டை(Die), கீழே ஒரு அரைவட்ட டை.. கரப்பான் பூச்சியை புத்தகத்தால் அடிப்பது போல ஒரே அடி.. பால் வந்து விழுந்துவிடும் (forging). இன்னொரு முறையில், உருக்கிய இரும்புக்குழம்பை சுற்றும் கலனிலிருந்து (centrifuge) சொட்டுச்சொட்டாக விடுவார்கள். சுற்றுவதாலும், வேகமாகக் குளிர்வதாலும் பந்து போல் ஆகிவிடுகிறது. (உலகம் கூட இப்படித்தான் உருண்டையானதாச் சொல்றாங்க.. நான் அதைப்பாத்ததில்லை, இதைப்பாத்திருக்கேன்:-)

இப்படி தனித்தனியா தயாரிக்கப்பட்ட பொருள்கள், இயந்திரத்தால் கோர்க்கப்பட்டு, மேலே கீழே தகடுகளை வைத்து ரிவெட் அடித்துவிட்டால் பால் பேரிங் தயார்.
Photobucket - Video and Image Hosting

பால் பேரிங்குகளின் அடையாளம் அதன் மேல் பொறிக்கப்பட்டுள்ள நான்கெழுத்து எண். இந்த எண், அதன் உள்வட்ட அளவு, வெளிவட்ட அளவு மற்றும் தடிமன் ஆகியவற்றைக் குறிப்பது. இந்தக் குறியீடு SKF எண் என்று சொல்லப்படுகிறது. வேறு பல நிறுவனங்களும் பேரிங் தயாரித்தாலும், SKF தான் உலகின் பெரிய பால்பேரிங் தயாரிப்பாளர் என்பதால் முதல் மரியாதை!

Saturday, November 18, 2006

மைக்ரோவேவில் தண்ணீர் சுட வைக்கலாமா?

பல விதமான கதைகள் நமக்கு மெயிலில் வருவதுண்டு. இக்கதைகள் பெரும்பாலும் உண்மையாக இருப்பதில்லை, வெறும் கட்டுகதைகளே. அது போன்று வந்த இந்த மெயிலைப் பாருங்கள்.

"சில நாட்களுக்கு முன் காப்பி போடுவதற்காக என் மகன் மைக்ரோவேவ் அவனில் தண்ணீர் சுட வைத்தான். சுட வைத்த நேரம் முடிந்த பின் அதனை எடுத்த பொழுது நீர் கொதிக்கவில்லையே என அவன் பார்க்கும் பொழுது , அந்த தண்ணீர் அப்படியே எரிமலை போல் பொங்கி அவன் முகத்தில் அடித்தது. அதில் அவனுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. நீங்களும் மைக்ரோவேவில் தண்ணீர் கொதிக்க வைக்கும் பொழுது ஜாக்கிரதையாய் இருக்கவும்."

இது உண்மைச் சம்பவமா, கட்டுக்கதையா எனத்தெரியவில்லை. ஆனால் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவம் நடக்கச் சாத்தியக் கூறுகள் இருக்கிறதா? அதைப் பற்றி தெரிந்து கொள்ளத்தான் இந்த பதிவு. வழக்கம் போல் ஒரு வரியில் பதில் சொல்ல வேண்டுமானால்,

இச்சம்பவம் நடக்க சாத்தியக் கூறுகள் உள்ளது, ஆனால் நடப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

இனி சற்று விபரமாகப் பார்க்கலாம். இது நடக்கக் காரணம் 'அதிசூடேற்றம்' (SuperHeating). அப்படின்னா ஒரு திரவம், அதன் கொதிக்கும் சூட்டை விட அதிகமாகச் சூடாக்கப்படுதல். இப்படி நடக்கும் பொழுது மிக விரைவில் அந்த திரவம் ஆவியாகி விடும். அது திடீரென வெளியேறும் பொழுது அந்த திரவம் வெடிப்பது போலத் தெரிகிறது. ஆனால் இப்படி நடக்க சூழ்நிலைகள் சரியாக அமைய வேண்டும். இந்தப் படத்தைப் பாருங்களேன்.



இது எப்படி நடக்கிறது? நீரை சுட வைக்கும் பொழுது அதன் மாலிக்யூல்களின் கட்டமைப்பு (துடிகள் - தமிழ்) உடைந்து ஆவியாக மாறுகிறது. இப்படி ஒரே சமயத்தில் பல மாலிக்யூல்கள் இடையேயான கட்டமைப்பு உடைந்தால்தான் ஒரு சிறு குமிழி போல் ஆவி சேர்கிறது. இதில் மேலும் மேலும் ஆவி சேர்ந்து பெரிதாகி அது தண்ணீரின் மேல் மட்டத்திற்கு வந்து வெடித்து காற்றில் சேர்கிறது. இதுதான் சாதாரணமாக நீர் கொதிப்பதின் ரகசியம்.

ஆனால் சில சமயங்களில் அந்த முதல் ஆவிக்குமிழிகள் உண்டாகாமல் போவதுண்டு. அந்த சமயங்களில் நீர் கொதிநிலையையும் தாண்டி மேலும் சூடாவதுண்டு. அந்நிலையின் பெயர்தான் 'அதிசூடேற்றம்' (SuperHeating). அப்படி இருக்கும் பொழுது அந்த பாத்திரத்தை ஆட்டினாலோ அல்லது அதில் சர்க்கரை, காப்பித்தூள் என எதையாவது போட்டாலோ அது இந்த ஆவிக் குமிழிகள் உண்டாக ஏதுவாகிறது. இப்படி ஒரேடியாக இக்குமிழிகள் உண்டாகி மேலே வருவதால், அது ஒரு வெடிப்பு போல தோன்றுகிறது. இது மைக்ரோவேவில் உண்டாக சாத்தியங்கள் அதிகம். ஏனென்றால் இங்கு தண்ணீர் இருக்கும் பாத்திரம் சூடாகாமல் மைக்ரோவேவ் கதிர்கள் நேராக தண்ணீரைச் சூடாக்குவதினால் இது போல ஆகலாம்.

இப்படி ஆக வேண்டும் என்றால், தண்ணீர் கொதிக்க வைக்கப்படும் பாத்திரம் கண்ணாடிப் பாத்திரங்கள் போல் மிக வழவழப்போடு இருக்கவேண்டும். தண்ணீர் சாதாரணமாக கொதிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட அதிக நேரம் சுட வைக்கப் பட வேண்டும். பாத்திரத்தில் ஒரு சிறிய கீறல் இருந்தால் கூட இது போல் நடக்காது.

இது போல் நடக்காமலிருக்க
  • தண்ணீரை கொதிக்க வைக்கும் பொழுது அதற்குண்டான நேரத்தை விட அதிகம் வைக்க வேண்டாம்.
  • மைக்ரோவேவிலேயே ஒரு நிமிடம் விட்டு விட்டு, அதன் பின் எடுங்கள்.
  • வெளியே எடுத்த பின் அதில் காப்பி, சர்க்கரை போன்றவற்றை போடும் பொழுது முடிந்த அளவு விலகி நின்று கொள்ளுங்கள்.
  • ஒரு மரத்தாலான கலப்பான் (அதாங்க Stirrer) ஒன்றை தண்ணீரில் போட்டு அதன் பின் கொதிக்க வையுங்கள்.

கேள்வியை முன் வைத்த Sridhar Venkat அவர்களுக்கு நன்றி.

மேலும் விபரங்களுக்கு

சுட்டி 1
சுட்டி 2
சுட்டி 3

Disclaimer

"Wikipasanga" does not represent or endorse the accuracy or reliability of any of the information, content or advice contained on, distributed through, or linked, downloaded or accessed from any of the pages contained on this weblog, nor the quality of any products, information or other materials displayed, purchased, or obtained by you as a result of an advise or any other information or offer in or in connection with this blog.

You hereby acknowledge that any reliance upon any Materials/Content/Advice shall be at your sole risk.

"Wikipasanga" and its team members reserve the right, in its sole discretion and without any obligation, to make improvements to, or correct any error or omissions in any portion of its blog posts / content.

IN NO EVENT SHALL "Wikipasanga" BE LIABLE FOR ANY DIRECT, INDIRECT, INCIDENTAL, PUNITIVE, OR CONSEQUENTIAL DAMAGES OF ANY KIND WHATSOEVER WITH RESPECT TO THE BLOG, ITS POSTS, CONTENTS, DESCRIPTIONS, ADVICE CONTAINED THEREIN.

"Wikipasanga" encourages you to exercise discretion while browsing the weblog as it may direct you to sites containing information that some people may find offensive or inappropriate. "Wikipasanga" makes no representations concerning any endeavor to review the content of sites listed in its posts / comments section or any of the blog posts, and so "Wikipasanga" isn't responsible for the accuracy, copyright compliance, legality or decency of material contained in sites listed and in the blog / posts.

If you submit your question for a response, you understand and agree that your question and the Wikipasanga answer may be posted on this Weblog, though names and other obvious identifiers will be removed upon request.

GENERAL DISCLAIMER:
Advice / How-to Descriptions at wikipasanga is designed to help users find and understand general information on certain subject matters . This Advice Area contains the advice and comments of individuals who may or may not be trained in the specified Subjects and is designed in good will to provide useful advice in regard to such Subjects. "WIKIPASANGA" guarantees neither the accuracy nor completeness of advice contained in this blog. The advice and comment of any Expert do not constitute the advice or comment, nor do they necessarily reflect the views of all the members of "Wikipasanga". These posts are not intended to provide a basis for action in particular circumstances without consideration by a competent professional. If professional advice or other expert assistance is required, the services of a competent professional person should be sought. "Wikipasanga" weblog and its contributors expressly disclaim any and all responsibility for any liability, loss, or risk, personal or otherwise, which may be or is incurred as a consequence, directly or indirectly, of the use and application of any advice / posts or comment by any of its members in "wikipasanga.blogspot.com".


MEDICAL DISCLAIMER:
Certain sections of this BLOG deal with health and medical related issues. Please note that such Advice is not intended to create any physician-patient relationship or supplant any in-person medical consultation or examination. Always seek the advice of a trained health professional with any questions you may have regarding a medical condition and before seeking any treatment. Proper medical attention should always be sought for specific ailments. Never disregard professional medical advice or delay in seeking medical treatment due to information obtained on wikipasanga.blogspot.com. Any information displayed on this BLOG/CONTENT/EXTERNAL LINKS is not intended to diagnose, treat, or cure. This weblog is for information purposes only. The information on this blog is not intended to replace proper medical care.

"Wikipasanga" contains articles on many medical topics; however no warranty whatsoever is made that any of the articles are accurate. There is absolutely no assurance that any statement contained or cited in an article touching on medical matters is true, correct, precise, or up-to-date. Several such articles are written, in part or in whole, by nonprofessionals. Even if a statement made about medicine is accurate, it may not apply to you or your symptoms.

The medical information provided on "Wikipasanga" is, at best, of a general nature and cannot substitute for the advice of a medical professional (for instance, a qualified doctor/physician, nurse, pharmacist/chemist, and so on). "Wikipasanga" is not a replacement for a doctor.

None of the individual contributors of "Wikipasanga" nor anyone else connected to "Wikipasanga" can take any responsibility for the results or consequences of any attempt to use or adopt any of the information presented on this weblog.


Nothing on "Wikipasanga" blog should be construed as an attempt to offer or render a medical opinion or otherwise engage in the practice of medicine.

Wikipasanga reserves the right to modify this disclaimer from time to time, without express notifications to the visitors of this blog.

Thursday, November 16, 2006

கேள்வியின் நாயகனே!

நம்ம மக்கள்ஸ் கிட்ட கேள்வி கேட்கலாம் அப்படின்னு ஒரு வார்த்தைதான் சொன்னோம். கேள்வி கேட்க நம்ம மக்களுக்கு சொல்லிக் கொடுக்கணுமா? சும்மா தூள் கிளப்பிட்டாங்க. கேள்விங்களை மெயிலில் அனுப்புங்கன்னு சொன்னா, அத விட்டுட்டு பின்னூட்டமா போடறாங்க, பதிவா போடறாங்க. யாரு என்ன கேள்வி கேட்டாங்கன்னு ஒரே கன்பியூஷன். என்ன கேள்வி எல்லாம் வந்திருக்கு, எதுக்கு பதில் சொல்லியாச்சு, பதில் சொல்லாத கேள்விகளை எப்படி விக்கி பசங்களுக்குள் பாகம் பிரிப்பது என எங்களுக்கே பல கேள்விகள்!!

அது மட்டுமில்லாம, ஒரு கேள்வி ஏற்கனவே யாராவது கேட்டாச்சா இல்லையான்னு தெரியலை, அப்படின்னு வேற ஒரு கம்பிளைண்ட். சரி, இதுக்கெல்லாம் ஒரு வழி செய்யலாமுன்னுதான் இந்த பதிவு.

இதுதான் கேள்விகள் கேட்கும் பதிவு. அதாவது கேள்வி கேட்கறவங்க, இந்த் பதிவுக்கு வந்து கேள்வியை பின்னூட்டம் மூலமா கேட்கணும். நாங்களும் பதில் போட்ட உடனே, அந்த கேள்வி வந்த பின்னூட்டத்தை எடிட் செய்து, பதிலுக்கான உரலைச் சேர்த்திடுவோம்.

கேள்விகளைத் தனிப் பதிவாகக் கேட்டு பதிவு எண்ணிக்கையை ஏற்றிக் கொள்ளும் அன்பர்கள், இங்கு வந்து அந்த பதிவின் உரலையாவது பின்னூட்டமாய் இடுங்கள். அவ்வாறு செய்யும் பொழுது ஒரு பதிவில் முடிந்த மட்டும் ஒரு கேள்வியைக் கேளுங்கள். எங்களுக்குள் பிரித்துக் கொள்ளவும், பதில் அளிக்கவும் அது எளிதாக இருக்கும்.

இந்த பதிவுக்கான சுட்டி விக்கி வலைத்தளத்தில் தனியாக தெரியும். அந்த சுட்டி மூலம் இங்கு வந்தால், இது வரை கேட்கப் பட்ட கேள்விகள், பதிலளிக்கப்பட்ட கேள்விகள், அதற்குண்டான உரல்கள் என எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கும்.

என்ன அன்பர்களே, இந்த ஆலோசனை சரிதானே? இனி என்ன? ஸ்டார்ட் தி மியூஜிக்!

Thursday, November 09, 2006

Rh Factor - Addendum

சென்ற பதிவில் பின்னூட்டங்கள் வாயிலாக நிறைய பேர் சந்தேகம் கேட்டிருந்தார்கள். அதனால் சுருக்கென்று ஒரு சினாப்ஸிஸ். கீதா அவர்களின் பதிவு நாளை வெளிவரும்.

-----------------

Rh D என்பது இரத்த அணுக்களின் வெளிப்புறத்தில் ஒட்டியிருக்கக்கூடிய ஒரு antigen (antigen என்றால் என்ன என்பது பின்னே வருகிறது). இது இருப்பவர்கள் Rh+ இல்லாதோர் Rh -. அவ்வளவுதான். நம்மில் பெரும்பாலனவர்கள் Rh பாஸிட்டிவ் தான். தமிழகத்தைப் பொறுத்தவரை ஐந்து சதவிகிதம் வரை Rh - பெண்கள் இருக்கலாம் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

இப்போது மனைவி Rh - ஆகவும் கணவன் Rh + ஆகவும் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கும் உண்டாகும் குழந்தை Rh+ ஆக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.மற்ற combinations பற்றி கவலைக் கொள்ளத்தேவையில்லை. சரி, அப்படி அம்மா Rh - ஆகவும் குழந்தை Rh+ ஆகவும் இருந்தால் என்ன ஆகும்?

நம் உடலின் நோயெதிர்ப்புத் திறனே இங்கு எதிரியாகப் போய்விடுகிறது. நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகள், அவை சுரக்கின்ற பொருட்கள் என அனைத்திற்கும் ஒரு ஐடி கார்ட் போல ஒன்று இருக்கும். இரத்தத்தில் வெளியாட்களை கண்டு கொண்டு அவற்றிற்கு எதிராக அதிரடி ஸ்பெஷல் ஆர்மியைக்கொண்டு திரட்டி போர் செய்து அவற்றை அழிக்கும் வேலையைச் செய்வது வெள்ளை இரத்த அணுக்கள். இந்த வெளியாட்கள் நோய் கிருமிகளாய் இருக்கலாம் இல்லை மற்றவர்களிடமிருந்து பொருத்தப்பட்ட இருதயமாயிருக்கலாம். நம் உடலுக்கு வேறானது என்று கண்டுகொள்ளப்பட்ட எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது நம் நோயெதிர்ப்பு சக்தியின் வேலையாகும். எப்படி நம் உடல் சாராத பொருள் என்று வெள்ளைஅணுக்கள் கண்டுகொள்கின்றன?

இதற்கு முன்னரே சொல்லப்பட்ட ஐடி கார்ட் தான் பயன்படுகிறது. வெளி பொருட்கள் கொண்டுவரும் ஐடி கார்ட்கள் antigens என்று அழைக்கப்படுகின்றன. நம் உடல் சாராத antigen ஐடி கார்டி வைத்திருக்கும் அணுக்களைக் கண்டால் அபாயச் சங்கை ஊதி அவற்றுடன் போரிட antibodies எனப்படும் தனித்துவமான நமது நோயெதிர்ப்பு படையை வரவழைக்கும் வெள்ளை அணுக்கள்.

தாயுடைய இரத்தமும் உள்ளிருக்கும் குழந்தையின் இரத்தமும் வேறுவேறானாலும் இரண்டும் இரத்தமும் கலக்க வாய்ப்புகள் உண்டு. அப்படி பேறுகாலத்தின் போது கலக்கவில்லையெனினும், பிரசவத்தின் போது கலக்க வாய்ப்புகள் மிக அதிகம். அப்படி கலந்துவிட்டால் குழந்தையின் இரத்த அணுக்களில் உள்ள Rh + ஆண்டிஜனை வெளியாள் என அடையாளம் கண்டுகொண்டு அந்த ஐடி கார்டை உடைய அனைத்து திசுக்களையும் அழிக்க ஸ்பெஷல் போர்ஸான ஆண்டிபாடிஸை தாயின் உடல் தயார் செய்யும். Rh- Iso Immunization என்று இதற்கு பெயர். இதற்கு காலம் பிடிக்கும். அதனாலேயே பெரும்பாலும் முதல் பிரசவத்திற்கு Rh னால் ஆபத்தில்லை. ஆனால் இரண்டாவது குழந்தை பாதிக்கபட வாய்ப்புகள் அதிகம். முதல் குழந்தை முழுமையாக பிரசவிக்க வேண்டுமென்றில்லை. Miscarriage, Abortion, Ectopic Pregnancies, trauma, amniocentesis போன்றவையும் தாயின் இரத்தத்தில் ஆண்டிபாடீஸை சுரக்க வைக்கலாம். இதற்கு Rh-sensitization என்று பெயர்.

இந்த ஆண்டிபாடீஸ் குழந்தையின் இரத்த அணுக்களை அழிப்பதன் மூலம் anemia உண்டாகும். intra uterine death அதாவது கருவிலேயே குழந்தை இறக்கலாம். இல்லையென்றால் பிறக்கையிலே edema, severe jaundice (குழந்தை மஞ்சளாக இருப்பதற்கு காரணம்), liver/spleen enlargement, anemia வென symptoms உடன் பிறக்கலாம். எந்த அளவுக்கு வீரியத்துடன் இவை இருக்கும் என்பது திட்டவட்டமாக சொல்ல இயலாது. இரத்தமின்மை குழந்தையின் மரணத்தில் கொண்டு விடலாம். இந்நோய்க்கு Erythroblastosis Fetalis என்று பெயர்.

-----------------------------
எப்படி தடுப்பது?
அநேகமாக Rh பாஸிடிவா நெகடிவா என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். O+, O- என்று சொல்வதில் உள்ள +,- தான் Rh குறிப்பவை. அப்படியும் தெரியவில்லையென்றால் பிரசவமாகியிருப்பது தெரிந்தவுடன் செய்யப்படும் இரத்தப் பரிசோதனைகளில் Rh - என்ன என்பது உறுதிசெய்யப்படும். கருவுற்ற இருபத்தியெட்டாவது வாரத்தில் தாய்க்கு antibody test செய்யப்பட்டு அது நெகட்டிவ்வாக இருக்கும் பட்சத்தில் Rh Immunoglobulin வாக்ஸின் தரப்படும்.

இதுதவிர பேறு காலத்தில் trauma அல்லது மேற்சொன்ன ஒன்றில் ஏதாவது நடந்து குழந்தையின் இரத்தம் தாயுடையதுடன் கலந்திருக்கலாம் என்று சந்தேகித்தால் அதுநடந்து 72 மணிநேரத்திற்குள் இந்த வாக்ஸின் தரவேண்டும்.

பிரசவத்திற்கு பின்பும் 72 மணி நேரத்திற்குள் தரவேண்டும்.

-------------------
எல்லாவற்றையும் மீறி Rh பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை என்ன?

உங்கள் மருத்துவர் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டால் amniocentesis செய்யச் சொல்வார். அதன் மூலம் குழந்தையின் நலம் பற்றி விரிவாகத் தெரியவரும். பாதிப்பு இருப்பது தெரிந்தால் exchange transfusion செய்யலாம். அதுவும் முடியாத பட்சத்தில் pre-term ஆக பிரசவிக்கவும் செய்யலாம்.

இந்நோயை பெரும்பாலும் தடுப்பதற்கான சிறப்பு சிகிச்சைகள் வந்துவிட்டன. பேறு காலத்தின் போது ரெகுலராக பரிசோதனைகள் செய்து, தகுந்த முறையில் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்தால் இதிலிருந்து மிக எளிதாக தப்பித்துக்கொள்ளலாம்.

பெண்களே! நீங்க ப்ளஸ்ஸா? மைனஸா? -2

இந்த பதிவை எழுதியவர் கீதா சாம்பசிவம் அவர்கள். இந்த கட்டுரையின் முதல் பகுதியை படிக்க இதோ சுட்டி.


"குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்."

யாருக்குத் தான் ஆசை இருக்காது? எல்லாருக்கும் குழந்தை தானே வேணும்?

திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் எல்லாரும் பார்க்கிறார்கள். சில இடங்களில் காதல் கல்யாணம் என்றால் கூட ஜாதகம் பார்க்கப் படுகிறது. முன்னேயோ அல்லது பின்னேயோ. பொதுவாகப் பத்துப் பொருத்தங்களும், அதில் 7 வரை இருந்தால் போதும் என்றும் சொல்வதுண்டு. இப்போது புதிதாக ரத்தப் பொருத்தம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது புதிது போல் தோன்றினாலும் காலம் காலமாக இருந்து வருவதுதான். இந்த ரத்தப் பொருத்தத்தைப் பற்றித் திருமூலர் கூடத் தன் திருமந்திரத்தில் எழுதி இருப்பதாய் "டாக்டர் ஜெயம் கண்ணன்" (கர்ப்ப ரட்சாம்பிகா மருத்துவமனை நடத்தி வருகிறார்.) என்ற பிரசித்தி பெற்ற மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அநேகமாய் எல்லாருடைய ரத்த வகையும், A, B, O என்ற வகையைச் சேர்ந்திருந்தாலும் அதில் + அல்லது - உண்டு. இந்த + குறிப்பது Rh Positive. - குறிப்பது Rh Negative. இந்த நெகட்டிவ் வகை ரத்தம் பெரும்பாலும் பெண்களுக்குத் தான் அதிக அளவில் இருக்கிறது.

திருமணம் செய்து கொள்ளும் கணவன், மனைவி இருவருக்குமே பாசிட்டிவ் வகை ரத்தமாகவோ அல்லது நெகட்டிவ் வகை ரத்தமாகவோ இருந்தால் எந்த விதப் பிரச்னையும் இல்லை. பிரச்னை ஆரம்பிப்பது பெண்ணின் நெகட்டிவ் வகை ரத்தத்தினால் தான். ஆணுக்குப் பாசிட்டிவ் ரத்தவகையாகவும் பெண்ணுக்கு நெகட்டிவ் ரத்தவகையாகவும் இருந்தால் தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. இதிலும் குழந்தைக்கு நெகட்டிவ் என்றாலும் பிரச்னை கிடையாது. அப்படி இல்லாமல் குழந்தை பாசிட்டிவ் வகை ரத்தமாக இருந்து விட்டால் கொஞ்சம் பிரச்னை தான். அதிலும் முதல் குழந்தைக்கு அதிகம் கஷ்டம் இருக்காது. ஓரளவு காப்பாற்றலாம். இரண்டாவது குழந்தைக்குப் பிரச்னை தான்.

சிலருக்கு முதல் குழந்தைக்கே பிரச்னை வருவதும் உண்டு.பெண் முதல் முறை கருவுற்றுக் குழந்தை உண்டானதும் முதல் மூன்று மாதங்களுக்குள் சோதனை செய்தால் பாசிட்டிவ் வகை ரத்தமா அல்லது நெகட்டிவ் வகை ரத்தமா என்று கண்டு பிடிக்கலாம். ஆனால் இந்த அளவு முன்னேற்றம் சமீப காலத்தில் தான் அதிக அளவு இருக்கிறது. இது மாதிரி கண்டுபிடிக்காமல் முதல் குழந்தை பெறும் அல்லது பெற்ற பெண்கள் இரண்டாவது குழந்தைப் பிறப்பின் போது குழந்தையைக் காப்பாற்றப்பிரத்தனப் படவேண்டும்.

ஏன் என்றால் முதல் பிரசவத்தின்போது கருவில் உள்ள குழந்தையின் பாசிட்டிவ் வகை ரத்த அணுக்கள் தாயின் உடலில் சேருகிறது. அப்போது தாயின் உடல் அந்தப் புதுவகை விருந்தாளியை ஏற்க முடியாமல் ஒரு விதமான அணுக்களை உற்பத்தி செய்யும். இதை anti rhesus antibodies என்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு (Rh Negative ) sensitization என்று சொல்கிறார்கள். ஒரு முறை இந்த நிகழ்வு ஏற்பட ஆரம்பித்தபின்னால் தாயின் உடலில் வாழ்நாள் பூரா இந்த நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இரண்டாவது குழந்தை பிறப்பின்போது இந்தக் குழந்தையும் பாசிட்டிவ் வகை ரத்த குரூப் என்றால் தாயின் உடலில் ஏற்கெனவே உள்ள ரத்த அணுக்கள் குழந்தையின் உடலில் புகுந்து அதனுடைய fetel blood cells -ஐ அழிக்கிறது. இதன் தாக்கத்தினால் குழந்தைக்கு Rh disease வருகிறது. இந்த நோய் குழந்தைக்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம், ரத்தச் சோகை எனப்படும் அனீமியா, மஞ்சள் காமாலை, உடலில் நீர் சேர்ந்து உடல் வீங்கிக் காட்சி அளிப்பது, சிலசமயம் நோயின் வீரியம் தாங்காமல் குழந்தையே இறந்து போவது என்று எது வேண்டுமானாலும் நடக்கும். தாயைப் பார்த்தால் ஆரோக்கியமாய் இருப்பது போல்தான் தோன்றும். முதல் பிரசவம் தாக்குப் பிடிக்கும்.

ஏனெனில் அநேகமாய் அம்மாவிற்கு இந்த sensitizationஆவதற்கு முன்னாலேயே குழந்தை பிறந்திருக்கும். இது எல்லாம் sensitization ஆவதற்கு முன்னால் உள்ளது. அதற்குப் பிறகு தாய்க்கு ஊசி போட்டு அடுத்த பிரசவத்திற்கு முன் ஜாக்கிரதையாய் இருக்கலாம். அபூர்வமாய்ச் சில கேஸ்களில் முதல் பிரசவத்திலேயே கர்ப்ப காலத்தில் இந்த sensitization ஏற்படும். இந்த நிகழ்வு ஏற்படுகிறதா என்று எப்படி அறிவது? தற்சமயம் அதை முன்னாலேயே கண்டறிந்து trimester என்று சொல்லப் படும் நேரத்திலேயே சிகிச்சை தொடங்குகிறார்கள். இதற்கான சிகிச்சை என்ன என்றால் தாய்க்கு trimester period-லேயே ஒரு ஊசி போடுவதுதான். மிகவும் விலை உயர்ந்த இந்த ஊசி Rh immune globulin (RhIG) என்று அழைக்கப் படுகிறது. முதல் பிரசவத்தின் போது கண்டுபிடிக்கப் படாமல் குழந்தை பெற்ற பின் கண்டு பிடிக்கப் படும் பெண்களுக்கு அவர்கள் முதல் பிரசவம் முடிந்த 72 மணி நேரத்துக்குள் இந்த ஊசி போடப் பட வேண்டும். அதற்கு அப்புறம் என்றால் பயன் இருக்காது. முதல் பிரசவத்தில் ஊசி போட்டு விட்டால் இரண்டாவது பிரசவத்தில் கஷ்டம் இருக்காது. முதல் பிரசவத்தில் இது எதுவும் செய்யாமல் இரண்டாவது பிரசவம் ஆகும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிகம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுச் சில சமயம் ரத்தத்தையே மாற்ற வேண்டி இருக்கும். அநேகமாய் photo therapy என்னும் blue light-ல் குழந்தையை வைப்பது போன்றவை நடக்கும். இரண்டு பிரசவத்திற்கு அப்புறம் அம்மாவிற்கு இந்த ஊசி போட்டு எந்தவிதமான நன்மையும் இல்லை. முதல் பிரசவத்தில் இருந்தே அம்மாவின் உடல் நிலைமை sensitization ஆகி இருக்கும். அப்படி இல்லாமல் முதல் குழந்தையிலேயே கண்டறிந்து விட்டால் மேலே சொன்னமாதிரி முதல் 5 மாதங்களுக்குள் ஒரு ஊசி போட வேண்டும். இதற்குத் தாயின் ரத்தத்தையும், கருவில் இருக்கும் குழந்தையின் ரத்தத்தையும் சோதனை செய்வார்கள்.

குழந்தைRh + தாய்Rh - என்றால் உடனேயே ஒரு ஊசி போட்டு விட்டு 28 வாரங்களுக்குப் பின் மறு முறை சோதனை செய்து சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பிரசவத்தை சுகப்பிரசவம் அல்லாது சிசேரியன் வைத்துக் கொண்டு முன்னாலேயே குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுவார்கள். இப்போதும் தாயின் உடல் நிலைக்கும், குழந்தையின் உடல் நிலைக்கும் தகுந்தவாறு மருத்துவம் செய்யப் படும். தாய்க்கு இப்போதும் ஒரு முறை ஊசி போடப் படும். இது எல்லாம் முதல் குழந்தையிலேயே கண்டறிந்தால் செய்யவேண்டியது. இது அந்தப் பெண்ணிற்குக் குறைப்பிரசவம் நடந்தாலோ, ectopic pregnancy என்றாலோ, Rh+ Blood transfusion நடந்திருந்தாலோ கூடப் போட வேண்டியது கட்டாயம். இந்த ஊசி போட்டதும் இது அம்மாவின் உடலில் Rh+ fetal cells ஐ அழிப்பதில் இருந்து தடுக்கிறது. இந்த பாசிட்டிவ் ரத்தவகைக்கு எதிரான ஆண்டிபாடீஸ் வேலை செய்யும் முன்னேயே அழிக்கத் தொடங்கி விடும். சில பெண்களுக்கு முன்னாலேயே இந்த sensitization பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கும்.

ரத்தம் ஏற்றப்பட்டதால் கூட ஏற்படும். அப்போது இவர்களுக்கு முதல் பிரசவம் என்றால் கூட மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கருவுற்றதுமே குழந்தை, அம்மாவின் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்துத் தேவைப்பட்டால் குழந்தைக்குக் கருவிலேயே 18-வது வாரம் ரத்தத்தை மாற்றிச் சுத்தி செய்து குழந்தையை வெளி உலகிற்கு நல்லபடி கொண்டு வரத் தயார் செய்யப்படுகிறது. இதற்கு அப்புறம் 28-வது வாரம் மறுமுறை சோதனை செய்து அதற்குத் தகுந்தாற்போல் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்துக் காப்பாற்றுவார்கள். இப்போதும் தாய்க்கு மறுபடி இந்த ஊசி குழந்தை பெற்ற 72 மணி நேரத்துக்குள் போட வேண்டும். இது அடுத்த பிரசவம் குழந்தையைப் பாதிக்காமல் பெற்று எடுக்க உதவுகிறது. இது எல்லாம் மருத்துவ உலகின் முன்னேற்றங்கள்.

DISCLAIMER:
நான் எழுதி இருப்பது எல்லாம் கூகிள் ஆண்டவர் தயவிலும், திருமதி சந்திரவதனா அவர்கள் தன்னுடைய வலைப்பதிவில் எழுதி இருப்பதையும் வைத்துத் தான். திருமதி ஜெயம் கண்ணன் சொல்லி இருப்பது புத்தகங்களில் படித்தும், தொலைக்காட்சியில் கேட்டும் இருக்கிறேன். தகுந்த ஆதாரம் தற்சமயம் தேடியும் கிடைக்கவில்லை. ஆதாரம் கிடைத்ததும் வெளி இடுகிறேன். பொதுவாக Rh Negative Group-காரர்கள் மற்றவர்களில் இருந்து வேறுபட்டு இருப்பார்கள் என்பதையும் கூகிளில் தேடல் போது படித்தேன். அது பற்றி நிச்சயமாய் எதுவும் தெரியவில்லை. ஆனால் இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும் ஒருவருக்கொருவர் மனதுக்குப் பிடித்து விட்டால் இந்தச் சின்னக் குறைக்காகப் பெண்ணை வேண்டாம் என்று சொல்ல வேண்டாம். முன்னாலேயே ரத்தவகையைத் தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் அதற்குத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறித்த காலத்தில் எடுத்துக் கொண்டு நல்ல ஆரோக்கியமான புத்திசாலிக் குழந்தைகளைப் பெற்று இந்தியாவை வளப்படுத்துங்கள்.

இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த விக்கி பசங்களுக்கு என் நன்றி. ஒருவேளை அவர்கள் எதிர்பார்த்த மாதிரி விரிவான தகவல் நான் தர முடியாமல் போய் இருக்கலாம். அது எல்லாம் ஒரு டாக்டர் சொல்வது தான் முறை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

விக்கின பசங்களுக்காக விக்காமல் கீதா சாம்பசிவம்.

Wednesday, November 08, 2006

பெண்களே! நீங்க ப்ளஸ்ஸா? மைனஸா? -1

இந்த பதிவை எழுதியவர் கீதா சாம்பசிவம் அவர்கள்.


மஹேசனுக்கே தெரியாத விஷயம்!மக்கட் பிறப்புத் தான். வேறே என்ன? அது மட்டும் மஹேசனுக்கே தெரியாதாமே! ஆச்சரியமா இல்லை? ஆனால் அப்படித்தான் ஒரு பழமொழி எங்க அம்மா சொல்லுவார்கள். "மழை வரவும், மக்கட்பிறப்பும் மஹேசனுக்கே தெரியாது" அப்படின்னு. இப்போ மழை நல்லா வெளுத்துக் கட்டுது. ஒவ்வொரு வருஷமும் ஓரளவு மழை வெளுத்துக் கட்டுது. எது தப்பினாலும் இது மட்டும் தப்பாது. காலா காலத்தில் வந்துடும். ஆனால் குழந்தை பிறப்பு. அது மட்டும் நம்ம பூர்வ ஜென்ம புண்ணியம். கல்யாணம் ஆனா உடனேயே எல்லாரும் கேட்கும் கேள்வி விசேஷம் ஏதும் உண்டாங்கறது தான்.

"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா,செல்வக்களஞ்சியமே"ன்னு கொஞ்சவோ அல்லது "சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?"னு கேட்டுக் கொஞ்சவும் எல்லாருக்கும் ஆசைதான். ஆனால் எல்லாருக்கும் அது நிறைவேறுதா? இல்லை.

சிலருக்கு நிறைவேறாமல் போகிறது. உடலில் குறைபாடுகள் இல்லாதவர்களுக்குக் கூடக் குழந்தை பிறப்பில் தாமதம் ஏற்படுகிறது. "டெஸ்ட் ட்யூப் பேபி" கூட முயன்றாலும் எல்லாருக்கும் சாத்தியம் ஆவது இல்லை. அதே மாதிரி வாடகைத் தாயும் இப்போ பிரபலம் ஆகி வருகிறது. அதிலேயும் எல்லாருக்கும் பலன் கிடைப்பது இல்லை. உண்மையில் பார்த்தால் இறைவன் விதித்தவருக்குத் தான் கொடுக்கிறான். அதில் மாற்றம் இல்லை இது வரை. கிடைக்கிறவங்களுக்கும் சரியான விதத்தில் குழந்தை பிறக்குதா?

அதுக்கும் சில பிரச்னைகள் இருக்கே? அதிலே ஒண்ணுதான் ரத்தப் பொருத்தம். அதைப் பத்தி மட்டும் ஓரளவுக்கு நாம் இப்போ பார்க்கப் போறோம்.

எனக்குப் படிக்கிற நாளிலேயே என்னோடது "ஓ" குரூப் ரத்தம்னுதெரியும். ஆனால் அப்போ அது Rh+ அல்லது - என்பது பற்றி எதுவும் தெரியாது. பின்னால் சில நிகழ்வுகள் மூலம் Rh- என்றால் குழந்தை பிறப்பில் பிரச்னை என்று தெரிய வந்தாலும் அது எல்லாம் சொந்தம் மூலம் கல்யாணம் ஆகிக் குழந்தை பெற்றுக் கொண்டவர்களாய்ப் போய் விட்டார்கள். ஆகவே இதில் பெரிய விஷயம் ஏதுவும் இல்லைனு யோசிச்சுப் பார்க்கவே இல்லை.

பின்னால் எனக்குக் கல்யாணம் ஆகி உடனே குழந்தை உண்டாகாதபோதும் இது பற்றிக் கவனம் செலுத்தவில்லை. அதுக்கு அப்புறம் குழந்தை உண்டாகிக் குழந்தை பிறந்து 3-ம் நாள் குழந்தை மஞ்சள் என்றால் அப்படி ஒரு மஞ்சளாக இருக்கவே எல்லாருக்கும் சந்தேகம் ஏன் இப்படி? என்று. ஆனால் என் கணவருக்கு அந்தச் சமயம் மஞ்சள் காமாலை நோய் இருந்த காரணத்தால் வீட்டில் இருந்த பெரியவர்கள் அதன் காரணமாய் இருக்கலாம் என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் டாக்டர் வந்து பார்த்து விட்டு நான் Rh-குரூப், அதன் விளைவுதான் என்று உறுதிப் படுத்தினார். ஆனால் அவர் வந்து பார்த்து உறுதிப் படுத்துவதற்குள் குழந்தை பிறந்து 4 நாளுக்கு மேல் ஆகி விட்டிருந்தது. ஆகவே எனக்கு அப்போது உடனே போட வேண்டிய ஊசி போடமுடியாத நிலை. குழந்தைக்கு மட்டும் மருத்துவம் செய்தார்கள். தினமும் காலை வெயிலில் குழந்தையைப் போட்டுக் கொண்டு என் அம்மா உட்காருவார்கள். நான் எங்கேயோ ரூமில் இருப்பேன். குழந்தையின்ஆகாரத்தில் இருந்து அது குளிப்பது வரை எல்லாம் கட்டுப் பாடு. கிட்டத் தட்ட 45 நாள் இம்மாதிரிக் குழந்தையை வளர்த்து விட்டு ஒரு மாதிரியாக நானும் புக்ககம் வந்து விட்டேன். அப்புறம் எல்லாம் மறந்தும் போச்சு.

அதுக்கு அப்புறம் சில வருடங்கள் கழித்து இரண்டாவது குழந்தை உண்டான சமயம் நாங்கள் ராஜஸ்தானில் இருந்த காரணத்தால் என் கணவர் முன்கூட்டியே என் பெற்றோரை வரவழைத்து என்னை அனுப்பி விட்டார். இஷ்டம் இல்லாமல்தான் போனேன் அப்போது, குழந்தை பிறந்த சமயம் விடிகாலை ஆதலால் அப்போது ஒண்ணும் தெரியவில்லை. அப்புறம் நல்ல சூரிய வெளிச்சம் வந்ததும் குழந்தையைப் பார்த்தால் ஒரே மஞ்சள் நிறம். துணி எல்லாம் மஞ்சள். உடனேயே எனக்குள் ட்யூப் லைட் எரிய நான் முதல் குழந்தைக்கும் வந்திருந்தது என்று சொன்னேன். நல்லவேளையாகக் குடும்ப டாக்டர் என்பதால் முதல் பிரசவமும் அதே ஆஸ்பத்திரி, அவங்களுக்கும் நினைவு இருந்தது. உடனேயே ரிஜிஸ்டரைப் பார்த்து விட்டு முன்னால் வந்த அதே குழந்தை நல சிறப்பு மருத்துவரை வரவழைத்தனர். அவர் பார்த்து விட்டு உடனேயே பழைய கதையும் தெரிந்ததும் இது Rh- விளைவுதான் என்று சொன்னார். உடனேயே முதல் பிரசவத்தில் ஊசி ஏன் போடவில்லை என்று கேட்டதற்குக் குழந்தை பிறந்து 72 மணி நேரத்துக்கு மேல் ஆனதால் போட்டாலும் பயன் இல்லை என்று போடவில்லை என்று சொன்னார்கள். மஞ்சள் காமாலையுடன் பெரிதுபட்ட கல்லீரலுடன் (enlarged liver) பிறந்த என் குழந்தை அந்த ஆஸ்பத்திரியிலேயே ஒரு காட்சிப் பொருள் ஆனான். இதன் காரணம் என்னோட 'O' Rh Negative வகை ரத்தம் தான். இது ஏன் ஏற்படுகிறது என்று புரியவில்லை என்றாலும் இதைத் தடுக்க நிறையத் தற்காப்பு நடவடிக்கைகள் இருக்கின்றன. அவை நாளை தொடரும்.

DISCLAIMER; மருத்துவம் பற்றிய பதிவு என்பதால் முதலில் என் கணவர் யோசித்தார். மருத்துவம் தெரியாமல் எழுதுவது சரியாய் வருமான்னு. ஆனால் நான் பொதுவாய் எழுதுவதாயும், மற்றபடி வேறு மருத்துவ சம்மந்தமான குறிப்புக்கள் எல்லாம் வராது என்றும் சொல்லி இருக்கிறேன். ஆகவே இந்த ரத்தக் குறைபாடு உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியத் தகவல்கள் மட்டுமே நாளை கொடுக்கப் படும்.

டாக்டர்கள் என்ன மாதிரி ட்ரீட்மெண்ட் சிபாரிசு செய்வார்கள், நாம் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற பொதுவான விஷயங்கள் மட்டும் இடம் பெறும்.

Friday, November 03, 2006

விமானம் ரிவர்ஸில் போகுமா?

நம்ம கடல் கணேசன் பதிவுல ஒரு அனானி கப்பலில் ரிவர்ஸ் கியர் உண்டான்னு கேட்டு இருந்தார். அப்படியே விமானங்களிலும் உண்டான்னு கேட்டுட்டு, இந்த கேள்வியை விக்கி பசங்க கிட்ட கேட்கலாமான்னு வேற கேட்டு இருந்தார். ரிவர்ஸ் கியர், Rivers கியர் இல்லை அப்படின்னு ஜோக் எல்லாம் கூட அடிச்சிருந்தார். இப்படி எல்லாம் அமர்க்களமா கேள்வி கேட்கற பார்ட்டிங்க பேரைச் சொன்னா தொடர்ந்து எழுதும் போது உங்களுக்குன்னு ஒரு அடையாளம் கிடைக்கும் இல்லையா? கணேசனும் அவரு கிட்ட கேட்கலாமுன்னு சொன்னாரே தவிர நம்ம கிட்ட கேள்வியை கேட்கவே இல்லை.சரி விடுங்க.

யாரு கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல வேண்டியதை கடமையாய் கொண்டிருக்கும் நாங்கள் இப்படி ஒரு நல்ல கேள்வி வந்திருக்கும்போது பதில் சொல்லாம விடுவோமா? முதலில் ஒற்றை வரியில் பதில் சொல்லி விடலாம்.

விமானங்களுக்கு ரிவர்ஸ் கியர் கிடையாது.

இப்பொழுது கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

விமானங்கள் முன்னே செல்ல தமது சொந்த சக்தியில் செல்ல முடியுமே தவிர பின்னால் செல்ல முடியாது. அதனால்தான் விமான நிலையங்களில் பயணிகளும் சரக்கும் ஏற்றப்பட்ட நிலையில் ஓடுதளத்திற்கு செல்ல tow trucks எனப்படும் ட்ராக்ட்டர்கள் தேவைப் படுகின்றன. இந்த ட்ராக்ட்டர்களினால் பின் தள்ளப் பட்டு மெதுவாக திரும்பி செல்ல வேண்டிய திசையை பார்த்து விமானங்கள் நின்ற பிறகு இந்த ட்ராக்ட்டர்களில் இருந்து விடுபட்டு, தனது உந்து சக்தியால் ஒடுகளத்தில் ஓடி, அதன் பின் மேலெழும்பி வானில் பறந்து செல்கின்றன.

இங்கு விமானங்களில் பொருத்தப்பட்டிருக்கும் என்ஜின்களைப் பற்றி கொஞ்சம் பேச வேண்டியதாய் இருக்கிறது. விமானத்தில் நிரப்பப்பட்டிருக்கும் எரிபொருள் எரிக்கப்பட்டு வாயுவாக மாற்றப்படுகிறது. இவ்வாயு மிகுந்த அழுத்தமான நிலையில் வைக்கப்படுகிறது. இவ்வாறு வைக்கப்பட்டிருக்கும் அறையிலிருந்து ஒரு சிறிய துளை மூலம் இந்த வாயு வெளிப்படுத்தப்படும் பொழுது அவ்வழுத்தத்தினால் ஏற்படும் உந்து சக்தியால் இவ்வாயு வெளிப்படும் திசைக்கு எதிர் திசையில் விமானம் தள்ளப்படுகிறது. இச்சக்தியை ஆங்கிலத்தில் Thrust என அழைக்கிறார்கள். ஒரு பலூனை ஊதி அதன் வாயைக் கட்டாமல் விட்டால் எப்படி பறந்து செல்கிறதோ அது போன்றுதான்.

இப்பொழுது வேறு ஒரு எடுத்துக்காட்டு ஒன்றை பார்க்கலாம். நம் முகத்தின் நேராக உள்ளங்கையை குழிவாக வைத்துக் கொண்டு ஊதினால், அவ்வாறு வெளியேரும் காற்று, மீண்டும் நம் முகத்தை நோக்கியே வருகிறது அல்லவா? அதைப் போன்று விமானங்களில் ஒரு அமைப்பு இருக்கின்றது. அதனை Reverse Thrusters என அழைக்கிறார்கள். நம் கை காற்றை மீண்டும் நம் முகத்திற்கே திருப்புவது போல், இந்த அமைப்பு எஞ்சினிலிருந்து வெளியேறும் வாயுவை அது பொதுவாக வெளியேறும் திசைக்கு எதிர் திசைக்கு தள்ளிவிடுகிறது. அதனால் விமானம் முன்னே செல்வதற்குப் பதிலாக பின்னால் செல்ல ஏதுவாகிறது.

பொதுவாக விமானம் தரையிறங்கி ஓடுதளத்தில் விரைவாக ஓடும் பொழுது இந்த ரிவர்ஸ் த்ரஸ்டர்களை பாவித்து விமானத்தின் வேகத்தை வெகுவிரைவில் குறைப்பார்கள். ஒரு விஷயம் ஞாபகத்தில் இருக்கட்டும். இங்கு ரிவர்ஸ் த்ரஸ்டர்களை உபயோகிக்கும் போது ப்ரேக் பிடிப்பது போல் இஞ்சின் வேகத்தைக் குறைக்காமல், வேகத்தை அதிகப்படுத்ததான் செய்வார்கள். இதன் மூலம்தான் தரையிறங்கிய விமானத்தை அவ்வளவு விரைவாக ஓடுகளத்தில் ஓட ஆரம்பித்தாலும் மிகச் சிறிய தூரமே ஓடிய பின் நிறுத்த முடிகிறது. இவ்வசதி இல்லாவிட்டால், ஓடுகளங்களின் நீளம் இன்று இருப்பதை விட பல மடங்கு நீளமாவதாகத் தேவைப்படும். சரி இந்த ரிவர்ஸ் த்ரஸ்டர்கள் மூலம் விமானங்களை பின்னால் செல்ல வைக்க முடியாதா? ஏன் செய்வதில்லை?

இதற்கு இரு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம் பணம்! ஆமாம். விமானங்களின் இஞ்சின்களை இயக்கி அதன் மூலம் விமானத்தை பின் செல்ல வைப்பதை விட ஒரு ட்ராக்ட்டரின் மூலம் பின்னால் தள்ளுவதனால் செலவு குறைகிறது. விமான எரிபொருட்களின் விலையும், எஞ்சின்களின் தேய்மானமும் ட்ராக்ட்டரின் செலவை விட பலமடங்கு அதிகமாகிவிடும். எனவே டெக்னிக்கலாக விமானங்கள் தனது சொந்த உந்து விசையால் பின்னால் செல்ல முடிந்தால் கூட அது எங்கும் செய்யப்படுவதில்லை.

இரண்டாவது காரணம் என்ன? அதையும் பார்க்கலாம். விமானங்களில் பிரயாணிகளும் சரக்கும் ஏற்றப்படும் பொழுது விமானங்கள் விமானநிலையத்தைப் பார்த்தவாறு நிறுத்தப்படுகின்றன. இப்பொழுது ரிவர்ஸ் த்ரஸ்டர்கள் உபயோகிக்கப்பட்டால் இஞ்சினில் இருந்து வெளியேற்றப்படும் வாயுவானது அதிவேகத்தில் விமான நிலையத்தை நோக்கிதான் வரும். அதனால் விமான நிலைய கட்டடங்கள் பாதிப்படையும். அப்போது உடையும் கண்ணாடி ஜன்னல்களுக்கு யார் பதில் சொல்வது? அதனால்தான் ட்ராக்ட்டர்களை உபயோகிக்கிறார்கள்.

என்ன அனானி அவர்களே, பதில் புரிந்ததா?

Thursday, November 02, 2006

சுடோகு போடுவது எப்படி?

அதென்னய்யா சுடோகு என்பவர்களுக்குத்தான் இந்த பதிவு. சுடோகு தெரியாதா இவன் என்னமோ எழுத வந்துட்டான் என பேசும் வீம்பிகள் இத்தளத்தில் தினமும் வரும் இலவச புதிரை போட பாருங்களேன்.

சுடோகு ஒரு ஜப்பானிய புதிர் விளையாட்டு. ஆனால் இதன் மூலம் நம்ம பாரதம்தான் என்பது பலருக்கும் தெரியாத ஒரு சேதி. நமது முன்னேர்கள் குருகுலத்தில் கிளாசெல்லாம் கட்டடிக்காமல் சரியாக படித்து பல வித்தைகளை அறிந்து வைத்திருந்தனர். கணிதத்தில் அபார தேர்ச்சி பெற்றிருந்தனர். அப்பொழுது பலவிதமான மாயக்கட்டங்களை கண்டுபிடித்திருந்தனர். அதில் ஒருவகைதான் இந்த சுடோகு.

9x9 சதுரங்களைக் கொண்டது சுடோகு கட்டம். இதில் இட வல வரிசைகளை R1-R9 ஆக குறித்துக் கொள்வோம். மேல்-கீழ் வரிசைகளை C1-C9 ஆகவும், தடித்த கோடுகளால் காட்ட பெற்றிருக்கும் 3x3 உட்கட்டங்களை B1-B9 ஆகவும் குறித்துக் கொள்வோம்.



விதிகள்
1. ஒவ்வொரு இட-வல வரிசையிலும் (R1-R9), ஒவ்வொரு மேல்-கீழ் வரிசையிலும் (C1-C9) 1-9 என்ற எண்களை தலா ஒரு முறையே வருமாறு கட்டங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
2. இவைகளில் மட்டுமல்லாது, ஒவ்வொரு உட்கட்டத்திலும் (B1-B9) இவ்வெண்கள் ஒரு முறைக்கு மேல் வரக்கூடாது.
3. தொடக்கத்தில் சில கட்டங்களில் எண்கள் நிரப்பப்பட்டிருக்கும்.
4. காலியாக இருக்கும் கட்டங்களை மேற்கூறிய விதிகளுக்கிணங்கி நிரப்ப வேண்டும். அவ்வளவுதான்.

ஒரு புதிர்


இந்த புதிரை எப்படி முடிப்பதென்று பார்ப்போம்.
உள்கட்டம் B4-ல் 1 இருக்கிறது. 2 எந்த கட்டத்தில் வரும்? R4-ல் ஏற்கனவே ஒரு 2 இருப்பதால் அங்கு இன்னுமொரு 2 வராது. எனவே மீதமிருக்கும் இரண்டு கட்டங்களில் எதாவது ஒன்றில்தான் வர வேண்டும். அதிலும் C2விலும் 2 இருப்பதால், வரக்கூடிய இடம் ஒன்றே ஒன்றுதான். அது C1,R5.


அடுத்து உள்கட்டம் B5-ல் பார்த்தீர்களானால் R4, R5 ஆகிய இரண்டு வரிசைகளிலும் 2 இருக்கிறது. எனவே C6,R6 என்ற கட்டத்தில்தான் 2 வரும்.


இப்பொழுது உள்கட்டம் B5-ல் அடுத்து வரவேண்டிய எண் 4. வரிசை R5-ல் ஏற்கனவே 4 இருப்பதால், C4,R4 என்ற கட்டத்தில்தான் வரும்.


இப்பொழுது உள்கட்டம் B5-ல் அடுத்து வரவேண்டிய எண் 5. இது மீதி இருக்கும் கட்டமான C5,R5 என்ற கட்டத்தில்தான் வரும்.


இதைப்போன்று அனைத்து கட்டங்களையும் பூர்த்தி செய்தால் விடை கீழ் காணும் படத்திலிருப்பது போல இருக்கும்.


இந்த விளையாட்டு உங்களுக்கு பிடித்ததுதானே. மேலும் பல புதிர்களுக்கு மேற்கூறிய வலைத்தளத்திற்கு செல்லுங்கள். எடுத்துக்காட்டாக உபயோகித்த புதிர் இத்தளத்திலிருந்து எடுத்ததுதான். இன்னும் எத்தனையோ வலைப்பதிவுகளும் உண்டு.

சுடோகுவின் வரலாறு, இதன் வடிவமைப்பு பற்றிய செய்திகள், மேலும் பல தகவல்கள் வேண்டுமானால் பின்னூட்டமிடுங்கள், இன்னுமொரு பதிவு செய்கிறேன். நீங்கள் முயலும் புதிரில் அடுத்த அடி தெரியாமல் கஷ்டப்பட்டீர்களானால், எனக்கு தெரியப்படுத்துங்கள். சேர்ந்து முயலலாம்.

- இலவசக்கொத்தனார்

Monday, October 30, 2006

சட்டை மடிப்பது எப்படி !

சுலபமாக இரண்டு செகண்டில் சட்டை மடிப்பது எப்படி !


ஞாயிறு போற்றுதும் ன்னு எங்கத் தாத்தா ரொம்ப நாளுக்கு முன்னாடியே சொல்லிட்டு போயிட்டார். நானும் தாத்தாச் சொல்லைத் தட்டாமல் ஞாயிறு ஆனா எந்த வேலையும் செய்யறது இல்லை. ஆனானப்பட்ட கடவுளே ஞாயிறு அன்னைக்கு ரெஸ்ட எடுத்தப்போது நாம் யாரு வேலை செய்ய.

ஆனாலும் பாருங்க, ஞாயிறுக்கிழமைதான் நமக்கு துணி துவைக்கும் நாள் ! வாஷரில் போட்டு ஒரு அரை மணி நேரம், அப்புறம் ட்ரையரில் போட்டு இன்னும் ஒரு முக்கா மணி நேரம். அப்புறம் அது எல்லாத்தையும் அயர்ன் பண்ணி, மடிச்சு வைக்க இன்னும் ஒரு மணி நேரம். இதுக்கே மூணு மணி நேரம் போச்சுதுண்ணா அப்புறம் எங்க ஞாயிறைப் போற்றுவது !

சமையலுக்கு அப்புறம் அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணறது இந்த லாண்டிரிக்காத்தான். தமிழில்(?!!) எனக்கு பிடிக்காத வார்த்தை இந்த லாண்டரினு ஆயிப் போச்சு.


வலையில் அங்க இங்க மேய்ஞ்சப்போது, மிக எளிதாகதுணி மடிக்கும் இந்த வீடியோ மாட்டுச்சு. நிஜமாவே நல்ல டெக்னிக்த்தான். செய்துப் பாருங்களேன் எவ்வளவு சீக்கிரம் துணி மடிக்க முடியுது உங்களாலே என்று !


படத்தை கிளிக்கினால் படம் தெரியும் !


how to fold a shirt

இந்தியா கிரிக்கெட்டில் ஜெயிப்பது எப்படி? (30 Oct 06)

தேவ் அண்ணன் அற்புதமான கேள்வி ஒன்றைக் கேட்டு இந்த விக்கி வலைப்பூவுக்கு போணி செய்து வைத்திருக்கிறார். அவருக்கு விக்கிப்பசங்க சார்பா ஒரு ஓ!

இந்தியா கிரிக்கெட்லே ஜெயிக்கறது அவ்வளோ ஒண்ணும் கஷ்டம் கிடையாது சார். கொஞ்ச நேரம் என் மூளையைக் கசக்கி யோசிச்சதிலேயே பல மெத்தட்ஸ் கிடைச்சுது. அவை உங்கள் பார்வைக்கு. யாராவது இதை ICC, BCCI க்கு எடுத்துப் போயி சொன்னாலும் எனக்குப் பிரச்சினையில்லை. காப்பிரைட் அப்படின்னெல்லாம் எந்தப் பிரச்சினையும் பண்ணமாட்டேன்.

முறை ஒன்று: ஹர்ஷா போங்ளே முறை (ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் கிடையாது)

நான் சின்னவயசிலே ஊர்லே புளியந்தோப்புலே கிரிக்கெட் ஆடினப்ப எங்க டீம் எல்லா டீமையும் வெற்றிவாகை சூடியதுக்கு முக்கியமான காரணம் எங்க பேட்டிங் பௌலிங் எல்லாம் கிடையாது. எங்கள் ஆஸ்தான ஸ்கோரர் ராஜா தான். நாங்கள் ஆடும்போது வந்த டாட் பாலெல்லாம் அவன் கைநடுக்கத்துலே(?!) 1 ஆகும். ரஜினி படத்தைப்பத்தியும் ஓணான் வாத்தியாரையும் பத்தி பேசிக்கிட்டே மூணு ஓவருக்கு முன்னே அடிச்ச 1 - 4 ஆகும். எப்படின்னே தெரியாம எல்லா மேட்சிலேயும் 20 - 30 ரன்னுலே ஜெயிச்சுடுவோம். அவனை எப்படியாவது லொக்கேட் பண்ணனும். இந்தியா டீமுக்கு ஸ்கோரர் ஆக்கணும்.

முறை இரண்டு: ஷோலே முறை

முறை ஒண்ணு கஷ்டம்னு நெனைச்சீங்கன்னா, ராம்கோபால் வர்மா மாதிரி ஷோலே ரீமேக் பண்ணிடலாம். எல்லாத்தையும் பண்ணாட்டாலும், அந்தக் காயினை மட்டுமாவது ரீமேக் பண்ணி டாஸுக்கு உபயோகப்படுத்தலாம். என்ன, டாஸிலே வின் பண்ணா மட்டும் போதாதுன்றதாலே, இந்த முறையைத் தனியா பயன்படுத்த முடியாது.

முறை மூன்று: Do or Dice முறை

தாயக்கட்டம் ஆடும்போது தாயம் போடாம முன்னேற முடியாது இல்லையா? அதே போல சிக்ஸர் அடிக்கறதுக்கு முன்னே எதிர் டீம் எவ்வளவு ரன் அடிச்சாலும் கணக்குலே சேராதுன்னு ஒரு அமெண்ட்மெண்ட் கொண்டு வந்துடலாம். இந்தியாக்கு அப்ளை ஆகாதுன்னு சொல்லவேண்டியதில்லை.

முறை நான்கு: விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை

என்ன அநியாயம் சார் இது? 2 கோடி ஜனத்தொகை உள்ள ஆஸ்திரேலியாவிலிருந்து 11 பேர்தான் ஆடறாங்க, 110 கோடி உள்ள நம்ம நாட்டிலேயும் 11ஏ பேர்தானா? அவங்களுக்கு 11 பேர்னா நமக்கு 605 பேர், இல்ல நமக்கு11 பேர்னா அவங்களுக்கு 2 பேர் - இதான நியாயமா இருக்கும்? அதே போல பீல்டர், ஒவர் எல்லாத்துலேயும் வி.பி முறைய கொண்டுவந்தா எந்த டீம் நம்ம முன்னாலே நிக்க முடியும்?

முறை ஐந்து: ஜனநாயக முறை

அது என்ன சார்? மூணே முணு அம்பயராம், அதுவும் எதோ பேனலாம் அங்கே இருந்துதான் வருவாங்களாம்! இந்தியாலே நடக்குற அத்தனை மேட்ச்லேயும் எல்லா பார்டர் டெசிஷனும் மக்கள்கிட்டே கருத்துக் கணிப்பு நடத்தி அதன்படி நடந்தாத்தானே ஜனநாயகத்தைக் காப்பாத்த முடியும்? மெட்ராஸ்மாதிரி சில இடங்கள்லே இந்த முறைபேக்பயர் ஆனாலும், ஜம்ஷெட்புர், கல்கத்தாலே யோசிச்சுப்பாருங்க!

நீங்களும் முறைகளை யோசிச்சுச் சேருங்க!

பிற்சேர்க்கைகள்:

podakkudian முறை: என்னை கேட்டால் திமுக விடம் இந்திய அணியை ஒப்படைத்தால் வெற்றி நமதே
உபயம்: உள்ளாட்சி தேர்தல்

சின்னவன் முறை: அப்பிடியே நம்ம அஜீதை ( இது இந்திப் பட வில்லன் அஜீத்) விட்டு ஃபான்டிங்கோட பொண்டாடியையும், மெக்ராத்தின் பிள்ளைகளையும் கடத்த சொல்ல வேண்டியதுதான்.

இலவசக்கொத்தனார் முறை: பாக்கிஸ்தானோட கூட்டணி வெச்சுக்கலாம். ஜெயிச்சா கப்பை எடுத்துக்கிட்டு வந்திடலாம். தோத்தா 'பச்சை' துரோகம் அப்படின்னு கூப்பாடு போடலாம்.

மாயக்கூத்தன் கிருஷ்ணன் முறை: பேசாம நம்ம கைப்புள்ளய ஆட விடலாம்..நன்மைகள் சில

முதல் பால்ல அவுட் ஆனா 'அது போன பால்' அப்படின்னு சாமளிக்கலாம்..

'கிரிக்கெட் விரனுக்கு அழகு சிக்ஸரோ விக்கெட்டோ எடுப்பது அல்ல..எத்தனைதடவை அவுட்டானாலும் கீரிசையும்,டீமிலிருந்து போகமல் இருப்பதுதான்.' அப்படின்னு சவுன்டு விடலாம்.(இது தற்சமயம் உள்ள வீரர்களுக்கும் பொருந்தும்).அதையும் மீறி யாரவது கேட்டால்..
'இங்க பாருங்கப்பா..இவன் எத்தனை பெளன்ஸர் போட்டாலும் நம்ம டிராவிட் மாதிரி உடம்புலயும்,காலிலும் அடி வாங்கி ரொம்ப பொறுமையா இருக்கன்ப்பா' அப்படின்னு ஒருசிம்பத்தி கிரியேட் பண்ணாலாம்..

பெளலர் ஒடி வரும் போது நம்ம கைப்பு பேட்டோ பெளலர நோக்கி ஒடனும்..பெளலர் அதைப் பார்த்து அலறி ஓட நம்ம கைப்புக்கு ரன்னும் கிடைக்கும்,அவுட்டும் ஆகாமல் இருக்கலாம்.

கடைசியா ஒரே வழி கண்டிப்பா எப்பவும் ஜெயிக்கற வழி..பேசாம நம்ம ப ம க(பச்சோந்தி மக்கள் கட்சி) தலையை ஆட விடலாம்..கண்டிப்பா ஜெயிக்கிற கட்சிலதான் இருப்பாரு..

கைப்புள்ளைக்குத் தோனுன கொஞ்சம் கடுமையான, காட்டுத் தனமான ஐடியா - ஆட்டத்துல ஜெயிச்சிட்டு வந்தாத் தான் ராத்திரி சோறு கெடைக்கும்ன்னு ஒரு கண்டிஷன் போடலாம். தோத்துட்டு வந்தா காலையிலயும் மதியானமும் சாப்புட்டதுக்குக் காசைக் குடுக்கனும்னு ஒரு கண்டிஷன் போடனும்(காசு இல்லன்னா பாத்திரம் தேய்ச்சு குடுக்கனும், துணி தோய்ச்சு போடனும்).

Sunday, October 29, 2006

உனக்காக எல்லாம் உனக்காக....

... இந்த வலைப்பூவும் வரும் பதிவுகளும் உனக்காக!!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விபரங்கள் - கேள்வி பதிலாய்.

யார் இந்த விக்கிப்பசங்க?

சில சமயம் நாங்க (பக்கத்துலே Contributorsனு லிஸ்ட் இருக்கு பாருங்க), சில சமயம் நீங்க, எல்லா சமயமும் நாம்.

எதுக்காக இவங்க?

சமையல் பண்றதுலே ஆரம்பிச்சு, கோட் எழுதறது, பதிவு போடறது, பல் தேய்க்கறதுன்னு ஆளாளுக்கு ஆயிரம் சந்தேகங்கள். இதை யாருகிட்டே கேக்கறது, யாரு பதில் சொல்வாங்கன்னு தெரியாமலேயே தோல்வியை ஒப்புக்கொண்டு விடுகிறோம். சரி பதிவு எழுதாட்டா? அதனால ஒண்ணும் பிரச்சினையில்லைதான், நாடு நாசமாப் போயிடாதுதான். ஆனா பல் தேய்க்காட்டா? சுற்றுப்புற சூழல் பத்தி கவலைப்பட வேணாமா? அதனால தாராளமா எல்லாக் கேள்வியும் கேளுங்க!

எல்லாக்கேள்விக்கும் உங்களுக்கு விடை தெரியுமா?

எங்களுக்கு விடை தெரியாத கேள்வியே இந்த உலகத்திலே கிடையாதுங்க! என்ன, பல சமயம் விடை "தெரியாது"ன்னு இருக்கும். ஆனா, எப்படியாவது நாங்களோ, நீங்களோ தேடிக் கண்டுபிடிச்சு விளக்கிடுவோம்.

யார் பதிவு போடுவாங்க?

நீங்களும் போடலாம். கேள்விக்குத்தான் விடைன்னு இல்லாம, கேள்வியும் நானே, பதிலும் நானேன்னு ஒரு பதிவை உருவாக்கி எங்களுக்கு அனுப்பினீங்கன்னா அதை ஒரு முறை பார்த்துட்டு உங்க பேரோட பதிப்பிச்சிருவோம். பின்ன,ஆரஞ்சு ஜூஸ் குடிக்கறது எப்படின்னு ஆறுகோடித் தமிழர்களும் கொத்தனார்கிட்ட கேட்டாங்களா என்ன?

எப்படி கேள்வி கேக்கறது?

எப்படி வேணும்னாலும் கேக்கலாம். அதுக்காக ____ வலைப்பதிவருக்கு கிறுக்கு பிடித்தது எப்படி?ன்ற மாதிரி தனிநபர் சம்மந்தப்பட்ட கேள்வியக் கேட்டு எங்களைக் கஷ்டப்படுத்தாதீங்க. நகைச்சுவையான பதிலை வரவழைக்கற மாதிரி கேள்வியா இருந்தாலும் சரி, சீரியஸான பதிலை வரவழைக்கிற கேள்வியா இருந்தாலும் சரி - wikipaiyan AT gmail DOT com என்ற முகவரிக்கு தட்டி விடுங்க. உடனடியா கேள்விய போஸ்ட் பண்ணிடுவோம். விடை தெரிஞ்சவங்க, அல்லது கலாய்க்கிறதுன்னு முடிவு கட்டிட்டவங்க, போஸ்ட் ஆன கேள்விக்கு பதிவின் உரலைக் குறிப்பிட்டு பதில் போட்டிங்கன்னா அதையும் உடனடியா பதிஞ்சிடுவோம். (24 மணிநேரமும் எங்க ஆளுங்க வலையிலே உலாவிகிட்டு இருப்போமில்ல!)

பதில் யாரு சொல்லலாம்?

கேள்வி சம்மந்தப்பட்ட துறையாளர்களிடம் இருந்து, கூகுளாண்டவர் கிட்டே நேர்ந்துகிட்டு, எங்க கொஞ்ச அறிவைப் பயன்படுத்தி நாங்க பதிலை வாங்க முயற்சி செய்வோம். அதே நேரத்தில படிக்கறவங்களுக்கு இந்த விஷயத்திலே வெளிச்சத்தை தூக்கிப் போடமுடியும்னு நம்பிக்கை இருந்தா அவங்களும் எழுதலாம்.

பதில் சொல்றதுக்கு எதாச்சும் வரைமுறை இருக்குதுங்களா?

பெரிசா ஒண்ணும் கிடையாதுங்க. கலாய்க்கிற பதில்னா அதை ஒரு மூலையிலே குறிப்பிட்டுடுங்க.. அதைத் தனியா கட்டம் கட்டி போட்டுடுவோம். ஆனா சீரியஸான பதில்னா, எங்கே இருந்து பதில் வந்துதுன்னு ஒரு ஆதாரம், ஒரு சுட்டி, ஒரு நன்றி குறிப்பிட்டு வைக்கிறது உத்தமம். நன்றி கெட்டவங்கன்னு நம்மளை யாரும் நாக்கு மேலே பல்லைப்போட்டு சொல்லிடக்க்கூடாது பாருங்க.

"நமக்குத் தெரிஞ்ச விஷயம் மத்தவங்களுக்குத் தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்குத் தெரிஞ்சது நமக்குத் தெரியாம இருக்கலாம். அறிவு பகிர்வதால் கூடும்"அவ்வளவுதாங்க இந்த வலைப்பூவின் நோக்கம்.

எங்களுடைய வேலைன்னு பார்த்தா கேள்விகளை வாங்கறதும் பதில்களை வாங்கறதும் பதிப்பிக்கறதும் மட்டும்தான். இது ஒரு பொது வலைப்பூ.

இதன் வெற்றி, தோல்வி உங்க கையிலதான், சரி, உங்க கீ போர்ட்டில்தான் இருக்கு. மறந்திடாதீங்க.

Thursday, October 26, 2006

ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது எப்படி?

வெளிநாடு வாழ் மற்றும் வெளிமாநிலங்களில் தத்தம் சொந்த ஊரைப் பிரிந்து வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ஆண்களைப் போலவே நானும் ஆரம்ப காலங்களில் சரியான சாப்பாடு இல்லாமல் திண்டாடியிருக்கிறேன். வீட்டில் இருந்த வரைக்கும் வெங்காய சாம்பார், மோர்குழம்பு, அவியல், உருளைக்கிழங்கு ரோஸ்ட் என்று புகுந்து விளையாடிவிட்டு திடீரென்று வீட்டிற்கு வெளியே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் சமாளிப்பது மிக கடினம். அதுவும், நம் வீட்டில் இருந்தவரைக்கும் முந்திரி பருப்பு இன்னவகையற திருடித் தின்பதற்கு தவிர சமையல் அறை பக்கமே காலடி எடுத்துவைக்காமல் இருந்துவிட்டு நாமே சொந்தமாக சமைக்கவேண்டும் என்பது பெரிய இடிதான். பாட்டிகள் இருந்துவிட்டால் போதும், நிலைமை இன்னும் மோசம்.. "நல்லாருக்கு! ஆம்பிளைப் பசங்களுக்கு சமையல்கட்டுல என்ன வேலை"ன்னு discriminate பண்ணி வெளியே துரத்திவிடுவார்கள்.

இந்தியாவில் வேறு மாநிலத்திற்கு செல்வோர் நிலைமை ஒரு வகையில் பரவாயில்லை. ஏதொ ஒரு மெஸ்-ஸோ ஒன்றையோ கண்டுபிடித்து விடலாம். வெளிநாட்டில் வாழவோர்க்கு பிரச்சனைகள் சொல்லி மாளமுடியாது. மூன்று வேளையும் மெக்டோனால்ட்ஸில் சாப்பிட முடியுமா? கட்டுபடியாகுமா? அப்படியே ஆனாலும் மார்கன் ஸ்பர்லாக் போல் ஆவோமா என்று பயம் வேறு வரும். ஒரே நக்கட்ஸும், பிக் மாக்கும் எத்தன நாள் சாப்பிட முடியும்? சரி, இதெல்லாம் சரிப்பட்டு வராது, நாமே சமைக்கலாம் என்றால் வெண்டக்காயை நுனி உடச்சு வாங்கணும், தக்காளி அமுக்கிப் பாத்து வாங்கணும்கறது போன்ற ட்ரேட் ரகசியங்கள் தெரியவில்லையென்றால் தொலைந்தோம். சரி, அப்படியே ஏதாவது ஒரு காய்கறி வாங்கி மீனாட்சி அம்மாளின் 'சமைத்து பார்' வைத்து ஒப்பேத்தலாம் என்றால் அவர் குறிப்பிடும் வீசை, ஆழாக்கு போன்றவற்றிற்கெல்லாம் நிகழ்காலத்தில் equivalents இல்லை.

அப்போ? என்னதான் வழி? இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று. புதிதாய் நாம் இருக்கும் நாட்டிற்கு குடியேறிய தம்பதிகளுக்கு உதவுவதாய் சொல்லி அவர்கள் வீட்டிலேயே காப்பி உட்பட மூன்று வேளையும் கொட்டிக்கொள்வது.

இன்னொன்று சுயமாக சமையல் கற்றுக்கொள்வது. சமையல் என்பது ஒன்றும் பிரம்ம வித்தை இல்லை என்பதை உணர்த்தவே ஒரு குறிப்பை சொல்ல ஆசைப்படுகிறேன். இந்த ரெசிபி எந்த காண்டினெண்டிலும், எந்த குக்கிராமத்திலும் செய்யலாம். ஏனென்றால், மூலப்பொருள் எல்லா இடத்திலேயும் பாகுபாடின்றி கிடைக்கும். சரி, விஷயத்திற்கு வருவோம். இரண்டுவகை இன்ஸ்டண்ட் பசி மறக்கடிக்கும் ரெசிபிக்கள் இருக்கின்றன. அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட் சென்று ஒரு கிரேட் வாங்கிக்கொள்ளூங்கள். கார்ல்ஸ்பெர்க், ஹைனக்கென் என்று பலதரப்பட்ட பசி நிவாரணிகள் இருந்தாலும் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை கண்டுபிடிப்பதற்கு ஆரம்ப காலத்தில் சில சோதனைகள் செய்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு இருபாட்டில்கள் என்பது சராசரி அவரேஜ். ஒரு கிரேட் வாங்கினால் ஒரு 2 நாட்களுக்கு பசியிலிருந்து விடுதலை.

என்ன வெட்டி குறிப்பு கொடுத்து டபாய்க்கிறன்னு பாப்பவங்களுக்கு, இதோ உருப்படியான குறிப்பு. அதே சூப்பர் மார்க்கெட்டில் பழரச செக்ஷனுக்குப் போனீர்களானால், 2 லிட்டர் ஆரஞ்சு ஜூஸ் கிடைக்கும். அந்த பாக்கெட்டை பத்திரமாக வீட்டிற்கு எடுத்துவந்து (காசுகொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் சாமர்த்தியம்) ஒரு டேபிளின் மேல் செட் செய்து கொள்ளவும். பத்திரமாக டெட்ராபாக்கை பிரித்து ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட/மூன்று நாள் முந்திய கிளாஸ் எடுத்து அதில் ஒரு 500 மில்லி ஊத்தவும். மிக ஜாக்கிரதையாக வாயருகில் கொண்டு சென்று அருந்தவும். பாதி கிளாஸ் குடித்து முடித்தபின் ஏன் முதல்வகை பசிநிவாரணி வாங்கவில்லைன்னு சுய இரக்கம் வரும். பெரும்பாலான ஆண்களுக்கு வரும் உணர்ச்சிதான் இது, அதனால் பதட்டப்பட தேவையில்லை. எவ்வளவு ஜூஸ் வேணுமோ குடித்து முடித்து, மூடி பிர்ட்ஜுக்குள் வைப்பது நலம். கொஞ்சம் adventurous ஆன வாசகர்கள் ஜ்ஸ் பாக்கை சரியாக மூடாமல் டேபிள் மேலேயே முன்று நாட்கள் வைத்தால் ஆரஞ்சு சுவையுடன் கூடிய mushroom ஜுஸும் கிடைக்கும். ஒரே கல்லில் ரெண்டு மாங்கா.

இந்த ஆரஞ்சு ஜூஸ் குடித்துவிட்டு தூக்கம் வரவில்லையென்று சொல்வோர் மேற்சொன்ன முதல்வகை நிவாரணிகளை பரிட்சித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

பாஸ்தா செய்வது எப்படி?

இத்தாலிய உணவு வகைகள்னாலே பீட்ஸாவுக்குத் தான் மவுசு ஜாஸ்தி. பாஸ்தாவின் மேன்மை இன்னும் நம்மூரில் அவ்வளவா தெரியவில்லை. பாஸ்தா இருக்கு பாருங்க. அருமையான சமாச்சாரம் இது. தினமும் சாதமே சாப்பிட்டு போரடிச்சு போச்சுன்னா, நூடுல்ஸ் தின்னு அலுத்துப் போச்சுன்னா பாஸ்தா பகவான் இருக்கவே இருக்கார். இதை எனக்கு அறிமுகப்படுத்தியது அண்டோனியோ கார்லுச்சியோன்னு ஒரு செப் தான். பிபிசியில வருவார். என்னவோ எதோன்னு இருந்த என் பயத்தை போக்கி, பாஸ்தாவின் மேன்மையை உணர்த்தியவர். அப்புறம் இன்னொரு கடவுள் டீலியா ஸ்மித். இவங்க பிபிசி ப்ரைம்ல வருவாங்க.

பாஸ்தாவில நிறைய வகைகள் இருக்கு. ஸ்பாகெட்டி, மாக்கரோனி, பென்னி, ரென்னின்னு. எல்லாம் அடிப்படையில ஒரே மாவால ஆனதுன்னாலும், கலரிலும், வடிவங்களிலும் வித்தியாசங்கள் இருக்கும். சேமியா மாதிரிதான் என்றாலும் ஸ்பாகெட்டில கீரை, முட்டைன்னு பல வகைகள் இருக்கு. கொழுப்புச் சத்து குறைவானது பாஸ்தா என்பது டயட்டர்களின் கவனத்திற்கு. கொஞ்சம் கஷ்டமான சமாச்சாரம். அதை இப்போதைக்கு விட்டுடுவோம்.

பாஸ்தா வரலாறுன்னு பாத்தீங்கன்னா இத்தாலிக்கு கிழக்கிலிருந்து திரும்பிய மார்க்கோ போலோ தான் அறிமுகம் செஞ்சார். ஆனா, நாலாவது நூற்றாண்டிலேயே பாஸ்தா மாதிரியான உணவுப் பண்டம் இருந்து வந்திருக்குன்னும் சொல்றாங்க. இத்தாலியில் வீடுகளில் அவர்களே ப்ரெஷ்ஷா மாவு பிசஞ்சு, பாஸ்தா செய்வதற்கேவென்று அச்சு இயந்திரங்கள் மூலமா அந்த மாவிற்கு வடிவங்கள் எல்லாம் செய்வாங்க. இதெல்லாம் நமக்கு ஒத்துவராத விஷயம். ரெடிமேட் பாஸ்தாக்கள் எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கும். அதில இந்த மாக்கரோனி பாஸ்தா செய்யறது ரொம்ப சுலபம்.

சரி, இப்போ இந்தியனைஸ்ட் வெஜ் மாக்கரோனி வித் சீஸ் அண்ட் டொமேட்டோ சாஸ்

கேக்கவே ஏதோ exotic உணவோட பேர் மாதிரி இருக்குல்ல? இத நீங்களும் சமைக்கலாம். இருபது நிமிஷம் போதும். என்னென்ன தேவை?

1. மாக்கரொனி பாஸ்தா - 1 பாக்கெட் (பொதுவா 500 கிராம் இருக்கும்)
2. பீஸ்களா வெட்டி உறைய வைக்கப்பட்ட காய்கறிகள் (பீ.வெ.உ.வை.கா) - என்ன வேணா போட்டுக்கலாம் (பிராக்கோலி, காலிப்ளவர், காரட், கார்ன், பட்டாணி, மஷ்ரூம் இப்படி) இதுவும் 500 கிராம் இருந்தாப் போதும்
3. பூண்டு - இது ரொம்ப முக்கியம். நாலஞ்சு பல் தேவைப்படும். தோல உரித்துவிட்டு ஒரு மீடியம் சைஸ் பல்லை ரெண்டு அல்லது மூன்று பீஸ்களாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்
4. தக்காளி பேஸ்ட்
5. எண்ணெய், உப்பு
6. மசாலா - இந்தியனைஸ்டுன்னு சொல்லிருக்கோமே. பிஷ் மசாலா, சிக்கன் மசாலா என்று உங்களுக்கு தோணினது எதுவேணா
7. காரப்பொடி
8. சீஸ் - சிறிய துண்டு தனியாக வாங்கி ஸ்டிரிப்ஸாக வெட்டி வைத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் நான் செய்வது பிரெட்டிற்கு தடவ கிடைக்கும் சீஸ் ஸ்ப்ரெட். இதுதான் பெஸ்ட்.

அவ்வளவுதான். இனி ஆரம்பிக்கலாமா?

அடுப்பு பத்தவைக்கணும், பாத்திரத்தை வைக்கணுமெல்லாம் சொல்லப் போறதில்ல. அதனால, ஒரு பெரிய பாத்திரத்தில் பாஸ்தா பாக்கெட்டை மொத்தமாக கவுத்துடுங்க. கொஞ்சூண்டு எண்ணெய் ஊத்தி நல்லா மிக்ஸ் பண்ணிக்குங்க. இது எதுக்குன்னா பாஸ்தா ஒட்டிக்காம இருக்க. எவ்வளவு பாஸ்தா இருக்கோ அதுக்கு ரெண்டு மூன்று அளவு தாராளமா தண்ணீர் விடுங்க. அடுப்பு பத்தவெச்சாச்சா? குப்பத்தொட்டியில தூக்கிப்போட்டிருப்பீங்களே காலி பாஸ்தா பாக்கெட். அதை எடுத்து எத்தன நேரம் வேகவிடணும்கரத பாருங்க. அநேகமா 7-9 நிமிடங்கள் போதும். 10 நிமிஷத்திற்கு மேல் வேகவெச்சா சவசவன்னு ஆயிடும். அதனால அதுக்குமேல வேகவிடாம பாத்துக்கணும்.

இப்ப சாஸ். கொஞ்சூண்டு எண்ணெய் ஊத்தி அதில நாலு காஞ்ச மிளகா வேணுமுன்னா போட்டுக்கலாம். மிளகா தாளிச்சு முடிஞ்சோன்ன பீ.வெ.உ.வை.கா-களை போடுங்க. கொஞ்சம் ஜாக்கிரதை. காய்கறிகளை முன்னாடியே "thaw" செய்யணும்னு அவசியமில்லை. அதனால் கொஞ்சம் படபடவென்று வெடிக்கும். அதப் பாத்துட்டுகிட்டே ஒரு 5 நிமிஷம் இருங்க. நேத்திக்கு சாப்பிட்டு வெச்ச தட்டையெல்லாம் இந்த நேரத்திலே அலம்பலாம். அஞ்சு நிமிஷம் ஆச்சா? இருக்கற மசாலாவெல்லாம் வகைக்கொன்னுன்னு ஒரு சின்ன டீஸ்பூன் அளவு போட்டு காரப்பொடியும் உப்பும் வேனுங்கற அளவு சேத்துக்குங்க. உப்பு எப்பவுமே ஒரு டீஸ்பூன் அளவு கொஞ்சமா போட்டுட்டு சாப்பிடும் போது சேத்துக்கறது நல்லது. நல்லா மிக்ஸ் பண்ணிட்டு மூடி வெச்சுருங்க.

இதுக்குள்ள பாஸ்தா வெச்சு குறிப்பிட்ட 7-9 நிமிடங்கள் ஆச்சுன்னா, அடுப்ப அணைச்சிடலாம். அடுப்ப ஆரத்தழுவச் சொல்லல. ஆப் பண்ணிடுங்கன்னு சொன்னேன். அப்படியே கொஞ்ச நேரத்திற்கு பாஸ்தா பத்தி மறந்துடுங்க.

சாஸுக்கு திரும்ப வருவோம். மசாலாவெல்லாம் நல்லா மிக்ஸ் ஆகி கமகமன்னு வாசனை வருதுன்னா, உடனே தக்காளி பேஸ்ட் போட்டு ஒரு அரை நிமிஷம் கிளறிட்டு எவ்வளவு சாஸ் வேணுமோ அவ்வளவு தண்ணி ஊத்திடுங்க. உள்ளுக்குள்ள ஊத்திக்கிட்டீங்கன்னா சாஸ் திசைமாறிப்போயிடும். அதனால, சாஸுக்கு மட்டும் ஊத்துங்க. நிறைய சாஸ் பண்ணலாம்னு ரொம்பவும் கொட்டக்கூடாது. அப்புறம் ரசம் தான் மிஞ்சும். ரெண்டு மூணு கப் அளவு பொதுவா போதும். திரும்பி மூடி வெச்சுடுங்க. ஒரு கொதி வந்தவுடனே, நறுக்கிவெச்ச பூண்ட சேத்துடணும். அஞ்சு நிமிஷம் வெயிட். இதோ முடிவுக்கு வந்தாச்சு. சீஸ் ஸ்ப்ரெட் இருக்கே அத நல்லா மூணு நாலு ஸ்பூன் அளவு போடுங்க. ஒரு ரெண்டு நிமிஷம் பொறுமையா இருந்தா சீஸ் அழகா உருகி மிக்ஸாகும். ரசமா இருந்தது கெட்டியா சாஸ் ஆகும். ஒரு கிளறு கிளறினா ரெண்டு நிமிஷத்தில இறக்கிடவேண்டியதுதான்.

சரி, இப்ப பாஸ்தான்னு ஒன்னு பண்ணோமே, நியாபகம் வருதா? அந்த பாத்திரத்திற்கு மூடி போட்டு, தண்ணிய மட்டும் கொட்டிடுங்க. கொஞ்சம் wet ஆக வெறும் பாஸ்தா மட்டும் இருக்கும்.

எப்படி சாப்பிடறது? ரெண்டுத்தையும் சாதம், குழம்பு மாதிரி சாப்பிடும் போது மிக்ஸ் பண்ணி சாப்பிடலாம். இல்லைன்னா சாம்பார்சாதம் மாதிரி சாஸ் பண்ணி முடிச்சோன்னவே ரெண்டத்தையும் ஒன்னா சேத்து premix பண்ணிடலாம். உங்களுக்கு எப்படியோ, அப்படி சாப்டுக்கலாம்.

கொத்து பரோட்டா செய்வது எப்படி?

சென்ற வாரம் ஒரு நாள் சப்பாத்தியும் சாதமும் அலுத்துப் போச்சு. வேறேதாவது செய்யலாமே என சொல்லப்போக, வந்தது வினை. நீங்களே செய்யுங்களேன் என சீறிப் பாய்ந்தது ஒரு ஏவுகணை. நுணலும் தன் வாயால் கெடும் (சிலேடை எல்லாம் இருக்குங்க) என நொந்துகொண்டே என்ன செய்வது என யோசித்து பிரிட்ஜை குடையும்போது முன்பு வாங்கி வைத்திருந்த குளிருறைக்கப்பட்ட (அதாங்க frozen) பரோட்டா பாக்கெட் ஒன்று கண்ணில் பட்டது. சரிதான் இதை வைத்து எதாவது செய்யலாம் என முடிவு பண்ணி கையில் கிடைத்தவையெல்லாம் போட்டு செய்த பதார்த்தம்தான் கொத்ஸு பரோட்டா. நாங்க சாப்பிட்டோம் நல்லா இருந்தது, பக்கத்து வீட்டு நண்பர் கோபி வேற வந்து சூப்பரா இருக்குன்னு உசுப்பேத்தி விட்டுட்டார். ஆகவே மக்களே உங்களுக்காகவே கொத்ஸு பரோட்டா செய்முறை. நல்லா இருந்தா இங்க வந்து சொல்லுங்க, நல்லா வரலைன்னா உங்களுக்கு செய்யத் தெரியலை. என்கிட்ட மீண்டும் எப்படி செய்யணும்ன்னு கேளுங்க. சொல்லித்தரேன்.

முதல்ல என்ன வேணும்ன்னு ஒரு லிஸ்ட் போடுவோமா?

  • Frozen பரோட்டா - 1 பாக்கெட்.
(இது கிடைக்காதவங்க பக்கத்து ஹோட்டலில் வாங்கிட்டு வந்திருங்க. அப்படி நாந்தான் பண்ணுவேன்னு அடம் பிடிக்கறவங்க எப்படி செய்யணும்னு இணையத்தில் தேடிப் பார்த்து பண்ணிக்குங்க.)
  • வெங்காயம் - 2 (கொஞ்சம் பெரிய சைஸ்)
  • தக்காளி - 1 (இதுவும் பெருசுதான்)
  • முட்டை - 3 (சைவப் பார்ட்டிகள் இதை சாய்ஸில் விடவும்)
  • இஞ்சி / பூண்டு - சுவைக்கு ஏற்ப. (பேஸ்ட் கிடைத்தாலும் பரவாயில்லை.)
  • பச்சை மிளகாய் - 3
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி, மிளகுத்தூள் - ஒன்றொன்றும் 1/2 தேக்கரண்டி
  • கடுகு, உப்பு, பெருங்காயம், எண்ணை - தேவையான அளவு
சமைக்க கிளம்பறதுக்கு முன்னாடி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் எல்லாத்தையும் சின்ன சின்னதா நறுக்கி வச்சுக்கோங்க. முட்டையை உடைச்சு அடிச்சு வச்சுக்கோங்க. பரோட்டாவை சின்ன சின்னதாய் பிச்சு வச்சுக்கோங்க. இப்போ செய்முறை.

  • வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடிக்கவிடவும்.
  • பின் அதில் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • பின் வெங்காயத்தை போட்டு கிளறவும்.
  • அதன் மேல் மேற்கூறிய பொடிகள் அனைத்தையும் போடவும்.
  • வெங்காயம் வதங்கிய பின் பிய்த்து வைத்த பரோட்டாவையும் போட்டு கிளறவும்.
  • அதன் மேல் உடைத்து வைத்த முட்டையை விட்டு மேலும் கிளறவும்.
  • இவை நன்றாக வதங்கிய பின் தக்காளியை சேர்த்து கிளறவும்.
  • அவ்வளவுதான்! சூடா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்.
இதுக்கும் கொத்து பரோட்டாவிற்கும் என்ன வித்தியாசம், அது என்ன கொத்ஸு பரோட்டான்னு பேருன்னு கேட்கறவங்களே. கொத்து பரோட்டாவில் சால்னா விடணும் அது இல்லைன்னா செய்யறது கொத்து பரோட்டாவே இல்லைன்னு மதுரைக்காரய்ங்க வைவாய்ங்க. அதனாலதான் இந்த பேரு.